Wednesday 10 October 2012

ஆறாம் திணை - 08



ரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான் 'நைட் வாட்ச்மேன்’. அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?
 ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும். இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது சரி; சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது... உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம். . பாரம்பரிய சிறுதானியமான கேழ்வரகில் உள்ள சிறப்புகள்பற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் கிருஷ்ண பிரசாத் கேழ்வரகைப் பற்றிச் சொல்லும் தகவல்கள் பிரமிக்க வைக்கின் றன.
''கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக்கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது'' என்கிறார் கிருஷ்ண பிரசாத்.
அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம் (பார்க்க அட்டவணை). பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு. ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.
குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும். ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள - மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு - இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ''மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது'' என்றார்கள் அந்த அமைப்பினர்.
ஒரு முறை மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டுக்கு ஒரு  கருத்தரங்குக்காகச் சென்று இருந்தேன். மதிய விருந்தில், தட்டில் பரிச்சயம் இல்லாத பல ஜந்துக்கள் கறி மசாலா வாடை இல்லாமல் கவிழ்ந்துகிடந்தன. கொஞ்சம் பயத்தில் தலை சுற்றிய நிலையில், 'எங்காவது கொஞ்சம் சோறு தென்படுகிறதா?' என்று தேடிப் பார்த்தபோது, ஹாலிவுட்டின் வில் ஸ்மித் மாதிரி இருந்த ஓர் ஆப்பிரிக்க நண்பர், ''இதைச் சாப்பிடுங்க...' என்று ஒரு குவளையில் கஞ்சி கொடுத்தார். இஃப்தார் நோன்புக் கஞ்சி மாதிரி இருந்த அந்தக் கஞ்சியைக் கொஞ்சம் தயக்கதுடன் நான் உறிஞ்சினால், அட, நம்ம ஊர் கேழ்வரகுக் கஞ்சி! 'இது எங்கள் ஊர் தானியம். எங்க பாட்டன் சொத்து. எங்களுடைய சிக்ஸ் பேக் உடம்புக்கும் சிறுத்தை மாதிரி ஓட்டத்துக்கும் இந்தக் கஞ்சிதான் காரணம்' என்று சொன்னார் அந்த நண்பர். கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விலை இல்லாத ஊட்ட தானியமான இது தான் இன்று வரை வறுமை யில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உணவு. இன்றைய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகளப் போட்டிகளில் வில் எனப் பறக்கும் வேகத்துக்கும் கேழ்வரகின் கால்சியமும், அதில் உள்ள அமினோ அமிலங் களும்கூட காரணம் என்றால் அது மிகை யாகாது.
கேழ்வரகில் 'மித்தியானைன்’ எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த 'மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரி தும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றனஆய்வு கள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?
 - பரிமாறுவேன்...

தித்திப்பால்!
ஞ்சியில் தொடங்கி தோசை, இட்லி, பொங்கல், அடை, புட்டு, இடியாப்பம், களி, கூழ், ஊத்தாப்பம் வரை கேழ்வரகில் சமைக்கலாம். சரி, விசேஷமாக ஒரு அயிட்டம்? கேழ்வரகுத் தித்திப்பால்!
கேழ்வரகை ஊறவைத்து, பால் எடுத்து, அதில் பனைவெல்லம் சேர்த்து கஞ்சி காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சம் நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ் வரகுத் தித்திப்பால். குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்தில் இருந்து உணவில் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகு சாப்பிடுவது சிலருக்கு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கலாம். ஆகையால், கேழ்வரகு உணவுடன் குளுமைக்காக பாலோ, மோரோ, நெய்யோ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது!

No comments:

Post a Comment