Wednesday 8 May 2013

ஆறாம் திணை - 34

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க என்ன திட்டம்வைத்திருக்கிறீர்கள்?
கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்ல வேண்டும் என்று இம்சிக்கும் குடும்பத்தோடு வெள்ளிக்கிழமை கும்பலோடு கும்பலாக, இரைச்சலோடு பயணித்து, வழி எல்லாம் வாந்தி எடுத்து, கெண்டைக்கால் ஆடுசதை, தொடை எல்லாம் வலிக்கும்படியாகப் படகு சவாரி செய்து, பசிக்கு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு, திரும்பும் வழியிலேயே அதை வாந்தி எடுத்து, திங்கட்கிழமை காலை தலைவலியுடன் அலுவலகத்தில் அமரும் தற்போதைய வாழ்வியல்தான் கோடை வாழ்க்கையா? இல்லவே இல்லை!
ஒரு காலத்தில் கோடைக்கு என்றே நம்மவர்களுக்குத் தனி வாழ்வியல் இருந்தது நம்மில் பலருக்குத் தெரியாது.
'முடி கொட்டிரும்; சைனஸ் அடைக்கும்’ எனச் சொல்லி, நம்மில் பலர் கழுத்துக்குக் கீழே, இடுப்புக்குக் கீழே குளிக்கும் கலாசாரத்தில் திளைக்கிறோம். இந்தக் கோடையில் இருந்தாவது குளியல் என்பது நலவாழ்வியல் கூறுகளில் ஒன்று என்பதைப் புரிந்து, அதற்கு ஏற்பக் குளித்துப் பழகுவோம். இரவில் பித்தம் கூடி, சூடாகிப்போன உடலின் சூட்டைத் தணிக்க, இளங்காலையில் தலைக்குக் குளிக்கச் சொன் னது நம் தமிழர் பாரம்பரியம். ஆனால், இப்போது தலை நனையாமல் குளிக்கும் நவீன 'வாட்டர் சர்வீஸுக்கு’ப் பெயர் குளியல் அல்ல. கோடைக் குளியலின் இன்னொரு சிறப்பம்சம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. அது மிக அவசியமானதும்கூட. அந்தக் காலத்தில் நல்லெண்ணெய், முக்கூட்டு நெய், பசு நெய் எனப் பல எண்ணெய்களைத் தலைக்குத் தேய்த்துக் குளித் தனர் நம் முன்னோர்கள். 'எண்ணெய்... நெய்யா..? அந்தப் பிசுபிசுப்பினால் எந்தப் பயனும் இல்லை!’ என்று பேசிய நவீன விஞ்ஞானம்,   'எண்ணெய்க் குளியல் உடலுக்கு நன்மை பயக்கும் பல என்ஸைம்களை, ஹார்மோன்களை உடனடியாகத் தூண்டுகிறது!’ என மருத்துவக் கட்டுரைகளைப் படைத்துவருகிறது. நவீன விஞ்ஞானத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தில், பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஆயில் மசாஜ் செய்யப்படுகிறது. உடம்பு முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து, ஊற விட்டு பம்புசெட்டில் குளித்த காலம் கரைந்தே போய்விட்டது. குறைந்தபட்சம் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாகவேனும் தலையிலும் உடலிலும் நல்லெண்ணெய் தேய்த்து ஷவரில் குளிக்கப் பழகுவோமே!
'எண்ணெய்ப் பிசுக்கை எப்படிப் போக்குவது? ஷாம்பு சரியா?’ என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு என் பதில்... பஞ்சகற்பம்! அது என்ன பஞ்சகற்பம்? சோடியம் லாரல் சல்பேட் ஃபார்மால்டிஹைடு முதலான எந்த வில்லங்க ரசாயனங்களும் இல்லாத மூலிகைக் குளியல் மருந்தே பஞ்சகற்பம். கஸ்தூரி மஞ்சள், மிளகு, நெல்லிப்பருப்பு, வேம்புவித்து, கடுக்காய்த் தோல் சேர்ந்த இந்த மூலிகைக் கலவை கூந்தலுக்கு நலம் பயக்கும் ஷாம்பு கண்டிஷனர் மட்டுமல்ல; உடலின் பித்தம் போக்கும் அருமருந்தும்கூட. முக்கியமான விஷயம் மற்ற சோப்பு, ஷாம்புபோல குளிக்கும்போது சருமத்திலும் பிறகு தரையிலும் விழுந்தோடி நிலத்திலும் நச்சு பாய்ச்சாது.  
நம்மை அழகுபடுத்தவும், மணமூட்டவும், பொலிவாக்கவும் அன்றைக்கே பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பாசிப் பயறு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், கார்போக அரிசி, கருஞ்சீரகம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனத் தூள் இவற்றை ஒன்றாக அரைத்தெடுத்து தயாரிக்கப்படும் நலுங்கு மாவு இன்றைக்கும் சாத்தியமானதுதான். வியர்வை வாடை நீக்கி, தோலுக்கு டியோடரன்ட் டாக கோரைக் கிழங்கு மணம் தரும். கிருமித் தொற்று இருந்தால் தோல் பூஞ்சைக்கு எதிர் நுண்ணியிரியாக, பூஞ்சைக்கொல்லியாக கருஞ்சீரகம் செய்யப்படும். பாசிப் பயறு தோல் வறட்சியைப் போக்கும்!
'நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பார்தம் பேருரைக்கிற் போமே பிணி’- என்பது தமிழனின் நோயணுகா விதி. வெயில்கால பிரிஸ்கிரிப்ஷனாக மட்டும் இந்த சித்தர் வாக்கு அமையவில்லை. வாழ்நாள் எல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய சூத்திரமாகத்தான் சொன்னார். கோடைக் காலத் தில், நீரைச் சுடவைத்தும், மோரை நன்கு நீர் சேர்த்துப் பெருக்கி நீர் மோராக அதிக அளவிலும், நெய்யை உருக்கிக் கொஞ்சமாகவும் சாப்பிட்டால், வியாதி வந்து சேராது என்பது இந்தப் பாடலின் பொருள். ஆம் நண்பர்களே... வெயிலுக்கு நீரும் மோரும் மட்டுமே போதும்.
நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல; உடம் பும்தான்! உடலில் ஒரு சதவிகிதம் நீர்த்துவம் குறைந்தாலே தாகம் எடுக்கும். இரண்டு சதவிகிதத்துக்கு மேல் என்றால் நா வறண்டு தவிக்கும். நான்கரை சதவிகிதத்துக்கு மேல், 'நான் யாரு... எங்கே இருக்கேன்?’ என உளறவைக்கும். ஐந்து சதவிகிதத்துக்கும் மேல் குறைந்தால் மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும். உடலின் இயக்கத்துக்கு இந்த அளவு முக்கியமான தண்ணீரைக் கோடையில் நான்கு லிட்டரேனும் குடிப்பது அவசியம். 'நாங்க ஏ.சி- யில் தூங்கி, ஏ.சி. காரில் போய் ஏ.சி -யில் வேலைபார்த்து ஏ.சி. மக்களுக் காகவே உழைப்பவர்கள். நாங்களுமா தண்ணீர் குடிக்க வேண்டும்?’ என்று கேட்பவர்களே... நீங்கள்தான் அதி அவசியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏ.சி. சூழலில் சருமத்தில் பிசுபிசுப்பாகாது. ஆனால், வியர்வை உடனடியாக உலர்த்தப்படுவதால், நொடிக்கு நொடி நீங்கள் உடலில் நீரினை இழந்து கொண்டே இருப்பீர்கள். கோடையில் கூடுதல் தண்ணீர் குடிக்கவில்லை என்றால், சூடு பிடிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகக் கூடும்.  
வெயிலுக்கு எனக் கூடுதல் பீர் பாட்டிலை வாங்கிவைக்கப் போகிறதாம் டாஸ்மாக். ஓட்டை வால்வுகளைக்கொண்டு அணு உலை அமைக்க முயல்வதைத் தடுக்காத அரசு, பள்ளிக்கூடங்கள் துவங்கும்போது பாடப் புத்தகங்கள் சரிவரக் கிடைக்குமா என்று சோதிக்காத அரசு, 'குடிமகன்களுக்காக’ இவ்வளவு அக்கறைப்படுவது அகில உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி! பீர் சாப்பிடுவதால் உண்டாகும் குளிர்ச்சி நம் உடலில் சேர்வது இல்லை. பீரில் உள்ள ஆல்கஹால் ஈரலைக் குளிர்விக்கும். இதனால் நாளடைவில் அந்த ஈரல் உறைந்து சுருங்கிப்போகும். அதற்கு சிரோசிஸ் என்று பெயர். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலாக உணர்ந்தால்... உஷார்! அந்த நொடியில் இருந்து பீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையெனில், வெகு விரைவிலேயே ஊர் உலகத்துக்கெல்லாம் 'சேதி’ சொல்லியனுப்ப வேண்டியிருக்கலாம்!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment