Wednesday 1 May 2013

ஆறாம் திணை - 33

ஞ்சலியைக் காணோம்’ என்று பரபரப்படைந்த நம்மில் பலருக்கு, 'அரல் கடல்’ ஒன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பது அதிகமாகத் தெரியாது. அரல் என்பது கடல் அல்ல; நிலத்தால் சூழப்பட்ட மிகப் பெரிய அளவிலான ஏரி. மத்திய ஆசியாவில் இப்போதும் இருக்கிறது. ஆனால், '2030-க்குள் முழுவதுமாகக் காணாமல் போய்விடும்’ என்கின்றனர் சூழலியல் அறிவியலாளர்கள்.
அமு தார்யா, சிர் தார்யா என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இந்தக் கடல், 1960-ல் 16 முதல் 68 மீட்டர் ஆழம்கொண்ட 66 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள நன்னீர் ஏரி. அரிசியை இரண்டு போகம் விளைவித்துவந்தது. விளைச்சலை இன்னும் பெருக்க வேண்டும் எனத் தண்ணீரைத் திருப்பி, ஆற்றின் போக்கை நினைத்தபடி எல்லாம் மாற்றியதில் அரல் கடல் வற்றி உப்பு மண்டலமாகிவிட்டது. இப்போது தினசரி 2,00,000 டன் உப்பை சுற்றியுள்ள 400 கி.மீ. நிலப்பரப்பில் காற்று வழியே வீசுகிறது. பாதித் தண்ணீர் வற்றிப்போய், ஆழம் 14 மீட்டருக்கும் கீழே குறைந்துவிட்டது. அரல் கடல் மட்டுமல்ல... நிறைய விஷயங்கள் நம் அட்டூழியம் தாங்காமல் நம்மைவிட்டு அகன்றுவிட்டன. அமெரிக்காவின் புகழ்பெற்ற ராபின் பறவை கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. 1963-ல் உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர் ரேசல் கார்சன் எழுதிய 'சைலன்ட் ஸ்பிரிங்’ நூல், எப்படி ராபின் பறவை டி.டி.டீ. (DDT) பூச்சிக்கொல்லிகளின் வருகைக்குப் பின் உலகைவிட்டுக் காணாமல்போயின என்று வெளிச்சமிட்டுக் காட்டியது. கதைகளில் நாம் படித்து மகிழ்ந்த டோடோ பறவை இப்போது இல்லை. வெண்முதுகுப் பிணம் தின்னிக் கழுகுகள் என்றொரு பறவை இனம் உண்டு. இவை, விலங்குக் கழிவுகளை உண்டு உயிர் வாழும். நாம் ஆடு, மாடுகளுக்கு வலி நிவாரணியாக டைகுளோஃபினாக் சோடியம் கொடுத்ததால், அதன் சதைகளைச் சாப்பிட்டு, நச்சு தாங்காமல் அந்தக் கழுகுகள் வருவதையே குறைத்துவிட்டன. மரபணு மாற்றப்பட்ட பி.டி. சோளத்தில் உள்ள நச்சு, மொனார்க் பட்டாம்பூச்சிகளைக் கொன்று குவித்தது. இப்போது அவை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வேகமாக அழிவு நிலையை எட்டுகின்றனவாம். இன்னும் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மொத்தத்தில், ஒரு பேட்டையில் குடியேறிய தாதா, ஆண்டாண்டு காலமாக அங்கு வசித்த சக ஜீவன்களைக் கொன்று குவித்தோ, அடித்து விரட்டியோ அப்புறப்படுத்திவிட்டது.
மனிதன் வசிப்பது இந்தப் பூமியின் 25 சதவிகிதத்துக்கும் குறைவான பகுதியில்தான். ஆனால், பூமியின் மிச்ச வளங்கள் அனைத்தையும் எந்த அக்கறையும் இல்லாமல் உறிஞ்சி வாழ்கிறோம். அந்த உறிஞ்சலில் அழிந்தவற்றில் 50 சதவிகித உயிர்கள், மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதவை. இனியும் இந்த உறிஞ்சல் தொடர்ந்தால், ''அன்னப்பறவை, கவரிமான், ஃபீனிக்ஸ் பறவைபோல... சிட்டுக்குருவியும் ஒரு கற்பனைப் படைப்பா?'' என்று உங்கள் பையன் கேட்பான்.
'வளர்ச்சிப் பணியில் இதெல்லாம் வாடிக்கைதானே? மக்கள்தொகைப் பெருக்கம், உணவுப் பற்றாக்குறை... என்னதான் செய்வது? சும்மா புலம்பாதீங்க' என அதிகம் படித்த அறிஞர்கள் அலுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் அறிவுரை யில், 2000-ம் ஆண்டில் உலகின் 100-க்கும் மேற்பட்ட ஜனாதிபதிகள், மன்னர்கள், சர்வாதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து, இந்த உலகில் பசியோடு இருப்பவர்களைப் பாதியாகக் குறைத்தாக வேண்டும் என உறுதிபூண்டனர். 13 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை பசி குறைந்தபாடில்லை. கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்கள் தினமும் இரவில் பசியோடுதான்படுக்கைக் குச் செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, தாராளமயமாக்கலுக்குப் பின்னர், ஒட்டுமொத்த உலக வணிகமும் நான்கு மடங்கு உயர்ந்த பின்னரும்கூட, இந்த வறுமையும் பசியும் மட்டும் ஒழிக்கப்படவே இல்லை. இந்தியாவில் 1993-ல் இருந்த சராசரி ஆண்டு வருமானம், 2005-ல் இரு மடங்கான பின்னரும் இங்கே பசிப்புள்ளி எவ்வளவு தெரியுமா? 23. (hunger index நாட்டின் குழந்தைகளின் எடை, ஆரோக்கியம், சிசு மரணம் ஆகியவற்றைவைத்து அளவிடுவது) சில சகாரா பாலைவன ஆப்பிரிக்க நாடுகளைவிட இது அதிகம். தாராளமயமாக்கம் மட்டும்தான் இந்தியாவை மிளிரவைக்கும் எனக் குட்டிக்கரணம் போட்டுப் பேசி, அதைப் புகுத்தி, வறுமையையும் பசியையும் பெருக்கி, பணக்காரன் - ஏழை இடைவெளியை அதிகரிக்க வைத்ததுதான் தாராளமயத்தின் சாதனை. இங்கே பற்றாக்குறைக்குக் காரணம் உற்பத்திப் பிரச்னை இல்லை. பகிர்தல் கிடையாது என்பதுதான்.
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனப் பகிர்ந்துண்ணும் பாரம்பரியம் 2,000 வருடங்களுக்கு முன்பே நம்மிடம் இருந்தது. அது வெறுமனே உணவைப் பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடு அல்ல; இந்தப் பூமியின் இயற்கை வளங்களை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பங்கிட்டுக்கொள்வது. ஆனால், நாம் 'பயோடைவர்சிட்டி’ என்பதை பரீட்சையைத் தாண்டி யோசிப்பது இல்லை. சூழலைக் காக்காமல் பசியைப் போக்க முடியாது. பல்லுயிர் பாதுகாப்பை உடைத்துப் பசியாற்றுவது என்பது வேடிக்கை வசனம். காந்தி சொல்வார், 'எல்லோரின் தேவைக்கு இயற்கை போதுமானது. எல்லோரின் பேராசைக்கு அல்ல’ என்று. ஆனால், பேராசைகொண்ட வணிக உலகத்தின் கிடுக்கிப் பிடியில்தான் இன்று நாம் உழல்கிறோம். ஒவ்வொரு வாய் சோற்றை உண்ணும்போதும், இதற்குப் பின்னால் ஏதோ ஒரு வல்லரசின் ஏகாதிபத்திய சிந்தனை, உள்ளூர் அரசியல் தந்திரம், வணிகச் சூழ்ச்சி, பாலுக்காக அழும் இன்னொரு குழந்தையின் பசி மறைந்திருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment