Wednesday 26 December 2012

ஆறாம் திணை - 17

ங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் எப்போதாவது அணில் குஞ்சு ஒன்று வேகமாக ஓடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? வாசலில் பால் பாக்கெட்டை எடுக்கச் செல்லும்போது, மைனாவின் குரலை எப்போதாவது கேட்டது உண்டா? நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
 சீக்கிரம் அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். நெடுநாள் அவை உம்மோடு வாசம் செய்யப்போவது இல்லை. கூகுளில் மட்டுமே அவற்றைத் தேடிப் பார்க்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரலாம்.
சென்னையில் நாள்தோறும் கொட்டப்படும் 3,000 டன் திடக் கழிவுகளால், 61 வகை நீர்த் தாவர இனங்கள், 110 வகை ஏரியின நீர்ப் பறவை கள், 46 வகை மீன்கள் அழிந்திருக்கின்றன என்கி றார்கள் சூழலியலாளர்கள். யோசித்துப்பாருங்கள்... எத்தனை எத்தனை மரங்களை, வனங்களை, நீர்நிலைகளை, பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஒவ்வொரு நாளும் அழிக்கிறோம் என்று.
இந்த அழிவு மற்ற உயிரினங் களை மட்டும் அல்ல; நம்மையும் தாக்குகிறது. ஆனால், இந்தத் தாக்குதல் மறைமுகமாக நடக்கிறது. தலைவிரித்தாடும் தற்போ தைய டெங்குவுக்கு மூல காரணம், இந்தியாவின் மோசமான குப்பை மேலாண்மை என செவிட்டில் அடித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். நாமோ, குப்பையை மறந்துவிட்டு கொசுக்களைத் துரத்திக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால், எல்லா விஷயங்களையும் தாண்டி ஒரு பக்கம் மாற்றத்துக்கான விதைகளும் தூவப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 'சேலம் மக்கள் குழு’வின் முயற்சி அந்த வகையில்ஆனது.
மே 2010-ல் சேலம் மூக்கனேரி பகுதியில், நெடுங்காலமாக வறண்டு இருந்த ஒரு தாழ்வான பகுதியைச் செம்மைப்படுத்தத் துவங்கி இன்று 4.5 லட்சம் க்யூபிக் லிட்டர் தண்ணீரைக்கொண்ட ஏரியை நிர்மாணித்து உள்ளார்கள் இந்தக் குழுவினர். கிட்டத்தட்ட 7 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர் உயர்ந்திருப்பது கூடுதல் இனிப்புச் செய்தி. 42 வகைப் பறவையினங்கள் இப்போது மூக்கனேரி ஏரியில் வாழ்கின்றன என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பியூஸ் மானுஸ்.
அதேபோல், வேலூர் என்றதும் சி.எம்.சி-யைத் தாண்டி, கொடும் வெயிலும் மொட்டைப் பாறையும்தான் பலருக்கும் நினைவு வரும். கூடுதலாக எப்போதும் உள்ள தண்ணீர் கஷ்டமும். கொஞ்சம் ஆர்வம் மிக்க கல்லூரி மாணவர்களை வைத்து, பேராசிரியர் சீனிவாசன், வேலூர் மலைகளில், சிறிது சிறிதாக 50-க்கும் மேற்பட்ட குளங்களை நிர்மாணித்து, அந்த மாவட்டக் கிராமங்களின் நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி, பறவைஇனங்களின் வாழ்விடத்தை உருவாக்கி, மலையைப் பசுமையாக்கி இருக்கிறார்.
'திம்பக்கு’- சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு. 'தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்துகிறார் களாமே?’ என்று நான் தேடிப் போன ஊர் இது. திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்கவைத்தது. கிட்டத்தட்ட 100 கிராமங்கள், ஏறத்தாழ 30,000 மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியா வின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தபூர்!) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக் கின்றனர் திம்பக்கு மக்கள். ஊரே தினையையும் ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது. அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச் சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலை யில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்.
இத்தனை விவரங்களையும் கேட்டுவிட்டு பஸ் ஏறப் போகும்போது, திம்பக்குவில் பணியாற்றிக்கொண்டு இருந்த நண்பர் ஆசிஷிடம் வியந்துபோய், 'இவ்வளவு விஷயம் செய்திருக்கிறீர்களே, நீங்க எங்க படிச்சீங்க?’ எனக் கேட்டேன். அவர் சொன்ன பதிலில் நான் ஆடிப்போய்விட்டேன். 'உங்க ஊர் சென்னை டி.ஏ.வி-யில் படித்து, பின் பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்து முடித்தேன்!’ என்றார். 'அப்போ அமெரிக்காவெல்லாம் போகலையா?’ என்றபோது, 'சீக்கிரம் நம்ம ஊருக்கு அமெரிக்காவில் இருந்து சாப்பிட வருவாங்க பாருங்க. இப்போதைக்கு நம் ஊரில் வாடி வதங்கும் விவசாயிக்கு எதாவது செய்வோம் எனக் கிளம்பிவிட்டேன்' என்றார், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த அந்தப் பொறியியல் பட்டதாரி. எனக்கு 'மாற்றத்தை விரும்புகிறாயா? மாற்றத்தை முதலில் உன்னில் இருந்து துவங்கு’ எனச் சொன்ன காந்தி நினைவுக்கு வந்தார். குறைகளைக் கண்களில் காணும் ஒவ்வொருவரும் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டிய கணம் இது தோழர்களே!
- பரிமாறுவேன்...

Wednesday 19 December 2012

ஆறாம் திணை - 16

”தினை, கேழ்வரகு, கம்பு என்று சிறுதானியத்தின் சிறப்பைப் பக்கம் பக்கமா எழுதுகிறீர்கள். நெல்லரிசி மேல் மட்டும் உங்களுக்குக் கோபமா டாக்டர்?'' என்று சிலர் கேட்பது உண்டு. அவர்களுக்காக மட்டும் அல்ல; 'நான் டயட்ல இருக்கேன்; சாதம் சாப்பிடறதே கிடையாது' என்று பெருமையாகச் சொல்லத் தொடங்கி இருக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்கும் சேர்த்தே அரிசியைப் பற்றி இந்த வாரம் பேசலாம்.
அளவாகச் சாப்பிட்டால் அரிசியும் அமிர்தம்தான். பாரம்பரிய அரிசி ரகங்கள் வெறும் உணவு அல்ல; அவை மருத்துவ உணவு. 'மணக்கத்தை, வாலான், கருங்குறுவை இந்த மூன்றும் ரணக்க‌ஷ்டச் சில்விஷத்தைப் போக்கும்; சீரகச் சம்பா போகாத வாதமெல்லாம் போக்கும்; குன்றி மணிச்சம்பா கொண்டால் அனிலமறும்'' என்று வகை வகையான அரிசி ரகங்களின் மருத்துவக் குணங்களைப் பட்டியல் இடுகிறது சித்த மருத்துவம். இன்னும் சர்க்கரை வியாதியே அரிசியால் தான் என அரைகுறை அறிவில் பேசுவோருக்கு, ''நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்' எனச் சர்க்கரை வியாதிக்காரருக்கு என்றே ஒரு ரகத்தைச் சொல்கிறது நம் தமிழர் பாரம்பரியம். குள்ளக்கார் அரிசியில் இட்லி தோசையும் மாப்பிள்ளைச் சம்பாவில் மத்தியானச் சாப்பாடும் சாப்பிட்டுப் பாருங்கள்... அன்று முதல் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள் அடிமையாகிப்போவீர்கள்.
பாரம்பரிய அரிசி ரகங்கள் பல, 'லோ கிளைசிமிக்’ தன்மை கொண்டன. நிறைய நார்கொண்டவை. கறுப்பு, சிவப்பு நிறங் களைத் தரும் 'ஆந்தோசயனின்’ எனும் நிறமிச் சத்து கொண்டவை. சீனாவில் சிவப்பரிசியில் இருந்து அதன் 'லைகோபின்’ நிறமியைப் பிரித்தெடுத்து, புற்றுநோய்க்குத் துணை மருந்தாகத் தருகிறார்கள். பெல்ஜியத்தில் உடைத்த குருணைகளை உலகெங்கும் வாங்கி அதன் ஸ்டார்ச்சைப் பிரித்து எடுத்து ஏராளமாக உணவியல் கூறுகள் உற்பத்திசெய்கிறார்கள்.
ஆனால், இங்கே பிரச்னை என்னவென்றால், இன்றைய தலைமுறையினருக்கு எது நல்ல அரிசி - அதாவது, நம்முடைய பாரம்பரிய அரிசி ரகங்களின் சிறப்பு என்ன - என்பதே தெரியாததுதான்.
இன்றைக்கு எல்லாம் நாம் அரிசி அரிசி என்று கொண்டாடும் பட்டை தீட்டி, சீவிச் சிங்காரித்த வெள்ளை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடையே கிடையவே கிடையாது. அன்றைக்கு ஏறத்தாழ 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிடையே இருந்ததாக அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா சொல்வார். அப்போதைய பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன் விளைச்சல் தருமாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, ''உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கித்தான் ஆக வேண்டும்' என்று அதுவரை வேளாண் கலாசாரமாக இருந்ததை வேகவேகமாக வேளாண் தொழிலாக மாற்றின புதுத் தொழில்நுட்பங்கள். அப்போது இந்தோனேஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும் கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட் டதுதான் 'ஐ.ஆர்.8’ ரக அரிசி. விளைச்சலில் 2.5 டன்னுக்கு மேல் மகசூல் வந்தவுடன் உலகமே இந்த புதுப் படைப்பைக் கொண்டாடியது. இப்படியே கொஞ்ச நாட்களில் மேலும் மேலும் பல ரகங்கள் வந்தன. நம்முடைய பாரம்பரிய ரகங்களை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்தேவிட்டபோதுதான், அவர்களுக்கு ஒரு விஷயம் உறைத்தது. புதிய ரகங்களுக்குத் தேவைப்பட்ட ரசாயன உரச் செலவும், புதுசு புதுசாக இந்தப் பயிரைத் தேடி வந்த பூச்சி புழுக்களும் விவசாயத்தையே ஓட்டாண்டி ஆக்குவது. 'அடடா! பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லையே என்று நினைத்தவர்கள் ஏராளம். ஆனால், அதற்குள்ளாக வணிகப் பிடிக்குள் பலமாகச் சிக்கிக்கொண்டது அரிசிச் சந்தை. கலப்பின அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கின்றன. வயிற்றுப்பசி போக்க இவை வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா என்பது புரியாமலே அரிசி என்றால், இன்றைக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத் தொடங்கிவிட்டோம்.
நம்முடைய பாரம்பரிய அரிசி ரகங்கள் பெற்றிருக்கும் மருத்துவக் குணம் ஒரு பக்கம் என்றால், மண்ணுக்கேற்ற, அங்கு நிலவும் மழை, தட்பவெப்பத்துக்கேற்ற எல்லாச் சூழல்களுக்கும் ஈடுகொடுப்பதில் அவற்றுக்கு உள்ள இயல்பு இன்னொரு பக்கம் அசரவைக்கக் கூடியது. களர் நிலத்துக்கென்றே 'களர்பாளை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும் வீட்டுக்குக் கூரையாகவும் பயன்பட சிறப்பு வைக்கோலையும் சேர்த்துத் தரும் குள்ளக்கார் ரகம். ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கு என்றே விளையும் நீலஞ்சம்பா. சில நேரங்களில் படகில் சென்று, அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத் திருக்கிறோம். லேசான தூறலுக்கே குடை சாய்ந்து, இன்றைய உழவனை மண்ணுக்குத் தள்ளும் உயர் விளைச்சல் ரகங்கள் அல்ல அவை. இன்னும் பூச்சி புழு தாக்காத தமிழகத்தில் மட்டும் விளையும் ஏறத்தாழ 38 வகை ரகங்களை இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் பட்டியல் இடுகிறது.
வாரத்துக்கு ரெண்டு மூணு நாள் பாரம்பரிய அரிசியில் உணவு, மற்ற நாளில் சிறுதானியச் சோறு எனச் சாப்பிட்டால், பயமுறுத்தும் பல நோய்களின் இறுக்கமான பிடியில் இருந்து வேகமாக வெளிவர முடியும்.
''கேட்க ரொம்ப நல்லாயிருக்கு சார்... எங்கே இவை கிடைக்கும்?'' என்போருக்கு, ஒரு விஷயம்... கூகுளில் போய்ச் சொடுக்கினாலோ, கால் சென்டரில் கூப்பிட்டுச் சொன்னாலோ வீடு தேடி அவை வரும் நிலை இன்னும் இங்கே உருவாகவில்லை. ஆனால், ஊருக்கு ஊர் ஆங்காங்கே பாரம்பரிய உணவு தானியக் கடைகள் உருவாகிவருகின்றன. அவற்றை விற்கும் சமூக அக்கறை உள்ள பலரில், ஏதேனும் ஓர் ஊரில் இந்தத் தொழிலில் இருக்கும் ஒருவரைப் பிடித்தால், உங்கள் ஊர்ப் பக்கம் எங்கே இவை கிடைக்கும் என்பதை சொல்லிவிடுவார். நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால், நிச்சயம் கண்டறிய முடியும்... கொஞ்சம் மெனக்கெடுங்கள்!
- பரிமாறுவேன்...

Wednesday 5 December 2012

ஆறாம் திணை - 15

பிள்ளை, பிறந்ததும் அழவில்லை; சில மாதம் கழிந்தும் தவழவில்லை. மழலை மொழி பேசவில்லை. வயதுக்கு உரிய மன வளர்ச்சி இல்லை என்றால், நமக்கு மனம் எப்படி வலிக்கும்? கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கேரளத்தின் ஒரு பகுதியான வயநாடு ஊரில் மட்டும் மன வளர்ச்சியற்று இருக்கின்றனர். வழக்கமாகச் சந்தேகிப்பதுபோல, நெருங்கிய உறவுக்குள் திருமணமோ, மூளைக்காய்ச்சலோ இதற்குக் காரணமாக இல்லை. அங்கே ஏலக்காய்க்கும் முந்திரிக்குமான விவசாயத்துக்குத் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்’ பூச்சிக்கொல்லிதான் இதற்குக் காரணம்.
 பூச்சிக்கொல்லியின் கதை இப்படி என்றால், உரத்தின் கதை வேறு ரகம். சமீபத்தில் பஞ்சாப் அதிர்ந்தது. காரணம்? 11 கிராமங்களில் ஏராளமாகி இருக்கும் புற்றுநோய் பாதிப்புகள். நிலத்தடி நீரில் உலக சுகாதார மையம் நிர்ணயித்த அளவைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாகக் கலந்திருக்கும் யுரேனியமே இதற்குக் காரணம் என்று தெரியவந்தபோது, 'பஞ்சாப்பில் எப்படியப்பா தண்ணீரில் யுரேனியத் துணுக்குகள்?’ என்று பாபா அணு சக்திக் கழகம் ஆய்வுக்கு வந்தது. பாசுமதி பயிருக்காக அங்கு நிலத்தில் ஏராளமாகக் கொட்டப்படும் உரங்களே மண்ணுக்கு அடியில் உள்ள கிரானைட் கற்களுடன் சேர்ந்து வளர்சிதை மாற்றம் அடைந்து, தண்ணீரில் யுரேனியம் கசிவுக்கு வழிவகுத்து இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.
பெருகிவரும் தொற்றாநோய்க் கூட்டத்துக்குச் சிதைவடைந்த வாழ்வியல் மட்டும் காரணம் இல்லை. இந்த மண்ணையும் நம் அன்றாட உணவு தரும் தாவரத்தையும் ரசாயன உரங்களால் விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளால் கெடுத்துவருவதும் மிக முக்கியக் காரணம்.
'அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு’ என மண்ணைக் கெடுக்காது பயிர் செய்து, தாவரத்தின் அடிக் குருத்தை மண்ணுக்கும் அதன் தண்டுப் பகுதியை மாட்டுக்குத் தீவனமாகவும் அதன் நுனியில் இருக்கும் கதிரை மட்டும் தன் உணவுக்கும் பயன்படுத்தியவர்கள் நம் விவசாயிகள். வேப்பம் புண்ணாக்கு, பசுந்தாள் உரம், மாட்டுச்சாணம் எனப் பயிருக்கு உணவிட்டனர் அன்று. நம் நாட்டில் மட்டும் அல்ல; எல்லா நாட்டிலுமே விவசாயம் இயற்கையாகத்தான் நடந்தது. பின்னர் எப்படித் திடீரென்று ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் உள்ளே புகுந்தன? ''இரண்டாம் உலகப் போர் திடீரென நின்றுபோனதில், திகைத்துப்போன ரசாயனத் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்து என்ன செய்வது என வேகமாகத் திட்டமிட்டதில் விளைந்ததுதான் இந்த உரம் என்ற பெயரிலான ரசாயன வணிகம்'' என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
இந்திய அரசு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது. யாருக்கு? விவசாயிகளுக்கு. விவசாயிகள் மூலம் போகும் அந்தப் பணம் எங்கே போகிறது? நூற்றுச் சொச்சம் உர நிறுவனங்களுக்கு. செயற்கை விவசா யத்தின் பின்னுள்ள சங்கதி இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இன்னமும் ஏன் நம் உயிரைப் பணயம்வைத்து யாரோ சம்பாதிக்க வழிவகுக்கும் நவீன விவசாயத்தின் வாலைப் பிடித்து அலைய வேண்டும்? மாறக் கூடாதா?
இந்த விஷயத்தில் விவசாயிகள் மாற்றத்தின் முதல் படியில் காலடி எடுத்துவைத்துவிட்டார்கள். அடுத்த படி நாம் எடுத்துவைக்க வேண்டியது. எப்படி?
முதல் விஷயம்... மேக்கப் போட்ட புஷ்டிவாலாக்கள் மாதிரி காய்கறிகளை எதிர்பார்க்காதீர்கள். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் பளபளப்பாக இராது; புஷ்டியாகத் தெரியாது. ஆனால், சத்து மிக்க சுள்ளான்கள் அவை.
இரண்டாவது விஷயம்... சற்றே அவை விலை கூடுதலாகத்தான் இருக்கும். காரணம், இயற்கை விவசாயம் கொஞ்சம் கூடுதல் செலவாகும். 'இயற்கைக் காய்கறி என்றால், பலரும் வெறும் மாட்டு மூத்திரம், சாணி, வேப்பம் தழைதானே... அதுக்கெதுக்குக் காசு அதிகமாகப் போகுது?’ எனத் தவறாக நினைக்கிறார்கள். உரத்தைத் தவிர, மற்ற அனைத்துக்குமான செலவு விவசாயிக்கு எப்போதும்போல் அதிகம்தான். மானியத்தில் பெறும் ரசாயன உரம் ஒரு சட்டி தேவைப்படும் இடத்துக்கு, இயற்கை உரம் என்றால், ஒரு டிராக்டர் அளவு தேவைப்படும். வண்டிக் கூலி, ஆள் கூலி எல்லாம் இருக்கிறது. இன்னொரு விஷயம், தினம் சிக்கனமாக மலிவு விலையில் ரசாயன உணவை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, டாக்டர் ஃபீஸிலும் மருந் துச் செலவிலும் பின்னாளில் சொத்தை அடமானம்வைப்பது எந்த வகையில் புத்தி சாலித்தனம்?
மூன்றாவது விஷயம்... நீங்களே பயிர் செய்யலாம். 60 சதுர அடி நிலமோ, பால்கனியோ, மொட்டை மாடியோ இருந்தால் நீங்களும் விவசாயிதான். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, தக்காளி, கத்தரி, வெண்டை, கொத்துமல்லி, பச்சை மிளகாய் என வீட்டுத்தொட்டியில் உங்க ளால் விளைவிக்கக் கூடிய காய்கறிப் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். பூச்சி புழு வந்தால் எனக் கேட்போருக்கு, இஞ்சி, பூண்டு அரைத்துத் தெளியுங்கள், அதுவே போதுமானது. உரம்? பயிர் ஊக்கம் பெற்று சத்தான காய்கறி தர, மண் வளம் பெற, மோர் கரைத்து ஊற்றுங்கள்; அதில் உள்ள லாக்டோபாசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கூட்டம், ஒரு சூப்பர் இயற்கை உரம் என்கின்றன ஆய்வு முடிவுகள். அப்புறம் என்ன, களத்தில் இறங்க வேண்டியதுதானே?  
- பரிமாறுவேன்...

Wednesday 28 November 2012

ஆறாம் திணை - 14

ந்தியாவின் முக்கால்வாசி மரணங்களுக்கு, சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட தொற்றாநோய்க் கூட்டம் காரணமான பிறகு, உணவில் எல்லோரையும்  அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!
''மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க. அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய். இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.
தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து எள். 'கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான், 'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது சித்த மருத்துவம். அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய் அல்ல நண்பரே... மருந்து!
நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.
அதேபோல, 'அதிகக் கொழுப்பு அமிலம் உள்ளதப்பா’ என அநியாயமாக ஓரங்கட்டப்பட்ட அமிழ்தம் - தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புத்தன்மைகொண்ட லாரிக் அமிலம், இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் உள்ளது. அதன் அற்புதங்களை உணர்ந்த 'வணிக விஞ்ஞானிகள்’ தேங்காய் எண்ணெயில் இருந்து 'மோனோலாரின்’ எனும் பொருளைப் பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிமை பெற்று, மாரடைப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு மருந்தாக விற்கின்றனர். ஆனால், நம் உள்ளூர் மருத்துவர்களோ, 'தேங்காயா... ம்ம்ஹூம்... ஆகவே ஆகாது’ என்று சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
நெல்லின் சத்தான பகுதியான தவிட்டில் இருந்து பெறப்படும் தவிட்டு எண்ணெய் நல்ல விஷயங்கள் பலகொண்டது. ஜப்பானியரில் பெரும்பான்மையர் இன்றும் உபயோகிப்பது தவிட்டு எண்ணெய்தான். தேவையான அளவுக்கு அத்தனை நல்ல கொழுப்பு அமில வகையறாக்களுடன் இதயத்துக்கு நன்மை பயக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள்கொண்ட இந்த எண்ணெய் உள்ளூர் சரக்கு. ஆனாலும், பெரும் உயரத்துக்கு இன்னும் வரவில்லை.
ஆனால், கசக்கிப் பிழியாமல், 'ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல் வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம், அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து புண்ணாகி வரும் 'மங்குனி எண்ணெய் வகையறாக்கள்’ ஆன ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள் விற்பனையில் பின்னி எடுக்கின்றன.
இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன?
பசுமைப் போராளி வந்தனா சிவா சொல்லும் உறையவைக்கும் உண்மை என்ன தெரியுமா?
'சூரியகாந்தி, சோயா எண்ணெய் வகைகளைக் களம் இறக்கும் வணிகப் போட்டியில் அமெரிக்காவால் திட்டமிட்டுக் கழுத்தறுக்கப்பட்டதுதான் நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகளின் சந்தை!'
எண்ணெய் ஒரு மாபெரும் சந்தைப் பொருள். பல நூறு ஆண்டுகளைக் கடந்த நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகள் இன்றைக்கு நொண்டி அடிக்கக் காரணம், எண்ணெ யைச் சுற்றி இருக்கும் சந்தை அரசியல் தான். 'ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது’ என்று கூவுகிறார்களே, ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானதுதான். ஆனால், அதன் விலை என்ன; நம் ஊர் நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெயின் விலை என்ன? நம் ஊர் செக்கில் ஆட்டிய எண்ணெயே ஆரோக்கியமாக இருக்கும்போது, நாம் ஏன் வெளிநாட்டு ஆலிவ் ஆயிலை இறக்குமதி செய்து 10 மடங்கு விலை கொடுத்துச் சாப்பிட வேண்டும்? இது தான் கேள்வி. சரி, இந்த நிலை அப்படியே தொடர்ந்தால் என்ன ஆகும்? உள்ளூர் சோடா போய்... கோக், பெப்ஸி வந்த கதைதான் உருவாகும்.
லுவான இதயத்துக்குக் கொஞ்சம் தவிட்டு எண்ணெய், கொஞ்சம் நல்லெண்ணெய், கொஞ்சம் தேங்காய்எண்ணெய் கலந்து அளவுடன் கொஞ்சமாகப் பயன்படுத்துங்கள் என்கிறார்கள் இதய நோய் வல்லுநர்கள். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், ஒமேகா-3, ஒமேகா-6 எல்லாவற்றையும் இந்த எண்ணெய் வகைகளே உங்களுக்குத் தரும். அதே சமயம், சில குறிப்புகளை மட்டும் மனதில்வையுங்கள்.
அதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட எண்ணெயை நீண்ட நேரம் வறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள். தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் இந்தப் பிரிவு.
குறைந்த புகை எண் கொண்ட எண்ணெயை (றீஷீஷ் sனீஷீளீமீ ஜீஷீவீஸீt) மிளகாய்ப் பொடிக்கு, சாலட் சீசனிங்குக்கு ஊற்றிச் சாப்பிடுங்கள். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் இந்தப் பிரிவு.
 எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவோடு பயன்படுத்துங்கள். அதேபோல், வறுக்கும்போது, எவ்வளவு நேரம் வறுக்கிறீர்களோ... அந்த அளவுக்குக் கொழுப்பு அமிலம் அதிகம் உருவாகி உங்கள் ரத்தம் இதயம் எல்லாவற்றையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!
- பரிமாறுவேன்...

Wednesday 21 November 2012

ஆறாம் திணை - 13

மிழ்ப் பாரம்பரிய சமையல் கலையை ஒரு தவம்போல் நேசித்த செஃப் ஜேக்கப் கடந்த வாரம் இறந்தது பலரையும் உலுக்கி இருக்கலாம். அதில், எல்லோரையும் அதிர்ச்சி அடையவைத்தது அவருடைய வயது... 38. தன் உடலைக் கச்சிதமாகக் கவனித்துக்கொண்டவர்தான் ஜேக்கப். ஆனாலும், எப்படி மாரடைப்பு? வேலையை அளவுக்கு அதிகமாக அவர் நேசித்ததே அவருக்கு எமன் ஆயிற்று என்கிறார்கள் அவருடைய நெருக்கமான நண்பர்கள்.
 உலகெங்கும் இப்போது 30-40 வயதில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது சகஜமாகிவிட்டது.  அலங்காரப் பதவிகளாலும், சம்பள உயர்வுகளாலும் எல்லோரையும் போட்டியாளர்களாக்கி ஓடவைக்கிறது முதலாளித்துவம். வேலை... வேலை என்று ஓடுகிறோம் மூச்சுத் திணற. ஒரு கட்டத்தில் குடும்பத்தையே கவனிக்க முடியாத சூழலை வேலை ஏற்படுத்தும்போது, மன அழுத்தமும் நெருக்கடிகளும் சூழ்கின்றன. மூச்சுத் திணறலோடு மூச்சடைப்பும் சேரும்போது கதை முடிந்துவிடுகிறது. ஒரே ஓர் உண்மையை மனதில் வையுங்கள் தோழர்களே... வாழ்வதற்காகத்தான் வேலை. வேலைக்காக வாழ்க்கை இல்லை!
தேன்... கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்பு. வெள்ளைச் சீனியைத் தொலைக்க விரும்புவோரின் முதல் தேர்வு. தேனும் இனிப்புதானே என்போருக்கு ஒரு செய்தி. இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக் கூறுகள்கொண்ட அமிழ்தம் அது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தனிச் சிறப்பு. சாதாரணமாக வெள்ளைச் சீனி, புண்ணை அதிகரிக் கும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக தீப்புண்ணுக்கு நல்ல தேன் முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. புற்று நோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
ஒவ்வொரு சீஸனில் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் சமயம், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம் என்கிறது சித்த மருத்துவ மலை வாகட நூல்கள். நியூஸிலாந்தில் உள்ள மனுக்கா தேன், உலகப் பிரசித்தியான தேன். 100 கிராம் 3,000 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படும் இந்தத் தேன் எங்கள் நாட்டின் அமிழ்தம் என்கிறது அந்த அரசு.
எல்லாம் சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது?
ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி அதாவது 10 கிராம் தேன் எடுத்துக்கொள்ளலாம். தனியாகவும் சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லியோடோ, இஞ்சியோடோ இணைத்தும் சாப்பிடலாம்.  ஆனால், தண்ணீரில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல்பூர்வமானவை அல்ல. ஒரு விஷயம் முக்கியம். அதிக வெப்ப நிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைக்கும். மற்றபடி, தேன் அற்புதம்!    
'சரி, எனக்கு சர்க்கரை வியாதி... நான் தேன் சாப்பிடலாமா?’  என்று கேட்பீர்கள் என்றால், வேண்டாம். கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பினும், அதன் இனிப்பு அளவான கிளைசமிக் லோட் சில வகை தேனில் அதிகம் என்பதால், தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே, சர்க்கரை நோய்க்காரர்களுக்கு ஒரு செய்தி. தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ... எதுவாக இருந்தாலும் சரி... சர்க்கரை வியாதி வந்தால், கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இனிப்பு என்றாலே, தேனும் பனை வெல்லமும்தான் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சின்ன வயதில் இருந்தே சொல்லி வளருங் கள்!
 - பரிமாறுவேன்...

Wednesday 14 November 2012

ஆறாம் திணை - 12

றுத்த முந்திரி, ஏலக்காய் டீ அல்லது டிகாஷன் காபி போன்ற எதுவுமே இல்லாமல், அரசின் உயர்நிலைக் கூட்டம் ஒன்று ஒரு நாள் முழுவதும் நடக்கும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள் அல்லவா? தமிழக அரசின் திட்டக் குழு கடந்த வாரம் நடத்திய கூட்டம் எனக்கும் அப்படித்தான் ஆச்சர்யத்தைத் தந்தது. முழுக்க சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவு களும் சுக்கு காபியும் பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்... சிறுதானியங்களின் மீட்சி, தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தி - பயன்பாட்டை ஊக்குவிப்பது. திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தாஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இதில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார். கூட்டத்துக்கு என்னையும் கூப்பிட்டு இருந்தார் கள். உபயம்: 'ஆறாம் திணை’. பேச்சோடு நிற்காமல், சிறுதானிய விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுப்பது முதல் ரேஷன் கடைகளில் அனைத்து வகை சிறுதானியங்களும்  கிடைப்பது வரையிலான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டால், இந்தக் கூட்டம் ஒரு மறு மலர்ச்சிக்கு வித்திடும். 'ஆறாம் திணை’க்கும் ஓர் அர்த்தம் கிடைக்கும்!
 பால் பொருட்கள் மேல் இந்தியர்களுக்கு இருக்கும் காதல் மேல் மரண அடியாக விழுந்து இருக்கிறது இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொல்லி இருக்கும் செய்தி. இந்தியாவில் விற்கும் பாலில் 70 சதவிகிதம் கலப்படம் என்கிறது அந்தச் செய்தி. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், பாலில் குழாய்த் தண்ணீரில் தொடங்கி சோப்புத் தண்ணீர், யூரியா, ஸ்டார்ச், ஹீபார்மலின் என என்னஎன்னவோ கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... 'பால் சாப்பிட்டால் டாக்டர் செலவு குறையும்’ என்ற பிரசாரமே 'அக்‌ஷய திருதியைக்குத் தங்கம் வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும்’ என்று தங்கம் விற்பவர்கள் செய்யும் உட்டாலக்கடி போலத்தான் என்கின்றன பால் மீதான சமீபத்திய ஆய்வுகள். தாய்ப்பாலுக்குப் பின் மனிதனுக்கு எந்தப் பாலும் தேவை இல்லை என்கின்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள். 'அடடா! அப்படிப் பால் சாப்பிடலைன்னா, கால்சியத்துக்கு எங்கே போவது... புரதம் எப்படிக் கிடைக்கும்?’ என உரத்துக் கேட்கும் மரக்கறி விரும்பிகளுக்கு ஒரு செய்தி... ஒருவேளை உங்களுக்கு நல்ல பால் கிடைத்தால், சித்த வைத்தியம் சொல்வதுபோல, பால் பொருட்களை இப்படிச் சாப்பிடுங்கள்.
நீர் கருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பார் தம் பேருரைக்கின் போமே பிணி. அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை அதிக நீர் சேர்த்துப் பெருக்கியும் நெய்யை நன்கு உருக்கியும் உணவில் சேர்ப்பவன் பெயரைச் சொன்னாலே, நோய் தூரப் போகும்.
உண்மையில், பாலைக் காட்டிலும் பல வகைகளில் உசத்தியானது மோர். மோர் ஒரு 'புரோபயோடிக்’ (Probiotic) பானம். நல்லது செய்யும் பல நுண்ணுயிர்களை மோர் உடலுக்குத் தரும். பால் பிடிக்காதவருக்கும் மோர் பிடிக்கும். புரதம், கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, பி12 எல்லாம் தந்து வயிற்றுப் புண்ணை வராது தடுக்கும்; அடிக்கடி வந்து தொல்லை தரும் வாய்ப்புண்ணுக்கும் முற்றுப்புள்ளிவைக்கும். வயிற்றுப்போக்கு நோய்க்கான சிகிச்சையில் மோர் ஒரு மருந்தும்கூட!
செல்போன் பயன்பாடு தொடர்பாக முக்கியமான ஓர் எச்சரிக்கை வந்து இருக்கிறது. அனுப்புநர்: அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம்.
'செல்போன் கதிர்வீச்சு ஒன்றும் செய்யாது. எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் மாதிரி இது டி.என்.ஏ-வை எல்லாம் சிதைக்கக் கூடியது கிடையாது. போதாக்குறைக்கு, செல்போன் கதிர் வீச்சைக் கட்டுப்படுத்தும் சர்வதேச ஆணையம் (International Commission on Non-Ionizing Radiation Protection) பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்பக் குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும். பயப்பட வேண்டாம்' என்கிற செல்போன் நிறுவனங்களின் பிரசாரத்துக்கு இந்தச் செய்தி உதை கொடுத்து இருக்கிறது.
''செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏ-வை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், செல் திசுக்களை அது சூடாக்கக் கூடும். ஒருவேளை, மூளையில் கட்டி இருந்தால் அதைப் பெரிதாக்கக் கூடும்'' என்கிறது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை. மேலும், ''செல்போனின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்சிதை மாற்றத்தில் மாற்றத்தை உருவாக்குகின்றன. அது நோயாகுமா என இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால், மூளைப் புற்றுக்கட்டி வரக்கூடிய வாய்ப்பு உண்டு'' என்கிறது.
கூடியவரை பேச்சைக் குறையுங்கள். அவசரத் தொடர்புகளுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துங்கள். தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு செல்போனைப் பயன்படுத்துங்கள்.  ஒருபோதும் மொட்டை மாடி சும்மாதானே இருக்கிறது; வாடகைக்கு விட்டால் மாதம் 5,000 ரூபாய் கிடைக்குமே என்று செல்போன் கோபுரங்கள் அமைக்க இடம் கொடுக்காதீர்கள்.
ஏனென்றால், சில சிதைவுகள் உடனுக்குடன்; சில சிதைவுகள் நாளையும் அதன் பின்னும்!
- பரிமாறுவேன்...

Wednesday 7 November 2012

ஆறாம் திணை - 11

த்தனை வாரங்களாக தினை, கேழ்வரகு, நெல்லி, கொய்யா உள்ளிட்ட தமிழர்களுக்கு நெருக்க மாகவும் விருப்பமாகவும் இருந்த உணவு வகைளைப் பற்றிப் பார்த்தோம். இனி, 'கார்ப்பரேட் கலாசாரம்’ நம் வாழ்க்கை முறையில் என்னவெல்லாம் தவறான நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது, அதில் இருந்து தெளிவது எப்படி என்பதைப் பார்ப்போம்...
 'பசித்துப் புசி’ என்பதுதான் தமிழர்களின் உணவுக் கலாசாரம். சாப்பிட்டது நன்கு ஜீரணம் ஆகிய பின்னரே அடுத்த வேளை உணவைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதை, 'மருந்தெனவேண்டா வாம் யாக்கைக்கு’ என்று கூறியதன் மூலம் உறுதிப் படுத்தி இருக்கிறார் வள்ளுவர். ஆனால், இன்றைய நடப்பு?
அரக்கப்பரக்க வேலையை முடித்து ஓடி,கோபத் துடன் காத்திருக்கும் குடும்பத்தைச் சமாதானப் படுத்தி, அகோரப் பசியுடன் ஹோட்டலில் அமர்ந் தால், 'வாட் சூப் டு யூ லைக் டூ ஹாவ் சார்?’ என்பதே பேரரின் முதல் கேள்வியாக இருக்கிறது.
எங்கோ குளிர் தேசத்தில், உடல் உறுப்புகளுக்கு வேலையே வைக்காமல் பொழுதைக் கழித்து, பசி எடுக்காமல்... ஆனால், சாப்பிட வேண்டுமே என்ற சூழலில் பசியைத் தூண்டுவதற்காகக் தயாரிக்கப்பட்ட 'அப்பிடைசர்’தான் சூப்புகள். ஆனால், வேகாத வெயிலில் வெந்து, அலைந்து திரிந்து, பசியோடு வந்து சாப்பிட அமரும் நம்மவர்களும், 'அப்பிடை சர்ல ஆரம்பிக்கிறதுதானே ஐதீகம்’ என்று எடுத்த எடுப்பில் சூப்பை உறிஞ்சுவது... மன்னித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே... இது மிகமிக முட்டாள்தனம்.
ஏற்கெனவே பசித் தூண்டலில் வயிற்றில் ஜீரண அமிலங்கள் நிறைந்து கொதித்துக்கொண்டுஇருக்கும் போது, ரசாயன மூலப் பொருட்கள் நிரம்பிய சூப்பை வயிற்றுக்குள் இறக்குவது என்ன நியாயம் நண்பர்களே? ஆனால், இப்படி எடுத்த எடுப்பிலேயே வயிற்றைப் பதம் பார்ப்பதில்தான் துவங்குகின்றன இன்றைய விருந்துகள்.
முதலில் பழத் துண்டுகள், பிறகு உணவு, இடை யில் ரசம் (அல்லது அது போன்ற சூப்), இறுதியில் கண்டிப்பாக மோர். இதுதான் தமிழர் வாழ்வியலுக் கான உணவுக் கலாசாரம். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது எதைச் சாப்பிட வேண்டும் என்பதோடு, எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கிறது.
விருந்து என்றால், யூனிஃபார்ம் போட்ட சிப்பந்திகள் பரிமாற, ஹோட்டல் மேஜையில் சாப்பிடு வது மட்டும்தானா? பௌர்ணமி வெளிச்சம் வெள்ளமெனப் பொழிய, தென்னை மரத் தாலாட்டுடன் மொட்டை மாடியில் சாப்பிடும் நிலாச் சோறும் விருந்துதான்.
' 'தூரம்’ வந்த பெரியவளுக்கு உளுந்தங்களி செஞ்சு கொடுத் தியா?’, 'அவன் மூஞ்சப் பார்த்தா, சரியா வெளியே போற மாதிரி தெரியலையே, பாலாஸ்பத்திரியில கடுக்காய் லேகியம் வாங்கிக் கொடுத்தியா?’, 'ஏண்டி புதுப் பொண்ணு... 'அவகளுக்கு’ பால்ல முருங்கைப் பூ போட்டுக் காய்ச்சித் தரச் சொன்னேனே... செஞ்சியா?’ - இவை அனைத்துமே நலம் பயக் கும் விருந்துகள்தான்.
சாப்பாடுதான் பசித்துப் புசி. தண்ணீரைப் பொறுத்தவரை தவிக்காவிட்டாலும் குடித்தே ஆக வேண்டும் மக்களே! இரண்டு சதவிகித நீர் இழப்பைக்கூட மனித உடல் தாங்காது. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம்.
'என் அலுவலகம் முழுக்கக் குளிரூட்டப்பட்டது. நாள் முழுக்க நான் அங்குதான் பணிபுரிகிறேன். நானும் அவ்வளவு தண்ணீர் குடிப்பது அவசியமா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஏ.சி. அறையிலேயே அமர்ந்திருக்கும் உங்கள் சருமம் வியர்வையை வெளிக்காட்டிக்கொள்ளாது. ஆனால், வெயிலில் அலைந்து திரிபவர்களைவிட உங்களுடைய கிட்னிக்கு வேலை அதிகம். சருமத்தில் கசியும் வியர்வையை ஏ.சி. காற்று உடனடியாகப் பதப்படுத்தி உங்களை உற்சாகத்திலேயே வைத்திருக்கும். ஆனால், பிசுபிசுப்பு உணர்வு இல்லாமல் உங்கள் உடல் அதிவேகமாக நீர்ச் சத்தினை இழந்துவரும். ஆதலால், குளிர்சாதன அறையிலேயே இருந்தாலும் அடிக்கடி நீர் அருந்துங்கள்.
'ஆபீஸ் டென்ஷன்ல அடிக்கடி என்னால எந்திரிச்சுப் போய் தண்ணி குடிச்சுட்டு இருக்க முடியாது. காலையில எந்திரிச்சதுமே ரெண்டு லிட்டர் தண்ணி குடிச்சா நல்லதுனு நெட்ல படிச்சிருக்கேன்!’ என்றபடி காலை எழுந்ததும் மாங்கு மாங்கென்று தண்ணீரை மண்டுகிறார்கள் பலர். தடாலடியாக இந்தப் பழக்கத்துக்கு மாறுவது உடல்நலத்துக்குக் கேடு.
திடீரென ஒரே நாளிலேயே உங்களால் மாரத் தான் ஓட்டத்தின் முழுத் தொலைவையும் ஓடிக் கடக்க முடியுமா? இரண்டிரண்டு கிலோ மீட்டர் களாக ஓடிப் பழகித்தானே முழு தூரத்தையும் கடக்க முடியும். அப்படிக் கொஞ்சம் கொஞ்ச மாக இரண்டு, மூன்று குவளைகளாக ஒரு லிட்டர் வரை நீர் அருந்துங்கள். அதற்கு மேல் ஒரே நேரத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியம் இல்லை.
உணவு உண்ணும்போது எப்படி நீர் அருந்த வேண்டும்? 'இடையில் குடியாதே... கடையில் மறவாதே’ என்பதே நமது பழக்கமாக இருக்க வேண்டும். உணவு உண்ணும்போது இடையில் குடித்தால் ஜீரண அமிலங்கள் நீர்த்துப்போகும். அதே சமயம், உணவு உண்டு முடித்ததும் சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, நீரோ... மோரோ அருந்தத் தவறாதீர்கள். அதுதான் உங்கள் வயிற்றைப் புண்ணாகாமல் எப்போதும் பாதுகாக்கும்.
- பரிமாறுவேன்...

Wednesday 31 October 2012

ஆறாம் திணை - 10

ரோக்கியமான வாழ்வை நோக்கி, பாரம்பரிய உணவு வகைகளை நோக்கிக் கிளம்பிய நம்முடைய பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறோம். அரிசி, கோதுமைக்கு மாற்றாக இந்த மண்ணில் கிடைக்கும், பல நூறு ஆண்டுகளாக நம்முடைய மூதாதையர் சாப்பிட்டுவந்த  சிறு தானியங்களில் முக்கியமான தானியங்களின் வரிசை இந்த வாரத்தோடு முடிகிறது. அடுத்து வரும் வாரங் களில் என்னவெல்லாம் சாப்பிடலாம், எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பார்ப்போம். பாரம்பரிய சிறுதானிய வகைகள் பட்டியலில் கடைசி வரிசையில் இருக்கும் மூன்று கடைக் குட்டிகளை இந்த வாரம் பார்ப்போம். குதிரைவாலி, வரகு, சாமை!
 வரகரிசி என்று சொன்னதுமே ஒளவையின் நினைவு வருவது தவிர்க்க முடியாதது. 'வரகரிசியும் வழுதுணங்காயும்’ என்ற ஒளவை யின் ருசியான சேர்க்கை இருக்கிறதே... அதைச் சாப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும். (வழுதுணங்காய் என்றால் கத்திரி. ஒளவை வரகுச் சோறு வடித்து, கத்திரிக்காய் காரக் குழம்பு ஊற்றிச் சாப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்).
வரகுக்குக் காரக் குழம்பு சரியான சேர்க்கை என்றால், சாமைக்குத் தயிர் அட்டகாசமான சேர்க்கை. சாமையைஇரண்டாக உடைத்து, சோறாக்கி கெட்டித் தயிர் சேர்த்துச் சாப்பிட் டுப் பாருங்கள். அடடடடடா... சத்தியமாகச் சொல்கிறேன்... தயிர் சாதப் பிரியர்கள் வாழ் நாளுக்கும் சாமைத் தயிர் சாதம்தான் வேண்டும் என்று கேட்பீர்கள்.
எல்லாம் செய்தாயிற்று. குதிரைவாலியை எப்படிச் சாப்பிடுவது? பொங்கல் வையுங்கள் அய்யா. வெண்பொங்கல் ஆக்குங்கள்.  குதிரைவாலி, பாசிப் பருப்பு, மிளகு, இரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வெண்பொங்கல் பொங்கி, நெய்யில் அதை மிதக்கவிட்டு, மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிட்டுப் பாருங்கள். மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேடுவீர்கள்.
சரி, அப்படி என்ன நெல்லரிசி, கோதுமையில் இல்லாத சத்து இந்த வரகு, சாமை, குதிரைவாலியில்? சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் இவற்றில் வடிக்கும் சோறு இணையற்றது. புரதம் அதிகம். இரும்புச் சத்து அதிகம். உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து அதிகம்.
இந்த நார்ச் சத்துபற்றி கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது.
பட்டை தீட்டிய பச்சரிசி, தோல் நீக்கிய கோதுமை மாவில் நாம் அதிகம் இழப்பது நார்ச் சத்து. ஆனால், அதிக உடல் உழைப்பு இல்லாத இந்த யுகத்தில் நமக்கான அதிக தேவை இந்த நார்ச் சத்துதான் என்கிறது இன்றைய உணவு அறிவியல். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. ஆரம்ப காலத்தில், 'நார்ச் சத்து சுவையைக் குறைக்கும். ஜீரணத்தைத் தாமதப்படுத்தும். கொஞ்சம் மலத்தை இளக்கி அனுப்ப வேண்டுமானால் உதவும்’ என்றுதான் நினைத்திருந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து என்கிறது நவீன உணவியல் உலகம். அப்படி என்றால், அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் எவ்வளவு அற்புதமான தானியங்கள்?
   வெறும் சோறு மட்டும் அல்ல; நாம் அரிசி மாவில் செய்யும் அத்தனை தின்பண்டங்களையும் இந்த வரகு, சாமை, குதிரைவாலி மாவிலும் செய்ய முடியும். சென்னை- கொளத்தூரில் இயங்கிவரும் 'பெண்கள் இணைப்புக் குழு’ எனும் அமைப்பு  வரகரிசியிலும் குதிரைவாலியிலும் செய்யும் முறுக்கு, அதிரசம், லட்டு, சுருள் பக்கோடா வகை யறாக்களைப் பார்த்தபோது அசந்தே போனேன். அந்த அமைப்பைச் சேர்ந்த ஷீலுவிடம் பேசியபோது, அவர் சொன்ன ஒரு விஷயம் நாம் எல்லோரும் கவனிக்க வேண்டியது. ''என்னதான் சிறுதானியங்கள் அற்புதமான குணங்களையும் ருசியையும் கொடுத்தாலும், பெரியவர்கள் மூலமாக அவற்றை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுசெல்வது கஷ்டம். காரணம், பெரியவர்கள் பழக்கத்தின் அடிமைகள். ஆனால், சின்னக் குழந்தைகள் அப்படி அல்ல. புதிய விஷயங்கள், புதிய ருசிக்கு அவர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். அதனால், குழந்தைகள் மூலமாக சிறுதானியங் களை வீட்டுக்குள் கொண்டுசெல்வதே சரியான முறை'' என்றார் ஷீலு. உண்மைதான். என் வீட்டில் அரிசி முறுக்கு, அதிரசம் வழக்கொழிந்து ரொம்ப காலம் ஆகிறது. உபயம்: என் வீட்டுப் பொடிசுகள்!
- பரிமாறுவேன்...

Wednesday 17 October 2012

ஆறாம் திணை - 09

"உலகத்தையே தொழில்நுட்பம்தான் ஆள் கிறது. ஆனால், நீங்களோ இன்னமும் இயற்கை விவசாயம், பாரம்பரியச் சாப்பாடு என்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு விரோத மாகவே எழுதுகிறீர்களே டாக்டர்'' என்றார் போன வாரம் தொலைபேசியில் வந்த ஒரு வாசகர். அதிர்ந்துபோனேன் நான். அதிர்ச்சிக்குக் காரணம், என்னைப் பற்றிய விமர்சனம் அல்ல; இயற்கை வேளாண்மை மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பீடு.
 இந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா? வேளாண்மை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. சொல்லப்போனால், செயற்கை வேளாண்மை வந்த பிறகுதான் நம்முடைய தொழில்நுட்ப அறிவு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கப்பட்டது. தவிர, நாம் எல்லாம் நினைப்பதுபோல, வேளாண்மை யில் புதிய விஞ்ஞானத் தொழில்நுட்பம் என்பது, எல்லோருக்கும் உணவு அளிக்கும் நோக்கத்தைப் பிரதானமாகக்கொண்டது இல்லை. அதற்குப் பின் பல்லாயிரம் கோடி ரூபாய் வியாபாரம் இருக்கிறது. சில நூறு முதலாளிகள் பல கோடி விவசாயிகளைச் சுரண்டும் திட்டங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், அவர்களுடைய லாபத்துக்காக விஷத்தை உணவாக நமக்குத் தின்னக் கொடுக்கும் சூழ்ச்சி இருக்கிறது. அதனால்தான், ஓட்ஸுக்கும் மக்காச்சோளத்துக்கும் எதிராக, நம்முடைய கேழ்வரகு, சோளம், கம்பைப் பற்றிப் பேச வேண்டி இருக்கிறது. சரி, இந்த வாரம் கம்பைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா!
சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.
அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு (பார்க்க அட்டவணை).
கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம். அரிசியைக்காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து உள்ள இந்தத் தானியம், வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும். அனைத்துச் சத்துக்களுமே சற்று தூக்கலாக உள்ள இந்த தானியம், வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.
பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.
கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.
இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
- பரிமாறுவேன்...

Wednesday 10 October 2012

ஆறாம் திணை - 08



ரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான் 'நைட் வாட்ச்மேன்’. அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?
 ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும். இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது சரி; சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது... உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம். . பாரம்பரிய சிறுதானியமான கேழ்வரகில் உள்ள சிறப்புகள்பற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் கிருஷ்ண பிரசாத் கேழ்வரகைப் பற்றிச் சொல்லும் தகவல்கள் பிரமிக்க வைக்கின் றன.
''கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக்கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது'' என்கிறார் கிருஷ்ண பிரசாத்.
அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம் (பார்க்க அட்டவணை). பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு. ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.
குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும். ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள - மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு - இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ''மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது'' என்றார்கள் அந்த அமைப்பினர்.
ஒரு முறை மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டுக்கு ஒரு  கருத்தரங்குக்காகச் சென்று இருந்தேன். மதிய விருந்தில், தட்டில் பரிச்சயம் இல்லாத பல ஜந்துக்கள் கறி மசாலா வாடை இல்லாமல் கவிழ்ந்துகிடந்தன. கொஞ்சம் பயத்தில் தலை சுற்றிய நிலையில், 'எங்காவது கொஞ்சம் சோறு தென்படுகிறதா?' என்று தேடிப் பார்த்தபோது, ஹாலிவுட்டின் வில் ஸ்மித் மாதிரி இருந்த ஓர் ஆப்பிரிக்க நண்பர், ''இதைச் சாப்பிடுங்க...' என்று ஒரு குவளையில் கஞ்சி கொடுத்தார். இஃப்தார் நோன்புக் கஞ்சி மாதிரி இருந்த அந்தக் கஞ்சியைக் கொஞ்சம் தயக்கதுடன் நான் உறிஞ்சினால், அட, நம்ம ஊர் கேழ்வரகுக் கஞ்சி! 'இது எங்கள் ஊர் தானியம். எங்க பாட்டன் சொத்து. எங்களுடைய சிக்ஸ் பேக் உடம்புக்கும் சிறுத்தை மாதிரி ஓட்டத்துக்கும் இந்தக் கஞ்சிதான் காரணம்' என்று சொன்னார் அந்த நண்பர். கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விலை இல்லாத ஊட்ட தானியமான இது தான் இன்று வரை வறுமை யில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உணவு. இன்றைய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகளப் போட்டிகளில் வில் எனப் பறக்கும் வேகத்துக்கும் கேழ்வரகின் கால்சியமும், அதில் உள்ள அமினோ அமிலங் களும்கூட காரணம் என்றால் அது மிகை யாகாது.
கேழ்வரகில் 'மித்தியானைன்’ எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த 'மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரி தும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றனஆய்வு கள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?
 - பரிமாறுவேன்...

தித்திப்பால்!
ஞ்சியில் தொடங்கி தோசை, இட்லி, பொங்கல், அடை, புட்டு, இடியாப்பம், களி, கூழ், ஊத்தாப்பம் வரை கேழ்வரகில் சமைக்கலாம். சரி, விசேஷமாக ஒரு அயிட்டம்? கேழ்வரகுத் தித்திப்பால்!
கேழ்வரகை ஊறவைத்து, பால் எடுத்து, அதில் பனைவெல்லம் சேர்த்து கஞ்சி காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சம் நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ் வரகுத் தித்திப்பால். குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்தில் இருந்து உணவில் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகு சாப்பிடுவது சிலருக்கு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கலாம். ஆகையால், கேழ்வரகு உணவுடன் குளுமைக்காக பாலோ, மோரோ, நெய்யோ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது!

Wednesday 3 October 2012

ஆறாம் திணை - 07



ஒரு சந்தோஷமான செய்தியுடன் தொடங்குவோம். இன்னும் கொஞ்ச நாட்களில் மதிய உணவுத் திட்ட சத்துணவு, உண்மையிலேயே சத்தான உணவாகிவிடும். என்ன வார்த்தை விளை யாட்டு இது என்கிறீர்களா? ஆமாம். மத்திய வேளாண் துறை, அனைத்து மாநில அரசு களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி இனி, எல்லா மாநிலங்களும் தங்களுடைய மதிய உணவுத் திட்டத்தில், சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால், நிச்சயம்  ஓர் அமைதிப் புரட்சிதான்.
 உலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49 சதவிகிதத்தினர்; ஊட்டச் சத்துக் குறைவால் வளர்ச்சி தடைபட்டுள்ள குழந்தைகளில் 34 சதவிகிதத்தினர் இந்தியக் குழந்தை கள்தாம். இத்தகைய பின்னணியில், உலகின் மிகப் பெரிய உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியா, சிறுதானிய உணவுகளுக்கு மாறினால், அது எதிர்கால இளைய இந்தியாவை எவ்வளவு ஆரோக்கியமானதாக மாற்றும்? முயற்சி வெற்றி அடையட்டும்!
நம் கதைக்கு வருவோம். 'ஆறாம் திணை’யைப் படித்துவிட்டு என்னைத் தொடர்புகொள்ளும் வாசகர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி... ''டாக்டர், இந்தத் தினை, வரகு, கம்பு, சோளம்... இதை எல்லாம் கஞ்சி வைத்தோ, உருண்டை உருட்டியோதான் சாப்பிட முடியுமா?''
ஒரு சின்ன விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்... இந்தத் தினை, வரகு, கம்பு, சோளம்... இவை எல்லாமே அடிப்படையில் அரிசிபோலத்தான். அந்தக் காலத்தில் தினையரிசி, வரகரிசி என்று அரிசியின் பெயரைச் சேர்த்துதான் சொல்வார்கள். நெல் அரிசி என்பது அப்போதெல்லாம் விசேஷ நாட்களிலோ, பண்டிகை நாட்களிலோ மட்டுமே சமைக்கப்படும் உணவாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லா நாட்களும் நெல் அரிசி சோறுக்கு நாம் மாறிவிட்ட பின்னரே அரிசி என்பது நெல் அரிசியை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. ஆகையால், தினை, வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று கேட்டால், அரிசியில் செய்யும் எல்லாமே செய்யலாம் என்பது தான் பதில்.
தினை இட்லி, சோளப் பணியாரம், வரகுப் புளியோதரை, குதிரைவாலிப் பொங்கல்... இப்படி உங்கள் விருப்பம்போலச் செய்து ருசிக்கலாம். ஒரே விஷயம்... இந்தத் தானியங்களைக்கொண்டு சமையல் செய்யும்போது அவற்றுக்கே உரிய இயல்புக்கு ஏற்ப உப பொருட்கள் சேர்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, சோள தோசை சுடுகிறீர்கள் என்றால், அரிசி அளவுக்கே சோளத்தைப் போட்டால், தோசை முறுகலாக இருக்கும். கொஞ்சம் உளுந்து கூடுதலாகச் சேர்த்துக்கொண்டால், தோசை பதமாக வரும். இந்தக் கூடக்கொறைச்சல் குறைகள் எல்லாம் முதல் இரு தடவைகள் வரலாம். அப்புறம் அப்புறம் நீங்களே நிபுணர் ஆகிவிடுவீர்கள். ஆகையால், தயக்கமின்றிக் கலக்குங்கள்.
சரி, பெருநிறுவன முதலாளிகள் உங்கள் அன்றாட உணவை மாற்றக் கண்டுபிடித்திருக்கும் ஒரு பெரிய சமாசாரத்தைப் பற்றி இந்த வாரம் அலசுவோம். உங்களுக்கு சோளத்துக்கும் மக்காச்சோளத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?
சோளம் என்றால், இப்போதெல்லாம் பெரும்பாலோருக்கு நினைவில் வருவது மக்காச்சோளம்தான். ஆனால், உண்மையில் நம்முடைய பாரம்பரியச் சோளம் அதுவல்ல. சிறு வெள்ளைச்சோளம்தான் நம்முடைய சோளம். புதிய மக்காச் சோளம் உற்பத்தியில் இன்று நாம் உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அது தென் அமெரிக்க நாட்டில் இருந்து வந்த பயிர்தான். வெள்ளைச் சோளம்தான் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும்கொண்டது. நம்ம ஊர் பாரம்பரிய சிறுசோளத்தையும் மக்காச்சோளத்தையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் புழுங்கல் அரிசியையும் கொஞ்சம் உற்றுப்பார்த்து ஒப்புநோக்கினால், பலவகையில் உப்புக்கள், உயிர்ச் சத்துக்கள், நார், கனிமங்கள் என எல்லாவற்றிலுமே சிறுசோளமே உயர்ந்து நிற்கும் (பார்க்க அட்டவணை).
அதிகம் மெனக்கெட முடியாத நம்முடைய காலைப் பொழுது அவசரத்தைப் புரிந்துவைத்திருக்கும் பெருநிறுவனங்கள், மாற்றுக் காலை உணவாகக் கொண்டுவர முனைவது மக்காசோளத்தைத்தான். ஆனால், விளம்பரங்களில் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சோள அவலின் பின்னணியும் அவ்வளவு நல்லதாக இல்லை நண்பர்களே. அதில் ஏகப்பட்ட சத்து இருப்பதாகச் சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்டால்... நான் உங்களிடம் கேட்கிறேன்... அது எப்படித் தயாராகிறது என்று தெரியுமா உங்களுக்கு?
காலை உணவாக இன்று வேகமாகப் புகுத்தப்படும் சோள அவலின் உற்பத்தியை நீங்கள் நேரில் பார்த்தால், அதைச் சாப்பிடுவதே உங்களுக்குச் சங்கடமாகிவிடும். தானியத்தை வெந்நீரில் ஊறவைத்து, 40 டன் எடை கொண்ட ராட்சத இயந் திரங்களால் ஓங்கி ஓங்கி அறைந்து அடித்துத் தட்டையாக்கி, பின் 600 டிகிரி ஓவனில் 30 விநாடிகள் வேகவைத்து, உலர்த்தி எடுத்து, கடைசியாகத் தேவையான வைட்டமின்களையும் மினரல்களையும் தெளித்து, எப்போதும் உலர் வாக இருக்கவும் கெட்டுப்போகாமல் இருக் கவும் ரசாயனங்கள் சேர்த்து, அதிகபட்ச விலை யுடன் சந்தைக்கு அனுப்புகிறார்கள்.
ஒரு தானியம் கஷ்டப்பட்டு தன் குறைந்த வாழ்நாளில் சேமித்த உணவுக்கூறுகளை எல்லாம் இப்படி அடித்து, துவைத்து, காயப்போட்டுவிட்டு, கடைசியாக, செயற்கையாகச் சேர்க்கப்படும் ஊட்டச் சத்துக் கலவையில் என்னவெல்லாம் கலக்கப்படுகின்றன தெரியுமா? யாருக்குமே தெரியாது. யாருக்கும் அதைச் சொல்ல வேண்டியது இல்லை; அது எங்கள் தொழில் ரகசியம் என்கிறார்கள். கூடவே ரசாயனம் வேறு. இதோடு, நம் ஊர் சோளத்தில் செய்யப்படும் இட்லி, தோசையையோ, பணியாரத்தையோ ஒப்பிட்டுப்பாருங்கள். அவற்றின் உன்னதம் புரியும்.
தினம் தினம் இட்லி, தோசை சாப்பிடுவோருக்குச் சோள மாவு இட்லி, தோசை கூடுதல் பயன் அளிக்கும். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். எதையுமே சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைக்கு, சோள தோசையைச் சூடாக, கொஞ்சம் மெலிதாகச் சுட்டுத்தாருங்கள். அதன் மொறுமொறுப்பில், அரிசி தோசையைக் காட்டிலும் அதிகப் புரதம், அதிக இரும்பு, அதிக உயிர்ச் சத்துக்கள், அதிகக் கனிமங்கள் கிடைக்கும். இட்லி, தோசை மட்டுமா? சோளப் பணியாரம் சுவையும் குணமும் நிறைந்த பாரம்பரிய உணவு (பார்க்க: செய்முறை). உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை அதற்கு உண்டு. 'கொஞ்சம் குண்டாக மாட்டாளா சார் என் குழந்தை?' என வருத்தத்துடன் கேட்கும் தாய்மார்கள் இந்தச் சோளத்தில் ஒரு நாள் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லமும் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுங்கள்; ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தையின் உடல் எடை கண்டிப்பாகப் பெருகும்.
ங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப் பவர்கள், சோளத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு எவ்வளவோ சத்துக்களைத் தருகிறது சோளம். குறிப்பாக, எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோராசிஸ் உள்ள பெண்களுக்குச் சோளம் கொடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்துக்கு இணையே கிடையாது.
 - பரிமாறுவேன்...