Wednesday 26 December 2012

ஆறாம் திணை - 17

ங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் எப்போதாவது அணில் குஞ்சு ஒன்று வேகமாக ஓடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? வாசலில் பால் பாக்கெட்டை எடுக்கச் செல்லும்போது, மைனாவின் குரலை எப்போதாவது கேட்டது உண்டா? நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
 சீக்கிரம் அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். நெடுநாள் அவை உம்மோடு வாசம் செய்யப்போவது இல்லை. கூகுளில் மட்டுமே அவற்றைத் தேடிப் பார்க்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரலாம்.
சென்னையில் நாள்தோறும் கொட்டப்படும் 3,000 டன் திடக் கழிவுகளால், 61 வகை நீர்த் தாவர இனங்கள், 110 வகை ஏரியின நீர்ப் பறவை கள், 46 வகை மீன்கள் அழிந்திருக்கின்றன என்கி றார்கள் சூழலியலாளர்கள். யோசித்துப்பாருங்கள்... எத்தனை எத்தனை மரங்களை, வனங்களை, நீர்நிலைகளை, பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஒவ்வொரு நாளும் அழிக்கிறோம் என்று.
இந்த அழிவு மற்ற உயிரினங் களை மட்டும் அல்ல; நம்மையும் தாக்குகிறது. ஆனால், இந்தத் தாக்குதல் மறைமுகமாக நடக்கிறது. தலைவிரித்தாடும் தற்போ தைய டெங்குவுக்கு மூல காரணம், இந்தியாவின் மோசமான குப்பை மேலாண்மை என செவிட்டில் அடித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். நாமோ, குப்பையை மறந்துவிட்டு கொசுக்களைத் துரத்திக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால், எல்லா விஷயங்களையும் தாண்டி ஒரு பக்கம் மாற்றத்துக்கான விதைகளும் தூவப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 'சேலம் மக்கள் குழு’வின் முயற்சி அந்த வகையில்ஆனது.
மே 2010-ல் சேலம் மூக்கனேரி பகுதியில், நெடுங்காலமாக வறண்டு இருந்த ஒரு தாழ்வான பகுதியைச் செம்மைப்படுத்தத் துவங்கி இன்று 4.5 லட்சம் க்யூபிக் லிட்டர் தண்ணீரைக்கொண்ட ஏரியை நிர்மாணித்து உள்ளார்கள் இந்தக் குழுவினர். கிட்டத்தட்ட 7 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர் உயர்ந்திருப்பது கூடுதல் இனிப்புச் செய்தி. 42 வகைப் பறவையினங்கள் இப்போது மூக்கனேரி ஏரியில் வாழ்கின்றன என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பியூஸ் மானுஸ்.
அதேபோல், வேலூர் என்றதும் சி.எம்.சி-யைத் தாண்டி, கொடும் வெயிலும் மொட்டைப் பாறையும்தான் பலருக்கும் நினைவு வரும். கூடுதலாக எப்போதும் உள்ள தண்ணீர் கஷ்டமும். கொஞ்சம் ஆர்வம் மிக்க கல்லூரி மாணவர்களை வைத்து, பேராசிரியர் சீனிவாசன், வேலூர் மலைகளில், சிறிது சிறிதாக 50-க்கும் மேற்பட்ட குளங்களை நிர்மாணித்து, அந்த மாவட்டக் கிராமங்களின் நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி, பறவைஇனங்களின் வாழ்விடத்தை உருவாக்கி, மலையைப் பசுமையாக்கி இருக்கிறார்.
'திம்பக்கு’- சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு. 'தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்துகிறார் களாமே?’ என்று நான் தேடிப் போன ஊர் இது. திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்கவைத்தது. கிட்டத்தட்ட 100 கிராமங்கள், ஏறத்தாழ 30,000 மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியா வின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தபூர்!) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக் கின்றனர் திம்பக்கு மக்கள். ஊரே தினையையும் ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது. அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச் சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலை யில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்.
இத்தனை விவரங்களையும் கேட்டுவிட்டு பஸ் ஏறப் போகும்போது, திம்பக்குவில் பணியாற்றிக்கொண்டு இருந்த நண்பர் ஆசிஷிடம் வியந்துபோய், 'இவ்வளவு விஷயம் செய்திருக்கிறீர்களே, நீங்க எங்க படிச்சீங்க?’ எனக் கேட்டேன். அவர் சொன்ன பதிலில் நான் ஆடிப்போய்விட்டேன். 'உங்க ஊர் சென்னை டி.ஏ.வி-யில் படித்து, பின் பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்து முடித்தேன்!’ என்றார். 'அப்போ அமெரிக்காவெல்லாம் போகலையா?’ என்றபோது, 'சீக்கிரம் நம்ம ஊருக்கு அமெரிக்காவில் இருந்து சாப்பிட வருவாங்க பாருங்க. இப்போதைக்கு நம் ஊரில் வாடி வதங்கும் விவசாயிக்கு எதாவது செய்வோம் எனக் கிளம்பிவிட்டேன்' என்றார், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த அந்தப் பொறியியல் பட்டதாரி. எனக்கு 'மாற்றத்தை விரும்புகிறாயா? மாற்றத்தை முதலில் உன்னில் இருந்து துவங்கு’ எனச் சொன்ன காந்தி நினைவுக்கு வந்தார். குறைகளைக் கண்களில் காணும் ஒவ்வொருவரும் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டிய கணம் இது தோழர்களே!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment