Wednesday 24 April 2013

ஆறாம் திணை - 32

லையும், காடும், கடலும் இல்லை என்றால் நாம் யாரும் இல்லை. இயற்கையும் மனித குலமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறது. ஆனால், 'ஐஸ் உருகுதாமே, ஓசோன்ல ஓட்டையாமே, கடல் பெருகுதாமே, மழைக் காலம் மாறுதாமே’ என ஏதோ 'விஸ்வரூபம்’ ரிலீஸ் மாதிரியே இயற்கைச் சீரழிவுகளையும் பேசிக் கலைகிறோம். இதன் பின்னணி உண்மை களையும் அபாயத்தின் பரிணாமத்தையும் என்றேனும் ஆராய்ந்து அறிந்தது உண்டா நாம்?
'ஒரு மனிதனுக்கு அரை ஹெக்டேர் காட்டு நிலம்’ - இதுதான் ஓர் ஆரோக்கியமான இயற்கை சமநிலையைப் பேணும் நாடுகளில் இருக்க வேண்டிய விகிதம். இது உலகிலேயே மிகக் குறைந்த அளவில், ஒரு மனிதனுக்கு 0.08 ஹெக்டேர் காட்டு நிலம் என்பதாக இருப்பது நம் இந்தியா வில்தான். ஐந்து திணைகளில், மலையும் மலை சார்ந்த நிலமும், காடும் காடு சார்ந்த நிலமும் எனப் பெரும் நிலப் பரப்பை மலையுடனும் காட்டுடனும் வைத்திருந்த நம் காடுகளுக்கு என்ன ஆனது? இந்திய நிலப்பரப்பில் 19.27 சதவிகிதம் மட்டுமே காடுகள் இருப்பதாக 1997-ம் ஆண்டு ஆய்வறிக்கை சொல்லு கிறது. அதன் பிறகான இந்த 15 ஆண்டு களில் சூழல் சீர்கேட்டால் இந்த விழுக் காடு இன்னும் சிதைந்திருக்கும் என்பது நிச்சயம்!
உலகில் 12 விதமான உயிர் பன்முகத்தன்மை உடைய ஆச்சர்யமான நிலப்பரப்பு நம்முடையது. அது என்ன உயிர் பன்முகத்தன்மை? அபுதாபி நாட்டில் பேரீச்சை விளையும்; பெப்பர் கிடைக்காது. ருமேனியாவில் ஆப்பிள் விளையும்; தேங்காய் விளையாது. இங்கிலாந்தில் கோதுமை விளையும்; கொய்யாக்காய் வராது. கனடாவில் உருளை வரும்; உள்ளி வராது. ஆனால், இந்தியாவில் இவை அனைத்தும் விளையும். வேறுபட்ட மண் வகைகள், வித்தியாசமான தட்பவெப்பச் சூழல் என நம் நாட்டின் இயற்கைச் சூழல்தான் இதற்குக் காரணம். பூமத்திய ரேகைக்குக் கொஞ்சம் அருகில் இருப்பதால், இந்த உயிர் பன்முகத்தன்மை நமக்குச் சாத்தியமாகிறது. விவசாயப் பாரம்பரியத்தின் மூத்த குடிகளான நம் முன்னோர்களின் பாரம்பரிய அறிவும் இந்தப் பன்முகத்தன்மையில் முக்கியப் பங்காற்றுகிறது. இப்படி காலம் காலமாகக் காத்துவந்த இயற்கைச் சொத்துதான் இப்போது சீரழிந்துகொண்டிருக்கிறது. 'எங்க தாத்தா வெச்சிருந்த சொம்பு; எங்க பாட்டி போட்டிருந்த பாம்படம்; எங்க பரம்பரையே மூணு போகம் விளைவிச்ச பூமி’ என வீட்டுச் சொத்தைப் பாதுகாப்பதில் இருக்கும் அக்கறை பொதுச் சொத்தில் இல்லை. அதனால்தான் ஒரு பக்கம் மிளகு, கிராம்பு, ஏலம்... இன்னொரு பக்கம், மணிச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, தினை, கம்பு, சோளம், குதிரை வாலி... மற்றொரு பக்கம், வெண்கொடிவேலி, சேராங்கொட்டை, கல்தாமரை, சோதிவிருட்சம் என்ற அரிய மூலிகைகள் இருக்கும் நாட்டின் பன்முக வளத்தை இழந்துகொண்டு இருக்கிறோம்.
கங்கை, யமுனை எப்படி உருவாகிறது என்று கேட்டால், இமயத்துப் பனிப் பாறை உருகி ஆற்று நீராகிறது என்று சொல்கிறோம். தாமிரபரணி, காவிரி, துங்கபத்ரா பற்றிக் கேட்டால், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊற்றுக்களில் உற்பத்தியாகி வருவதாகச் சொல்வோம். ஆனால், அந்த ஊற்றுக்குத் தண்ணீர் எப்படி வந்தது? 1,800 மீட்டர் உயரத்தில் அடர்ந்த சோழ மண்டலக் காடுகளின் பசுந்தாவரங்களில் ஒளிந்திருக்கிறது அந்த ரகசியம். வரையாடு முதல் வகை வகையான ஆர்க்கிடுகளுக்கும், அரிய வகை மூலிகைகளுக்கும் அமைதித் தலமாக இருந்துவந்த அந்தக் காடுகள்தான் மழைநீருக்கான கருவறை. கடந்த நூற்றாண்டில் மிக மோசமாக அழிக்கப்பட்டதும் இந்தக் கருவறைதான். 'காபி குடிக்கலைன்னா கழிவறை செல்ல முடியாது’, 'டீ குடிச்சாதான் சிந்தனை சிலிர்க்கும்’ என தமிழரின் தினசரி இயல்புகள் மாறியிருக்கின்றன... மாற்றப்பட்டிருக்கிறோம். அந்தத் தேயிலையையும் காபி யையும் பயிரிட்டு அறுவடை செய்ய, நீலகிரி, ஆனைமலை, பழநி மலைப் பகுதிகளில் இருந்த பெரும் சோழமண்டலக் காடுகள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. அவை யுகம்யுகமாக மனித குலத் துக்கு மழை அமுதம் வழங்கிய சுரபிகள். ஒரு கோப்பைத் தேநீருக்காக அவை வெட்டிவீழ்த்தப் பட்ட வரலாற்றை நாம் மறக்க முடியாது.
எஞ்சிய காடுகளின் ஒரு பகுதியை அணைக்கட்டுகள் விழுங்கின. மிச்சமுள்ள காட்டையும், நீர்வளத்தையுமாவது விட்டுவைத்தார்களா? அதுவும் இல்லை. பெரும் நிறுவனங்களுக்கான தண்ணீர் விநியோகம்குறித்த வெளிப்படையான அறிவிப்பு எதையும் அரசு வெளியிடுவது இல்லை. மக்கள் வறட்சியில் சாக, அரசு தனியார் நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் தண்ணீர் தருகிறது. virtual water எனப்படும் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் அழிக்கும் நீரின் அளவு சொல்லி மாளாது. அதற்கான வெகுமதியாக நீரையும் நிலத்தையும் நஞ்சாக்கிவிட்டு, அடுத்த பசும்பிரதேசம் நோக்கிப் படையெடுக்கின்றன பெரும் நிறுவனங்கள்.
தட்டிக்கேட்டால், 'இது வளர்ச்சி, தவிர்க்க முடியாதது!’ என மானா மூனாவும், பானா சீனாவும் விளக்குவார்கள். என்னதான் விளக்கினாலும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு விளங்கவில்லை. வெளிநாட்டுக்காரன் சேட்டிலைட் விடுகிறான்; அணுகுண்டு தயாரிக்கிறான்; அறிவியலில் ஆயிரம் சாதனைகள் படைக்கிறான். ஆனால், இந்த பனியன், ஜட்டி தயாரிக்கவும், செருப்பு தயாரிக்கவும், துருப்பிடிக்காத நட்டு போல்டு செய்யவும் மட்டும் ஏன் இந்தியாவுக்கு ஓடி வருகிறான்? அவர்களின் பெருமூளை இது போன்ற சிறு விஷயங்களுக்கான நுட்பங்களைக் கண்டறியாதா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
இந்தப் பொருட்களின் உற்பத்தி, இயற்கையைக் காவு கேட்கும். நீர் வளம் கெடும், மண் வளம் நாசமாகும். எதற்கு அதெல்லாம்? அவர்கள் ஊரின் இயற்கையைப் 'பொத்துனாப்ல’ பாதுகாத்துக்கொண்டு, இந்தியாவில் இருப்பதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறார்கள். இதுதான் வளர்ச்சியின் உண்மைக் கதை!  
''பூ பிடிச்சிருச்சும்மா... ஆனா, மேல்மண் காய்ஞ்சு நிக்குது. இன்னும் ரெண்டு நாள்லயாவது தண்ணி வந்துருமா?'' என கால்வாயைப் பார்த்து நிற்கும் காய்கறித் தோட்டக் காரருக்கு மட்டுமல்ல... நம் எல்லோருக்குமே காடும் மலையும் கல்லீரலும் மண்ணீரலும் மாதிரி. மலையும் காடும் இருந்தால் மட்டுமே மழை; மழை இருந்தால் மட்டுமே நதி; நதி இருந்தால் மட்டுமே சமச் சீரான கடல்; அந்தக் கடல் இருந்தால் மட்டுமே நலவாழ்வு!
- பரிமாறுவேன்... 

Wednesday 17 April 2013

ஆறாம் திணை - 31

டாதொடையினால் பாடாத நாவும் பாடும்’ என்று சொன்ன சித்தருக்கு அறிவுசார் சொத்துரிமை பற்றியோ, காப்புரிமை பற்றியோ தெரியாது. இயற்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சியும், சமூக அக்கறையும், சார்பற்ற நிலையும் மட்டும்தான் இருந்தது. அதே ஆடாதொடை இலை Adhatoda vasica எனத் தாவரவியலாளர்களால் அறியப்பட்டு, அதன் தாவரச் சத்து thrombocytopeniaவுக்குப் பயனளிக்கும் என அறிந்த பின்னர், அறிவுசார் சொத்துரிமையும் காப்புரிமையும் வந்துவிட்டது. இப்போது மேற்கு உலகில் ஆடாதொடையின் சத்துக்களுக்கு நூற்றுக்கணக்கான காப்புரிமைகள் வாங்கப்பட்டுள்ளன.
ஒருபக்கம் தனியாக நம் நாட்டு சித்த, ஆயுர்வேத, யுனானி மூலிகைகளையும் மருந்துகளையும், மரபு வழியாக உள்ள அறிவுச் சொத்தையும் யாரும் கபளீகரம் செய்துவிடாதபடி நம் Traditional Knowledge Digital Library (TKDL) பாதுகாக்கிறது. இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேலான மூலிகை மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் கரன்ஸியில் புரளும் கம்பெனிகளோ, 'நாங்கள் உங்க செடியைப் பார்த்ததே இல்லை’ எனச் சொல்லிவிட்டு, அந்தச் செடியின் கூறுகளுக்கு ஆய்வகங்களில் மாறுவேடம் அணிவித்து புதியது போல் காட்டி காப்புரிமை வாங்குகின்றன.
இந்தக் கட்டப்பஞ்சாயத்துக்குச் சமீபத்தில் குட்டுவைத்தது உச்ச நீதிமன்றம். ரத்தப் புற்றுநோய்க்கான நோவார்டிஸ் நிறுவனத்தின் கிளீவாக் மருந்து நீண்ட நாட்களாகச் சந்தையில் இருந்துவந்தது. அதைச் சற்றே மெருகூட்டி, 'இது பழைய மருந்தல்ல... புதுசு’ எனச் சொல்லி, இன்னும் 20 வருடங்களுக்குக் காப்புரிமை கோரியது நோவார்டிஸ். 'இது வெறும் டப்பிங். ரீமேக்கூடக் கிடையாது’ என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்த கிளீவாக் மருந்தைப் பயன்படுத்த மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். வெறும் 8,000 ரூபாய் செலவில் அதே ரத்தப் புற்றுநோய்க்கான உள்நாட்டு ஜெனரிக் மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை ஒழித்துக்கட்டி, அந்தச் சந்தையைப் பிடிப்பதற்காகவே நோவார்டிஸ் முயன்றது. நீதிமன்றம் இதைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், ரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் பேருக்குக் கடும் பாதிப்பு உருவாகியிருக்கும்.
'ஏனப்பா இந்தக் கொள்ளை விலை?’ எனக் கேட்டால், 'உங்களுக்கு என்ன தெரியும்? ஆராய்ச்சிக்கு எத்தனை கோடிகள் கொட்டியிருக்கிறோம்? எப்படி எங்களுக்குக் கட்டுப்படியாகும்? அதனால்தான் இவ்வளவு விலை. முடிந்தால் வாங்குங்கள். இல்லைஎன்றால் செத்துப்போங்கள்!’ என்கின்றன மருந்து நிறுவனங்கள். 1997, 2002-களில் நம் காப்புரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காப்புரிமையை வெகுஜன விரோதப் போக்காக மாற்றிக்கொண்டிருக்கிறது.
உண்மையில் விவசாய மண்டியில், விவசாயியிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளை லாபம் பார்க்கும் வணிகத்தின் வேறு வடிவம்தான் மருந்து நிறுவனங் கள் நடத்தும் காப்புரிமை வணிகமும்கூட. மக்கள் பொதுப் பணத்தில் நடைபெறும் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து, அவர்களின் ஆய்வுகளை விலைக்கு வாங்கி, அதை மருந்துக் கம்பெனிகள் சந்தைப்படுத்துகின்றன. அப்போது, கம்பெனியின் விற்பனைச் சிப்பந்தி குடிக்கும் டீ காசு முதல், மருத்துவரின் வெளிநாட்டுச் சுற்றுலா வரையிலும் ஆகும் அனைத்துச் செலவுகளும் 'ஆராய்ச்சிச் செலவாகவே’ கணக்கிடப்படுகின்றன. இப்படி எல்லாம் கொள்ளை லாபம் அடைவதற்காக விலையை உயர்த்திக்கொண்டே போனால், மக்களுக்கு சாமியார்களிடம் சரணடைவதையும் நோய் முற்றிச் சாவதையும் தவிர, வேறு வழி இல்லை.
காப்புரிமை பற்றிப் பேச ஆரம்பித்தாலே எல்லோருக்கும் மஞ்சளும் வேம்பும்தான் நினைவுக்கு வரும். களவுபோன நம் மரபுச் சொத்தைப் போராடி அதன் காப்புரிமையை மீட்ட கதையைப் பெருமையாகவும் பேசிக்கொள்வோம். ஆனால், அதே சமயத்தில் பாசுமதியைக் காப்பியடித்து உருவாக்கிய டெக்ஸ்மதி அரிசியைப் பற்றி பலருக்கும் தெரியாது. பாசுமதி வேறு; டெக்ஸ்மதி வேறு என்று சொல்லிவிட்டது அமெரிக்கா. இன்னும் கத்தரிக்காய் விதை முதல், கோயம்பேட்டில் உள்ள அத்தனை காய்கறி கள், கொல்லிமலையில் உள்ள அத்தனை மூலிகைகளுக்கும், அதன் கூறுகளுக்குக் காப்புரிமை வாங்கிவைத்துள்ளன பெரும் மருந்துக் கம்பெனிகள். இந்த பேட்டன்ட் யுத்தத்தில் அப்படியே மூலிகைக்குக் காப்புரிமை தராமல் மூலிகையின் கூறு களுக்குக் காப்புரிமை தருவதில் நிறுவனங் களுக்கு வருத்தம்தான். ஒருவேளை அப்படி ஒரு காலம் வந்தால், உங்கள் வீட்டு முற்றத்தில் முளைத்து நிற்கும் துளசிச் செடிக்கு நீங்கள் காப்புரிமை வாங்க வேண்டி வரும்.
பெரும் பன்னாட்டு நிறுவன ஆய்வுகளுக்குத்தான் நாம் காத்திருக்க வேண்டுமா? எங்கே போனது நம் ஆய்வு மனப்பான்மை? முன்னே சென்ற ஆமை யின் வழியில் நாவாய் செலுத்தி நாம் சென்ற கடல் பயணம், வானத்தில் இருந்து வந்த ஒளிக் கற்றையின் வீச்சைக்கொண்டு நாம் கணித்த வானியல், கூவிய பறவையின் ஒலியைக் கண்டு தூறல் வரும் என்று சொன்ன வேளாண் உத்தி, அடி நாக்கின் சுவையினைக்கொண்டு, அந்தத் தாவரத்தின் செய்கையைச் சொன்ன மருந்தியல் அறிவு என எத்தனையோ முன்னோடி அறிவியலைச் சொன்ன நாம், இப்போது ஏன் ஆய்வாளர்கள் ஆவதில்லை? கார்ப்பரேட் தொழிலாளியாக மாற மட்டுமே பயன்படும் இந்த மெக்காலேயின் கல்வி முறை காரணமா? அறம் சார்ந்த வணிகம் சாத்தியப்படாத வணிகச் சூழல் காரணமா? சமூகம்குறித்த சிந்தனை, உளப்பிறழ்வு நோயாக மட்டுமே பார்க்கப்படுவதா? சிந்திப்போம்...
- பரிமாறுவேன்...

Wednesday 10 April 2013

ஆறாம் திணை - 30

கொலை பயத்தைக் காட்டிலும் கொலஸ்ட் ரால் பயம் அதிகம் உள்ள காலம் இது. 'காலில் ஆணி குத்திடுச்சு’ என மருத்துவரிடம் போனால்கூட, 'ஷ§கரும் கொலஸ்ட்ராலும் செக் பண்ணிருங்க’ என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுரை. சர்க்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கான மருந்துகளுடன் கொசுறாக, ஒரு கொலஸ்ட்ரால் மருந்தும் கொடுப்பது மருத்துவ ஐதீகமாகிவருகிறது. ஏன் இந்த கொலஸ்ட்ரால் பயம்? 'பின்னே, மாரடைப்பைத் தடுக்க கொலஸ்ட்ராலைக் குறைக்க வேணாமா? அதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா மாரடைப்பு வந்துவிடுமே, அதைத் தடுக்கத்தான் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள்!’ என்று வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராளம்.
கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும், உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து. அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான். காரணம், மாரடைப்பு நிகழும் 50 சதவிகித மக்களில் அதிக ரத்தக் கொழுப்பு இருந்ததைக் கண்டறிந்த மருத்துவ விஞ்ஞானம், 'கொலஸ்ட்ரால்தான் காரணம்’ என கட்டப்பஞ்சாயத்து பண்ணிவிட்டது. ஆனால், மீதி 50 சதவிகிதத்தினருக்கு கொஞ்சூண்டு கொலஸ்ட்ரால் இருந்ததைக் கவனிக்க மறந்தனரா அல்லது மறுத்தனரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னர், இந்த கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்தில் 30 பில்லியன் டாலர் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உடலில் கொலஸ்ட்ராலின் கால் பங்கு மூளையில் இருக்கிறது. நரம்பு உறையான myelin-லும் இன்னும் ஒவ்வொரு செல் உறையிலும் கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமான பொருள். அன்றாடம் இயல்பாக ரத்தக் குழாய் உட்சுவர்களில் நடக்கும் சிறுசிறு வெடிப்பைப் பட்டி பார்த்து பதமாகவைத்திருக்கும் முக்கிய வேலையை கொலஸ்ட்ரால் செய்கிறது. 'இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை மருந்து கொடுத்து மட்டுப்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனம்?’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் செண்டிரா. சமீபத்தில் சி.என்.என். வெளியிட்ட மருத்துவ ஆய்வு நூலின் ஆசிரியரான அவர் சொல்லும் உண்மைகள் கொஞ்சம் அதிரவைக்கின்றன.
உலகில் தேவையில்லாமல் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் கொலஸ்ட்ரால் குறைக்கும் ஸ்டாட்டின்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. இதனை உட்கொள்வதால் இளமையிலேயே கால் வலி, நரம்பு பலவீனம் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்குப் பயனளிப்பதுகூட, அது கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் அல்ல. அதன் anti-inflammatory செய்கையால்தான் என்கிறார் அவர். ஒரு புண்ணை ஆற்ற, நோயில் இருந்து நம்மைக் காக்க நடக்க வேண்டிய inflammation,, காரணம் இல்லாமல் நடக்கும்போதுதான் மாரடைப்பு முதல் கேன்சர் வரை வருகிறது என்பதுதான் தற்போதைய மருத்துவ விளக்கம். நாம் தவிர்க்க வேண்டியது எண்ணெயை அல்ல... டென்ஷனையும் சோம்பேறித்தனத்தையும் மட்டும்தான்.
மன இறுக்கமும் பரபரப்பும் அடிக்கடி நிகழும்போது இந்தத் தேவையற்ற inflammation நிகழும். ஒரு சின்ன உதாரணம், தெருவில் தனியாக நடந்துவரும்போது ஒரு நாய் விரட்டுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உடல் அதிவேகமாக அட்ரீனலையும், கார்டிசால் சுரப்புகளையும் சுரக்கும். பிற பணிகளை எல்லாம் ஒரு சில நிமிடங்கள் உடல் தள்ளிவைக்கும். நீங்கள் நாயிடம் இருந்து தப்பும் வரையோ அல்லது மருத்துவரைப் பார்த்து வாங்கிய நாய்க் கடிக்கு மருந்து எடுக்கும் வரையோ, இந்த பரபரப்புச் சுரப்பு நல்லபடியாக நடக்கும். ஆனால், நவீன வாழ்வில் நம்மை எப்போதுமே ஏதாவது ஒரு நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது. வேலையில், வீட்டில், சாலையில், சமூகத்தில் என எங்கும் நடக்கும் இந்தத் துரத்தலும் அதற்கான நமது எதிர்வினையும்தான் பெரும்பாலான மாரடைப்புகளுக்குக் காரணம். ஆகவே, மொத்தக் குற்றத்தையும் கொலஸ்ட்ரால் தலையில் சுமத்து வது சரியல்ல.
இந்தியாவிலும் இப்போது பல மூத்த இதய மருத்துவர்கள் இந்தக் கருத்தைப் பேசத் துவங்கிஉள்ளனர். டாக்டர் செண்டிரா கூடுதலாகச் சொன்ன கருத்து, 'தேங்காய் எண்ணெய் இதயத்துக்கு நல்லது’ என்பது. 'அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்’னாக இன்றும் பலரால் பார்க்கப்படுவது அர்த்தமற்றது’ என்கிறார் அவர். இயற்கை தரும் கொழுப்பில் அதிகப் பிரச்னை எப்போதும் கிடையாது. மனிதன் உருவாக்கும் வனஸ்பதி, மார்ஜரைன் (பீட்சா, பர்கர், டோனட், பவ், ஹாட் டாக், சிப்ஸ் இன்னும் பல பேக்கரி ரொட்டி அயிட்டங்களில் சேர்க்கப்படுவது) முதலான எண்ணெயில்தான் trans fat  எனும் மிகக் கெட்ட கொழுப்பு அதிகம். அதை தவிர்த்தே ஆக வேண்டும்.
''அப்படீன்னா... கொழுப்பு கவலை வேண்டாமா?'' என அவசர முடிவு தேவையில்லை. அக்கறை வேண்டும். காலை நடை கட்டாயம். நேரம் இல்லை எனக் கெஞ்சுவோர், வீட்டில் எப்போதோ ஒரு உத்வேகத்தில் வாங்கிப்போட்டு சில வருடங்களாக ஜட்டி, பனியன் காயப்போடும் ஸ்தலமாக மாறிவிட்ட 'ட்ரெட் மில்’ இயந்திரத்தைத் துடைத்து, எண்ணெய் போட்டு, தினமும் 25 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். தினசரி உணவில் நிச்சயமாக வெந்தயம், மஞ்சள், பூண்டு, சீரகத்துக்கு இடம் கொடுங்கள். மாரடைப்பு அபாயத்தை தினசரி மூச்சுப் பயிற்சியால் தடுக்க முடியும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, யோகா பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தித்தான் பாருங்களேன்...
மிக முக்கியமாக மன இறுக்கத்தைக் களைய, வீட்டு வாசலில் செருப்பை விடும்போதே அலுவலகத்தையும் விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் காதுகளில் செல்போன் ஒலிக்க வேண்டாம். குழந்தையின் சிணுங்கலோ, அப்பாவின் முதுமைக் குரலோ ஒலிக்கட்டும். படுக்கையில் உங்கள் மடிக்குச் சொந்தக்காரர் மடிக்கணினி அல்ல. மனைவியோ, கணவரோ மட்டும்தான். ஏனென்றால், இச்சை தரும் காதலும் பச்சைத் தேநீரும் உங்கள் மனசைப் பாதுகாக்கும்; மாரடைப்பைத் தடுக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய உண்மை!  
- பரிமாறுவேன்...

Wednesday 3 April 2013

ஆறாம் திணை - 29

ணவைத் தயாரித்த பின்னர் தாளித்துச் சாப்பிடும் வழக்கம் நம்மிடம் எத்தனை நாட்களாக இருக்கிறது எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இந்தத் தாளிப்புப் பழக்கம் வெளிநாட்டு உணவுகளில் பெரும்பாலும் கிடையாது. இந்த தாளிப்புப் பழக்கத்தில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருப்பது பலருக்கும் தெரியாது. இப்போது சேர்ப்பதுபோல் தாளிக்க, கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அன்று போட்டதில்லை.
திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. ஒவ்வோர் உணவுப் பொருளுக்கும் உள்ள ஒரு பிரத்யேகச் சுவையினால், அதற்கான மருத்துவக் குணம் வருகிறதென்பது சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவத் துறைகளின் அடிப்படைப் புரிதல். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் சுவையும் குணமும்தான் வளி, அழல், ஐயம் என்ற திரிதோஷத்தைச் சமமாக வைத்திருக்கவோ அல்லது சங்கடப்படுத்தவோ செய்கிறது.
'மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
என வள்ளுவர் சொன்ன மூன்றும் இந்த வளி (வாதம்) அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகியவற்றைத்தான். 'இனிப்பு சாப்பிட்டால், கபம் சேரும். புளிப்பு சாப்பிட்டால், மூட்டு வலி வரும். உப்பு சாப்பிட்டால், பித்தம் ஏறும்’ என்று உங்கள் பாட்டியும் பரம்பரை மருத்துவர்களும் சொல்வது இந்த உண்மையை ஆழமாக உணர்ந்ததால்தான்.
ஒவ்வொரு தனி உணவுப்பொருளின் சுவை, குணம் நமக்குத் தெரியும். சாம்பாரோ, கூட்டாஞ்சோறோ சமைக்கும்போது, நிறையப் பொருட்களை ஒன்றாகச் சேர்க்கும்போது, உணவின் திரிதோஷ சமநிலைத்தன்மை மாறிவிடும் வாய்ப்பு உண்டல்லவா? இதனைத் தவிர்க்கத்தான் திரிதோஷ சமப் பொருட்கள்கொண்டு தாளிக்கும் வழக்கமே வந்தது. ஏலக்காயை இனிப்பு சேர்ந்துள்ள எல்லாப் பொருட்களிலும் சேர்ப்பது, மணம் தர மட்டுமல்ல... கூடவே, அது கபத்தைத் தரக் கூடாது; அஜீரணத்தைத் தந்துவிடக் கூடாது என்ற அக்கறையிலும்தான். இன்றும் லட்டும் பூந்தியும் செய்கையில் ஏலக்காய் எவ்வளவு விலை விற்றாலும் லேசாகத் தூவுவது, அந்தப் பழக்கத்தின் நீட்சியால்தான். புலால் உணவின்போது பெருங்காயம், பூண்டு சேர்ப்பதும், நீர்க் காய்கறிகளின் கூட்டுக்கறிக்கு மிளகு சேர்ப்பதும் இந்தப் பின்னணியில்தான்.
வாசம் கொடுத்துவிட்டு தட்டில் ஓரமாக ஒருக்களித்து நிற்கும் கறிவேப்பிலையின் carbazole alkaloids  சத்து சர்க்கரையையும், கொழுப்பையும், குடல் புற்றையும் தடுக்கிறதாம். அல்சிமர் எனும் வயோதிகத்து நினைவாற்றல் நோயையும்கூட கறிவேப்பிலை ஓரளவு தடுக்குமாம். நம் பாட்டிக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், 'கறிவேப்பிலையை ஒதுக்காதடா... முடி நரைச்சுக்கும். சோகை தட்டும்’ என்று அவர் சொல்வதை மறக்க முடியுமா?
கொத்துமல்லி - தனியாவின் linalool கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்தும். இளம்பெண்களின் சினைப்பை நீர்க்கட்டி சிக்கலுக்குப் பயனளிக்கும். சிலோன் லவங்கப்பட்டை இளைஞர்களுக்குச் சீக்கிரமே சர்க்கரை நோய் வராது தடுக்க உதவிடும். சோம்பும் வெந்தயமும் நடுத்தர வயதின் சிம்ம சொப்பனமான சர்க்கரை நோயைத் தடுக்க உதவும்.
பித்த நோய்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், நம் ஊரில் மட்டுமல்ல... நெதர்லாந்து நாட்டு சீஸ் உணவு, மெக்ஸிகோவின் பரிட்டோஸ், மொராக்கோவின் ரஸ்எல்ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் பாரம்பரிய உணவுகளிலும் பயன்படுவதற்கான காரணம், அதன் பிரத்யேக மணமும் அந்த மணத்தில் ஒளிந்திருக்கும் CUMINALDEHYDE என்ற மருத்துவக் குணமளிக்கும் பொருளினாலும்தான்.
இந்த சீரகம், சர்க்கரை மிகுதிக்காரர்களுக்குப் பயனளிக்கும் என்பது பழைய செய்தி. கூடவே, கண் புரையில் இருந்தும் பாதுகாக்கும் என்பதுதான் புதிய செய்தி. மஞ்சள், மிளகு, அன்னாசிப்பூ, பெருங்காயம், பூண்டு என மணமூட்டிகளைப் பற்றி அன்று நம் ஊர் சித்தர்கள் சொன்னதை, இன்றைய விஞ்ஞானம் பல்வேறு மருத்துவ முடிவு களாக உறுதிப்படுத்திக்கொண்டே வருகிறது. இனி குழம்போ, குருமாவோ, தேநீரோ, மணமூட்டி இல்லாமல் இருக்க வேண்டாம்.
இந்தியாவில் பத்தில் நான்கு பேருக்கு உளவியல் நோய் உள்ளது. மன அழுத்த நோயின் பரவல் வெகுவாகப் பெருகிவருகிறது என்கிறது தேசிய மனநோய் மருத்துவக் கழகப் புள்ளிவிவரம். அதிக மன அழுத்தமும் மன உளைச்சலும் உள்ளதா? நீங்கள் மன நோயாளி ஆகாமல் இருக்க, நம் பாரம்பரியம் சொன்ன எளிய பரிந்துரை மாதுளைச் சாறு. இதைப் போலவே அமுக்கிராங் கிழங்கும் சாதிக்காயும் நம் மனம் மகிழ்வித்து, நரம்பை வலுவாக்கும் மூலிகைகள். இவற்றின் மருத்துவ மகத்துவம் அறிந்த இன்றைய அறிவியல் இதனை மனநோய்க்கு மருந்தாக மாற்ற முயல்கிறது.
நடுத்தரவர்க்கத்துக்கும், ஏழைக்கும் நோய் வராது காத்துக்கொள்வது மட்டும்தான் இப்போதைக்குக் குறைந்தபட்ச சாத்தியம். அதைத்தான் வள்ளுவர்,  
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’
என அன்றே அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்!
- பரிமாறுவேன்...