Wednesday 27 February 2013

ஆறாம் திணை - 24

வெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்!’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.
 சமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் தொல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இவை அனைத் துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங் களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
விஷயம் தெரிந்த பலர் இப்போது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்தை (உடல் நலத் துக்கு உலைவைக்கும் இது போன்ற குளிர்பானங்களின் செல்லப் பெயர்!) விட்டு விலகி, பழச்சாறே ஆரோக்கியம் என்று முடிவு எடுத்துச் செயல்படுவதை உணர்ந்துகொண்ட கோலா நிறுவனங்கள், தற்போது அதற்கு ஏற்பத் தங்கள் சந்தைத் திட்டங்களையும் மாற்றிக்கொண்டு உள்ளன. இப்போது அந்த நிறுவனங்கள் பழச்சாறையே விதவிதமாக சந்தைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
'தோட்டத்தில் இருந்து நேராக’ என்ற விளம்பரத்துடன், டெட்ராபேக்கில் 'கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் இல்லவே இல்லை. அப்படியே பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறுபோலவே’ என அறிவிக்கும் இந்தப் பழச் சாறு சமாசாரம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. 'அவர்கள் சொல்வதுபோல பழச் சாறில் செயற்கை சமாசாரம் எதுவுமே சேர்க்கப்படவில்லையா?’ என்றால் அதன் தொழில்நுட்பம் இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே 'மர்மப் பின்னணி’யுடன் செயல்படும் ரகசியம்.
பழத்தைக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து (blending), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி (de-oiling) விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி (paste urize), கசப்பு நீக்கி (debittering)  அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி (acid stabilization), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி (cloud stabilization), கொதிக்கவைத்து (evaporating) பிறகு குளிர்வித்து ( freezing)  திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப் படுத்தி எடுத்து, கடைசியாக பழச் சாறின் அடர்வை (concentrate)  பெறுகின்றனர். இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள். பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்க்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணி தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்’ என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.
இப்படித் துவைத்து, பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட, பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமாகும்.  பழங்களில் பொதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகளும் இந்த உழவாரப்பணியில் ஊக்கம் இழந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எப்போதேனும் அவசரத்துக்கு அந்தப் பானங்களால் தாகம் தணித்துக்கொள்வது சரி. ஆனால், பெட்டி பெட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் புதைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சீஸனுக்கு சீஸன் மாறுபடும் பழத்தின் அமிலத் தன்மையையும், இனிப்புச் சுவையையும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்லை. பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள கரையும், கரையாத நார்ப் பொருட்கள் கொழுப்பைக் குறைப்பது முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வரையில் கொடுக்கும் பலன்கள் காம்போ ஆஃபர்! பதப்படுத்துதல், பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிசையாகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்களை மேற்கொண்டு பளபளப்பான பாட்டிலில் வரும் திரவத்தைக் காட்டிலும் சந்தைத் திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் கொய்யாவை வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது சூழலுக்கும் சேர்த்து சுகம் தரும்.
மோரும், இளநீரும், பதநீரும் மேலே குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாதவை. கூடுதல் மருத்துவ மகத்துவம்கொண்டவை. சூழல் சிதைக்காதவை. பலர் நினைப்பதுபோல இளநீர் வெறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய ஆராய்ச்சிகள், இளநீரில் உள்ள அற்புதமான நொதிகளின் ஆற்றலைக் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளன. இளநீரில் உள்ள 'சைட்டோகைனின்’ வயதாவதைத் தடுத்து, புற்று வளர்ச்சியையும் தடுக்கிறதாம். பதநீர், நரம்பை உரமாக்கும் வைட்டமின் சத்து நிரம்பிய அற்புதமான பானம்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்போதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான் பரிமாறப்படும் என்பது!
- பரிமாறுவேன்...

Wednesday 20 February 2013

ஆறாம் திணை - 23



''பூசுனாப்புல இருக்கான்... செல்லத் தொப்பையைப் பாரு... சந்தோஷமா இருக்கான்டே அவன்!'' எனக் கொஞ்ச நாட்கள் முன்பு வரை சொன்னவர்கள், 'சார்... கவனம். வெயிட் போடுற மாதிரி தெரியுது. பார்த்து, ஷ§கர் இருக்கான்னு செக் பண்ணிட்டீங்களா?' என்று பயமுறுத்துகிறார்கள். 'அப்படி ஒண்ணும் அதிகமா இனிப்பும் சாப்பிடலையே... சாமி கண்ணைக் குத்தும்னு நம்பி எந்தத் தப்பும் பண்றதில்லையே... ஆனாலும், ஏன் இப்படி ஆண்டவன் முதுகுல குத்துறான்?'' என்று புலம்புகிறோம்.
 
நாற்பதில் பலருக்கும் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற சிந்தனையே இருப்பது இல்லை. ''எல்லோரும் ஓடுகிறார்கள். நானும் ஓடுகிறேன்!'' எனும் மந்தை எண்ணத்துடன் நகர்கிறது வாழ்க்கை. சந்தோஷமாக அகம் மகிழ்ந்து சத்தமாகச் சிரித்தது எப்போது? கடைசியாக உற்சாகத்துடன் ஓடி விளையாடியது எப்போது? 'ஹோ!’ என இரைச்சலுடன் வரும் கடல் அலை காலைக் கவ்வ, உச்சி வரை குளிர்வித்துப் போவதில் குதூகலித் தது எப்போது? காதலியின் வெட்கத்தினைக் கண்கள் முட்டப் பார்த்துச் சிலாகித்துச் சில ஆண்டுகள் இருக்குமா? புறங்கையில் வழியும் மிளகு ரசத்தை மணத்தக்காளி வற்றலோடு சாப்பிட்ட வாசம் நினைவில் மட்டுமே எஞ்சியிருக்கிறதா? சமீபமாகக் காது கேட்காமல் போன தாத்தாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து, சுருக்கம் விழுந்த அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, ''நல்லா இருக்கேன் தாத்தா... நீங்க நல்லாயிருக்கீங்களா?'' எனச் சத்தமாகச் சொல்லி வருடங்கள் கடந்திருக்குமா? 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற வரிகளில் தொலைந்துபோய் எவ்வளவு நாள் இருக்கும்? இப்படித் தொலைத்த எத்தனையோ சம்பவங்கள்தான் நம் நலவாழ்வையும் தொலைத்துவிட்டது.
'அப்படின்னா, ரத்தத்தில் கூடிப்போன உப்பு, சர்க்கரைக்குக் கிருமியோ... வியாதியோ காரணம் இல்லையா?’ என்று கேட்போருக்குச் சின்ன விளக்கம் இங்கே... சமீபத்தில், ஜெர்மனியில் இருந்து வந்திருந்த சர்க்கரை நோய்க்கான பன்னாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரின் பேச்சைக் கேட்டேன். 'இப்போதைக்கு 65 மில்லியன். 2030-ல் 100 மில்லியனைத் தாண்டும்’ என சர்க்கரை நோயாளிகளைக் கணக்கிட்ட அவர், நோய்க்கான காரணங்களை வரைந்து காட்டிய படம் கிளறிப்போட்ட இடியாப்பம்போல் இருந்தது. அதிக சர்க்கரையில் ஆரம்பித்து, அடிக்கடி படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பது வரை பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டார். குண்டு உடம்புக்காரரைக் காட்டிலும் ஒல்லி உடம்புக்காரருக்கு வரும் சர்க்கரை கொஞ்சம் கூடுதலாகவே சேட்டை காட்டுமாம். சாப்பாட்டுப் பிரியர், சாகச வெறியர், சர்க்கரை மரபர், சந்தோஷம் தொலைத்தவர், சனிக்கிழமை ஊதியம் பெறும் உள்ளூர் தொழிலாளி, சனிக்கிழமை ஜாலி டிரிப் போகும் வெளிநாட்டுத் தொழிலாளி... இப்படி யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை வியாதி வரக்கூடும். இப்போது உள்ள எந்த ஒரு மருந்தும் முழுமையானது இல்லை.
வாழ்வின் தரம் (quality of life) அதிகம் சிதைக்கப்படும் இந்த நோய்க்கு, வருமுன் காக்கும் முறையே சிறந்தது. மருந்தோடு வாழ்வியல் மாற்றமும் தேர்ந்தெடுத்த உணவும்தான் நோய் வராமல் காக்கும். நோய் வந்தாலும் அதிகம் நோக வைக்காதிருக்கவும் உதவும். கார்ப்ப ரேட் மருந்தோ, கார்ப்பரேட் சாமியோ, குலேபகாவலி மூலிகையோ ஒரே இரவில் இதிலிருந்து உங்களைக் காப்பாற்றாது. சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா என அறிய HbA1C  சோதனை முக்கியமானது. முந்தின நாள் மட்டும் கொலைப்பட்டினி கிடந்து, மறுநாள் காலை சோதனையில் வரும் சர்க்கரை அளவைப் பார்த்து தன்னை யும் தன் மருத்துவரையும் ஏமாற்றும் தில்லா லங்கடி வேலைக்கு இந்த HbA1C சோதனை பெப்பே காட்டிவிடும். ஆம்... கடந்த மூன்று மாதங்களில் அவ்வப்போது திருட்டுத் தனமாகச் சாப்பிட்ட மைசூர்பாகில் இருந்து பிசிபேளாபாத் வரை ஏற்றிவிட்ட சர்க்க ரையை இந்தச் சோதனை காட்டிக் கொடுக் கும். இந்த HbA1C அளவு 6-க்குள் இருந்தால் நீங்கள் சமத்து; 7-க்குள் வைத்திருந்தால் கொஞ்சம் கெட்டிக்காரர். 7-க்கு மேல் எகிறினால் பிரச்னைகளுக்கு வாசல் கதவைத் திறந்துவிடுகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக, அதன் அலகில் 1 புள்ளியைக் குறைத்தால் நான்கு மாரடைப்புகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் இதயநோய் நிபுணர்கள். சத்தம் இல்லாமல் நிகழும் மாரடைப்புகள் நித்தம் நடக்கிறது என்ற செய்தி கள் செய்தித்தாளிலோ, அலுவலகத்துக்குச் செல்லும்போது லிஃப்டில் நடக்கும் சம்பாஷனையிலோ கேட்கும்போது அவ்வளவாக வலிப்பது இல்லை.  
''நாளைக்கு ஏலகிரி போகலாம். அங்கே போட்டிங் கூட்டிட்டுப் போறேன். இப்ப தூங்குடா செல்லம்!'' எனச் சொல்லி 7 வயதுக் குழந்தையைத் தூங்க வைத்து, ''தினம் இப்படி நடுராத்திரியில் வந்தீங் கன்னா? குழந்தைக்குக் கோவம் வராதா?'' எனத் தன் ஆதங்கத்தைக் குழந்தை வாயிலாக வெளிப் படுத்தும் செல்ல மனைவியின் முன்நெற்றி முத்தத் தோடு, ''என்ன செய்யிறது? கிளையன்ட் நேரத் துக்கு வேலை செய்தாகணுமில்ல. இந்த வாரத் தோட நைட் ஷிஃப்ட் கிடையாது. கோவப்படா தடா!'' என்றெல்லாம் சொல்லிவிட்டு உறங்கி, காலையில் எழுந்திருக்கவே இல்லை என்றால்..? ஏலகிரிக் கனவில் எழுந்திருக்கும் அந்தக் குழந்தைக் கும், நாளை நம் கணவன் கரம்பற்றி தோள் சாயலாம் என்ற மனைவிக்கும் எப்படி வலிக்கும்? வலி நமக்கல்ல. நம்மை நம்பியுள்ள குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும்தான்.
வாழ்வில் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியோடு வேலை செய்யும் ஒவ்வொருவரும் இந்த சர்க்கரையையும் மாரடைப்பையும்கூட கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டும். நகரமோ, கிராமமோ நம் பணி எங்கிருந்தாலும், அகமகிழ்ச்சிதான் அடித்தளமாக இருக்க வேண்டும். எது வளர்ச்சி என்ற தெளிவும், எது வரை வளர்ச்சி என்ற நிறைவும் தெரிந்திருக்க வேண்டும். அன்றாடம், கொஞ்சம் சிறு தானியம், நிறைய பசுங்காய்கறிகள், உள்ளூர் கனிகள் உண்ணும் பழக்கம் வளர வேண்டும். காதலும், பாசமும், அன்பும், அதனால் விளையும் அக்கறையும் மெனக்கெடலும் வீட்டில் நிரவியிருக்க வேண்டும். சத்தம் இல்லாமல் நம் காலுக்கு அடியில் வேகமாகச் சுற்றிக் கொண்டு இருக்கும் பூமியை நம் சந்ததிக்கு அதே அழகுடன் விட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழலுக்கு இசைவான கண்ணியம் நம்மிடம் வேண்டும். அப்போது மட்டுமே இந்த சர்க்கரையோ, உப்போ, மாரடைப்போ நம்மை நெருங்கக் கொஞ்சம் பயம் கொள்ளும்.
- பரிமாறுவேன்...

Wednesday 13 February 2013

ஆறாம் திணை - 22



மதர் டே, ஃபாதர் டே’ தெரியும்; அது என்ன புதிதாக 'சாப்பாடு டே?’ இது புதுசுதான். இந்தியா எங்கும் மாற்று அறிவியலாளர்கள் பிப்ரவரி 9-ம் தேதியை 'தேசியப் பாதுகாப் பான உணவு தினம்’ என இந்த வருடத்தில் இருந்து கொண்டாட அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2010-ல், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், பி.டி. கத்தரிக்குத் தடை விதித்த நாள் அது. அறிவியல் வளர்ச்சியின் பெயரால் கொண்டுவரப் பட்ட ஒரு விஷயத்தைப் பல கட்ட ஆய்வுகள் செய்து, 'இன்னும் சிந்தித்து அனுமதிக்க வேண்டிய விஷயம் இது; அவசரப்படக் கூடாது’ என மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிருக்குத் தடை விதித்த நாளைத்தான், 'பாது காப்பான உணவு தினம்’ என இந்தியா முழுமையும் மாற்றுச் சிந்தனையாளர்கள் கொண்டாடுகின்றனர்.
'இந்திய வேளாண்மையின் வளர்ச்சிக்கே வேட்டுவைத்துவிட்டதாக’ குய்யோ முறையோ என்று கதறிய சில தொழில்நுட்பக் காதலர்கள், சமீபத்தில் 'மரபணு மாற்றிய பயிர்கள் மீது நடந்த ஆய்வு முடிவுகள் அவ்வ ளவு நம்பிக்கை தருபவையாக இல்லை; நிறையத் தகிடு தத்தங்கள் நடந்திருக்கின்றன; கம்பெனிக்காரர்களின் நலன் முன்னிறுத்தப்பட்டு, விவசாயிகளின் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது’ என நாடாளுமன்ற விவசாயக் குழு தெரிவித்ததில் ஆடிப்போயிருக்கிறார்கள்.
நீங்களும் நானும் மரபணு மாறியவர்கள்தான். உங்கள் வீட்டுக் குருமாவில் போடும் பெங்களூரு தக்காளியும், புளிக் குழம்புக்குப் பக்கத்தில் வைத்துச் சாப்பிடும் வெண்டைக்காயும் மரபணு மாறியதுதான். ஆனால், இந்த மாற்றங்களை நிகழ்த்தியது இயற்கை; அம்மாவின் 'முணுக்’ கோபமும் அப்பாவின் சாம்பார் பிரியமும் பையனுக்கு வருவது அப்படித்தான். அதிகம் காய்க்கும் சுமாரான மாம்பழமும் கொஞ்சமாகக் காய்க்கும் சூப்பர் மாம்பழமும், அருகில் இருக்கிறது எனக்கொள்ளுங்கள். அப்போது பற்றிக்கொண்ட காதலின் விளைவாக மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதன் பிறகு 'சூப்பர் மாம்பழம்’ கன்னாபின்னாஎனக் காய்த்துத் தள்ளக்கூடும். இதில் அருகருகே இரண்டையும் வளர்ப்பதுடன் அறிவியலின் வேலை முடிந்து விடுகிறது. 'சூப்பரா... சுமாரா?’ என்பதை இயற்கைதான் முடிவுசெய்யும். ஆனால், மரபணுப் பயிர்கள் இப்படி இல்லை. நாட்டுக் கத்தரிக்காயின் மரபணுவை, 'பேஸிலஸ் துருஞ்சியேனம்’ எனும் பாக்டீரியாவின் மரபணுவோடு வெட்டி ஒட்டி புதிய மரபணுவை உண்டாக்குகின்றனர். அதை விதையாக்கி, காயாக்கும் வித்தையைச் செய்கிறார்கள். 'இப்படிப் பிறக்கும் கத்தரிக்காயைப் புழு தாக்காது; அந்தப் புழுவைத் தாக்கும் நஞ்சுக்கு எதிரான நச்சுப்புரதம் கத்தரிக்காய்க்குள் உள்ளது. தனியாக பூச்சிமருந்து தெளிக்க வேண்டாம்’ என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. பூச்சி சீண்டாது... சரி. ஆனால், காய்க்குள் உள்ள நமக்குப் பழக்கம் இல்லாத புரதம் நம்மைச் சீண்டாதா? இதைக் கேட்க அதிகம் பேர் இல்லை என்பதுதான் வருத்த மான விஷயம். 'அதுசரி சார்... வேற புழு, பூச்சி எல்லாம் தாக்காதா?'' என்றால், ''அதெல்லாம் தெரியாது. எங்க கம்பெனி யைப் பத்தி மட்டும் கேளுங்க'' என்று 'மன்னாரன் கம்பெனி’ தங்கவேலு பாணி யில் சொல்கிறார்கள் அந்த பிரைவேட் லிமிடெட்காரர்கள்.  
கத்தரியில் துவங்கும் இந்தப் படைத்தல் தொழில், அரிசி, ராகி, சோளம், தக்காளி, பப்பாளி... என வகை வகையான உணவுப் பயிர்களிலும் தொடர்கிறது. கத்தரிக்காய் ஓ.கே. ஆகிவிட்டால், இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில் மொத்த நாட்டுப் பயிர்களையும் கூகுளில் மட்டுமே தேட முடியும். இதே உத்தியில் வணிகப் பயிரான பருத்தியில் நடத்திய பலாத்காரத் தில் பிறந்த பி.டி. பருத்தி, நாடு முழுக்கப் பரவி, நம் நாட்டு மரபுப் பருத்தியைக் காணாமல் அடித்துவிட்டது. இன்று பயனில் உள்ள பருத்தியில் 90 சதவிகிதக் கும் மேலானவை பி.டி. பருத்திதான். பூச்சி தாக்காது என்றார்கள். ஆனால், அது அதிகபட்சம் மூன்று, நான்கு வருடங்கள்தான் தாங்கியது. பிறகு, பூச்சி இவர்களுக்குப் பெப்பே காட்டி பருத்திக்குள் பாய் போட்டுப் படுத்துக்கொண்டது. இப்போது 'பி.டி. காட்டன் வெர்ஷன்-2’ கொண்டுவந்துள்ளார்கள். இது எத்தனை வருடங் கள் தாக்குப்பிடிக்கும் எனத் தெரிய வில்லை.
Genetic Engineering என்ற வார்த்தையை, இந்தியாவில் அறிமுகம் செய்த முன்னாள் மத்திய மாலிக்குலர் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் புஷ்ப பார்கவா, 'தயவுசெய்து மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிக்காதீர்கள்' என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டுவருகிறார். 'இந்தப் பயிர்கள் ரொம்ப சாது; எந்தச் சேட்டை யும் பண்ணாது’ எனச் சான்றளித்த அவர்களே இப்போது, 'சோதித்துப் பிறகு முடிவெடுக்கலாம்’ என்கிறார்கள். உலக சுகாதார நிறுவனமோ, 'அதை அனுமதிப்பதும், அனுமதிக்காததும் அந்தந்த நாட்டின் பொறுப்பு. அலர்ஜி வரலாம்; மரபணு, உடலுக்குள் உள்ள பாக்டீரியாவின் மரபணுவோடு கலக்கலாம்; பக்கத்துப் பயிரில் கலக்கலாம்; (allergenicity, gene transfer, out crossing)'' என எச்சரிக்கிறது. போதாக்குறைக்கு, 'இதைச் சாப்பிட்ட எலிக்குக் குழந்தை பிறக்கவில்லை; இன்னொரு எலி ரொம்பவே மெலிந்துவருகிறது' என வரிசையாக மருத்துவ அறிக்கைகள் வேறு. ஆனால், மரபணு மாற்ற உணவுப் பொருட்களை உருவாக்கும் கம்பெனிகளோ, 'நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு கவள உணவும், நான் படைத்த விதையில் இருந்து பிறந்ததாக இருக்க வேண்டும்' என்ற அறைகூவலுடன் தொடர்ந்து எப்படியாவது இந்திய உணவுச் சந்தையைக் கைப்பற்றத் துடிக்கிறது.
'புழுவில் இருந்து பயிரைக் காக்கத்தானே மரபணு மாற்றம்? அதை ஏன் எதிர்க்கிறீர்கள்? புழு பூச்சியில் இருந்து பயிரையும் உணவையும் காப்பதில் என்ன தவறு?’ என்பது வேறு சிலரின் கேள்வி. காலங்காலமாக நம் நாட்டில் பயிரும் இருக்கிறது; புழுவும் இருக்கிறது. பனங்காடை, கரிச்சான், தேன்சிட்டு, கொக்கு, நாரை, மரங்கொத்தி, உழவாரன், கீச்சான் என எண்ணற்ற பறவைகள் புழுவையும் பூச்சியையும் தின்று பயிரைக் காத்தன. கழுகும் பருந்தும் எலியைத் தின்று வாழ்ந்தன. 'காக்கை குருவி எங்கள் சாதி; நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்'' என்று பாரதி பாடியது, பல்லுயிர் மேலாண்மை புரிந்துதான். ஆனால், பூச்சிக்கொல்லிகள் மூலம் புழுவோடு சேர்த்துப் பறவைகளையும் கொன்றுபோட்டோம். விளைவு, பல்லுயிர்ச்சூழல் கெடுத்து குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது.
இந்த உலகில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது; உணவுப் பகிர்வுதான் இல்லை. கடந்த வாரம் ஒரு திருமண விருந்துக்குச் சென்றிருந்தேன். ஏழு வகை இனிப்புடன் கூடிய அந்த விருந்தில், அத்தனையும் ஒருவன் சாப்பிட்டான் என்றால், அன்றிரவே அவனுக்கு 78 முறை ஒண்ணுக்குப் போகும். காலையில் ஏதாவது டயாபடிக் டாக்டர் கிளினிக்கில்தான் நிற்க வேண்டும். ஒருபக்கம் இப்படி என்றால், இன்னொரு பக்கம் மூன்று வேளை சமச்சீர் உணவு கிடைக்காத குழந்தைகள் இந்தியாவில் 46 சதவிகிதம் என்கின்றன புள்ளிவிவரங்கள். ''தேவைக்கு இங்கே எல்லா வளமும் உண்டு; ஆனால், களிப்பாட்டத்துக்குக் கிடையாது' என்று காந்தி சொன்னது இதைத்தான். எல்லோருக்கும் எல்லாமும் எனப் பகிர்ந்து வாழும் நிலையை நோக்கி நகராமல், வளர்ச்சி என்ற பெயரில் பல்லுயிர் பன்முகத்தைச் சிதைப்பது, கவிஞர் அறிவுமதி சொன்னதுபோல், 'காடு நம் தாய்; தாயிடம் பால் அருந்தலாம். ரத்தம் உறிஞ்சக் கூடாது.'
- பரிமாறுவேன்...

Wednesday 6 February 2013

ஆறாம் திணை - 21



தம்பி... உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?'
''கேரட்.'
''பிடிச்ச பழம்?'
''ஆப்பிள்.''
''பிடிச்ச காலை உணவு?''
 ''நூடுல்ஸ்.''
''மத்தியானத்துக்கு?'
''ஃப்ரைடு ரைஸ்.''
''ராத்திரி..?''
''பீட்ஸா அல்லது பாஸ்தா.''
- இது ஏதோ ஆங்கிலப் படத்தின் வசனம் அல்ல. ''சரியா சாப்பிட மாட்டேங்கிறான்
டாக்டர்'' என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவைவிட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும், கத்தரிக் காய் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், 'ஆம், காணாமல் போய் விடும்’! இதற்கான திட்டமிடப்பட்ட உணவு அரசியல், உங்களையும் அறியாமலேயே உங்க ளைச் சுற்றிப் பின்னப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
'நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்? எங்கு சாப்பிட வேண்டும்? எத்தனை நாளைக்குச் சாப்பிட வேண்டும்?’ என்பதை எல்லாம் இனி நம் வீட்டு அடுப்பங்கரையில் முடிவு செய்யும் நிலை வெகுகாலத்துக்கு நீடிக்காது. நெதர்லாந்திலோ, கலி ஃபோர்னியாவிலோ ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் இதை முடிவு செய்யும். இப்போதும்கூட, நம்அடுப் பங்கரையை ஆக்ரமித்து இருக்கும் காய்கறிகளில் அதிகபட்சம் வெளிநாட்டில் இருந்து வந்தவையே. 500-600 ஆண்டுகளில் மெள்ள மெள்ள நம்மிடையே ஊடுருவியவை. பெருவில் இருந்து வந்த உருளைக்கிழங்கு, ஐரோப்பாவில் இருந்து காபி, டீயுடன் வந்த தக்காளி, சிலியில் இருந்து வந்த மிளகாய், சீனாவில் இருந்து வந்த முள்ளங்கி, பெர்சியாவில்இருந்து வந்த வெங்காயம், ஜப்பானில் இருந்து வந்த சேனைக் கிழங்கு என இந்தப் பட்டியல் பெரியது.
ஆனால், காய்கறி என்றாலே மிளகு சேர்த்துச் சமைத்த காய் என்பதுதான் அர்த்தம் (கறி என்ப தன் பொருள் மிளகு). அந்த அளவுக்கு காரச் சுவைக்கு மிளகு சேர்த்துச் சமைத்தவர்கள் நாம். காய்களை புளிக்கறி, பொரித்த கறி என சமைத் துச் சாப்பிட்டவர்கள். கிரேக்கமும் அரபும் அறியப்படாத 1,000 ஆண்டுகளுக்கு முன்பே மிளகையும், அதன் உணவுப் பயனையும், மருத்து வப் பயனையும் நுட்பமாக அறிந்துவைத்திருந்தனர் நம் முன்னோர். அந்த மிளகை ஓரங்கட்டி முன்னே வந்தது மிளகாய். அந்த பச்சை நிறக் காய், மிளகுபோல் அதிகக் காரம் கொண்டு இருந்ததால்தான் 'மிளகு காய் = மிளகாய்’ எனப் பெயரிட்டனர். ஆனால், மிளகுக்குக் கடுகளவும் மிள காய் இணையாகாது.
வெளிநாட்டு மிளகாயை அரியாசனத்தில் வைத்துவிட்டு, நம்ம ஊர் மிளகை சூடான சூப்புக்கும், ஆம்லெட்டுக்கும், பெப்பர் சிக்கனுக்கும், வெண்பொங்கலுக்கும் என விசேஷத்துக்கு ஒதுக்கிவிட்டோம். இந்த மிளகுக் காரம் உணவின் சுவைக்கு மட்டுமல்ல; மருந்தும்கூட. மூக்கு நோயில் இருந்து மூலநோய் வரை பல நோய்களை இது விரட்டும். மிளகில்தான் 'பைப்பரின்’ சத்து அதிக அளவில் உள்ளது. இந்த பைப்பரின்சத்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கும் மருந்து. ஒருவேளை சிலி மிளகாய் வராமல் இருந்திருந்தால், தமிழர் கள் உசேன் போல்ட் மாதிரி திடகாத்திரமாக இருந்திருப்பார்களோ, தெரியாது. குறைந்த பட்சம் அலர்ஜி, ஆஸ்துமா அதிகம் தாக்காத இனமாக இருந்திருப்போம். மிளகை, மிளகாயில் தொலைத்தது மாதிரி காய், கனிகளில் இழந்த வையும் ஏராளம்.  
'சி ஃபார் கேரட்; கேரட் நல்லது’ என்று சொல்லித்தரும் நம் கல்வித் திட்டம், அதைவிடப் பன்மடங்கு கண்களுக்கு நன்மை பயக்கும், கெரட்டினாய்டுகளைக் கொண்டிருக்கும்முருங் கைக் கீரையைப் பற்றியோ, பப்பாளியைப் பற்றியோ அதிகம் பேசுவது இல்லை. நம்கல்வித் திட்டத்தை வகுத்த மெகல்லே பிரபுவுக்கு அவர் ஊரில் விளைந்த கேரட் பற்றித்தான்
தெரியும். முருங்கைக் கீரை பற்றித் தெரியாது.விளைவு?  
தன் 'ஃபோலேட்’ சத்தின் மூலம் புற்றைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை சாதாரணக் கீரைகள். சிறு வயது முதல் உணவில் கீரையைச் சேர்த்துக்கொண்டால், செயற்கைக் கருத்தரிப்பு தேவை இல்லாதபடி விந்தணுக்களை உயர்த் தவும் உதவும். தமிழ் மருத்துவம் இதனை
'தாளி முருங்கை தளை தூதுணம் பசலை வாளி வறூ கீரை நெய்வார்த்துண்ணில் ஆளியெனவிஞ்சுவார் போகத்தில்...’ எனக் கீரைகளை வரிசைப்படுத்துகிறது. நம்புங்கள் எந்தப் பக்கவிளைவும் இல்லாத வயாகரா விளைவுகள் கீரைகளில் இயற்கையாகவே பொதித்துவைக்கப்பட்டு இருக்கிறது.
கீரை... 40 நாளில் வளரும் பொக்கிஷம். தினம் ஒரு கீரை சாப்பிடுவது ரத்தசோகை, மலச் சிக்கல், பலக் குறைவு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு எனப் பல நோய்க்கும் மருந்து. 'பொன்னாங்கண்ணிக்கு புளிஇட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு’ எனப் பெண்ணுக் கும்... 'போன கண்ணும் திரும்புமாம், பொன் னாங்கண்ணியினாலே’ எனக் கண்ணுக்கும் மருந் தாகும் உணவான பொன்னாங்கண்ணிக் கீரை இன்று எத்தனை பேர் வீட்டில் சமைக்கப்படு கிறது?
கீரையையும் மிளகையும் இன்ன பிற சத்துள்ள உணவுகளையும்சாப்பிட வைக்க நம் வீட்டுக் குழந்தைகளைக் கெஞ்சவும் மிரட்டவும் வேண்டியிருக்கிறது. ஆனால், அதே குழந்தைகள் அம்மாவின் கைபேசியை எடுத்து நேரே பீட்ஸா கடைக்குப் போன் செய்து, 'டபிள் சீஸ் மார்கரிட்டா வித் மெக்சிகன் பெப்பர்’ என ஆர்டர் செய்கிறது.
இது திடீரென நிகழவில்லை. கார்ட்டூன், கிரிக்கெட், பார்ஃபி பொம்மை, வீடியோ கேம்ஸ், செல்போன் ஆப்ஸ் என இளம் வயதினருக்குள் சத்தம் இல்லாமல் திணிக்கப்பட்ட வெளிநாட்டுக் கலாசாரத்தின் நீட்சி இது. கொஞ்சம் மெனக்கெட்டு நம் உணவைக் காப்பாற்றத் தவறினால் உங்கள் குழந்தைகள், 'ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்ககூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி?’ என எதிர் காலத்தில் கேட்கக்கூடும்!
- பரிமாறுவேன்...