Wednesday 27 March 2013

ஆறாம் திணை - 28



கைப்பிடித்து அழைத்து வந்த பேரனைப் பள்ளி வாசலில் விட்டுவிட்டு சோர்ந்து உட்காராமல், அதே துடிப்போடு நடந்தே வீட்டுக்குச் செல்லும் தாத்தாவைப் பார்க்கும்போதும், பன்னாட்டு விமான நிலைய முனையத்தில் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிப் பேசி, கரிவலம்வந்தநல்லூரில் இருந்து கனடாவுக்கு தன் பேத்திக்கு 'டே கேர்’ பார்க்கத் தள்ளாத வயதில் செல்லும் பாட்டியைப் பார்க்கும்போதும், எப்படி இவர்களால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக ஓடியாடி உழைக்க முடிகிறது என்ற கேள்வி அடிக்கடி எழும். ஊர்க் கிழவியால் பிரசவம் பார்க்கப்பட்டு, குறைந்தபட்சத் தடுப்பு ஊசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு, ஊட்டச் சத்து உணவோ, உயிர்ச் சத்து டானிக்கோ சாப்பிடாமல் வளர்ந்த அவர்களது உடல் நலத்தை இன்றும் காத்துவருவது எது என்று யோசித்தால், அதிகம் மாசுபடாத சுற்றுச்சூழலும், அளவாக அவர்கள் உண்ட உணவின் வகையும், 'சிதைவுக்கு’ ஆளாகாமல் இருக்கும் அவர்களின் மனமும்தான் காரணம் என்பது புரிகிறது.
இன்றைக்கு அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று விவாதிப்பதைவிட, தொலைந்துபோன தையும், மறந்துபோனதையும் மீட்டெடுப்பதில் சாத்தியப்படும் அம்சங்கள்பற்றிப் பேசலாம். தாய்ப்பாலில் இருந்து நம் ஆரோக்கியம் துவங்குகிறது. சில காரணங்களால் தாய்ப்பால் சுரக்காமலோ அல்லது குறைவாகச் சுரந்தாலோ, வெந்தயமும், பெருஞ்சீரகமும் (சோம்பு), வெள்ளைப்பூண்டும் உணவில் கூடுதலாகச் சேர்த்தால் போதும். பிரசவித்த பெண்ணுக்குப் பாலைக் கூடுதலாகச் சுரக்கத் தேவையான புரொலாக்டின் (PROLACTIN) எனும் ஹார்மோனைச் சுரக்கவைக்க இந்த இரண்டும் பயனளிக்கும். பிரசவத்துக்கு வந்த மகளுக்கு தாய் வீட்டில், தண்ணீர்விட்டான் கிழங்கு என அழைக்கப்படும் சதாவரி (asparagus)  எனும் எளிய மூலிகையைக்கொண்டு தயாரிக்கப்படும் லேகியம் இன்று அறிவியல் உலகம் அங்கீகரித்த பால்பெருக்கி (Galactagogue) மருந்து.
தாய்ப்பால், நோய் எதிர்ப்பாற்றல் தரும் என்ற செய்தி நாம் அறிந்ததே. பிரசவிக்கும் வரை பெண்ணின் குடல் பகுதியில் இருந்தபடி 'ஏதாச்சும் கிருமி வருதா?’ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த நோய் எதிர்ப்பாற்றல்கொண்ட ஆன்ட்டிபாடிகள் எல்லாம், பிரசவித்த மறுகணத்தில் பெண்ணின் மார்பகப் பால்கோளத்தின் உட்சுவருக்குள் ஓடிவந்து நிற்கின்றனவாம். சுரக்கும் பாலோடு, சுற்றுலா கிளம்பும் அவை குழந்தையின் வயிற்றுக்குள் போய், அதே காவல் காக்கும் வேலையைச் செய்யத் துவங்குகின்றன. அதிசயங்கள் நிகழ்த்தும் அறிவியலும், 'எப்படிய்யா இது நடக்குது?’ என வியக்கிறதே தவிர, காரணத்தைக் கண்டறியவில்லை. அதனால்தான் புட்டிப்பாலில் குழந்தைக்கு வரும் பேதி நோய், தாய்ப்பாலால் வருவது இல்லை. எனவே, பால் சுரக்கவில்லை என்றால், படாரென புட்டிப்பாலுக்குத் தாவிவிட வேண்டாம். சதாவரி லேகியம், வெந்தயக் களி, பூண்டுக் குழம்பு, சுறாப்புட்டு, குடம்புளியில் சமைத்த மீன் குழம்பு இவற்றுடன் காலையில் ராகி தோசையும் மதியம் குழியடிச்சான் சம்பா அரிசியும், இரவில் கம்பு ரொட்டியும் சாப்பிடுங்கள். இவை அத்தனையும் பால் பெருகச் செய்யும் அருமருந்துகள்.
பாலுக்குப் பின் பாயாசம். ஆம்! தேங்காய் எண்ணெய் துளியும் கொஞ்சம் பனை வெல்லமும் சேர்த்துத் தயாரித்த அரிசிப் பாயாசமும் ஆரியக் கஞ்சியும் (ராகி கஞ்சி)தான் குழந்தைக்கான அடுத்த உணவு. நேந்திரம் பழ மாவில் காய்ச்சிய கஞ்சியில் தேங்காய் எண்ணெய் இரண்டு சொட்டு விட்டுக் கொடுப்பது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை உயர்வுக்கும் உதவும் என்பது நம் பக்கத்து மாநில சேச்சிகளின் அனுபவம். இதைத்தான் 'நேந்திரம்பழத்தில் அதிகபட்ச டெஸ்ட்ரோஸும், தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலமும் இருக்கிறது’ என அறிவியல் மொழியில் சொல்கிறார்கள் அறிஞர்கள். Amylase rich foodதான் குழந்தைக்கான சிறப்பு உணவு என்கிறது நவீன உணவறிவியல். 'அது என்னப்பா அமைலேஸ்?’ எனக் கேட்போருக்கு ஒரு செய்தி... ஊறவைத்து முளைகட்டிய ராகி, கோதுமை, பாசிப்பயறு அனைத்திலும் இந்த Amylase சத்து உண்டு.
குழந்தைகளுக்கு நான்கு வயதுக்கு மேல் தினசரி உணவுடன் எதாவது ஒரு கீரையும், வாழைப்பழமும் ஒரு ஸ்பூன் தேனும் மட்டும் கொடுத்துவாருங்கள். 'நான் வளர்கிறேன் அம்மா!’ என்று குதூகலமாக உங்கள் செல்லம் சொல்லும். முளைகட்டிய கேழ்வரகு, தினசரி ஒரு வேளை பாசிப்பயறு, தினை யரிசி, கைக்குத்தல் மாப்பிள்ளை சம்பா அரிசி, தொலியுளுந்து, நிலக்கடலை முதலான தானியங்களை அரைத்துப் பொடி செய்த சத்து மாவு, வாரம் இரு முறையேனும் மீன், முட்டை, கிடைக்கும்போது நாட்டுக் கோழியின் ஈரல், அவ்வப்போது கொய்யா, நெல்லிக்காய் இவையெல்லாம் சாத்தியப்படும் எனில், இன்னொரு சாய்னா நேவால் உங்கள் வீட்டிலிருந்தும் வரலாம். ஏனெனில், உடல் தசைகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவையான அமினோ அமிலங்களைச் சத்துமாவு தரும். கொய்யாவும் கோழி ஈரலும் தேவையான உயிர்ச் சத்தைத் தரும். மீனும் முட்டையும் எலும்பை உறுதியாக்கும் கால்சியம் தந்திடும். அறிவைத் துலங்கவைக்கும் DHAவை மீன் தரும். இவ்வளவு செல்வங்கள் நம்மைச் சுற்றிக் கொட்டிக்கிடக்கையில் டப்பா டானிக் எல்லாம் எதுக்குங்க?
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment