Wednesday 26 September 2012

ஆறாம் திணை - 06



டலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.
 இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!
அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.
'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது.  
மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துகளையும் முழுமையாகப் பெற மீனை வறுக்க/பொரிக்க வேண்டாம். வேகவைத்த மீனே சிறந்தது. 'இ.பி.ஏ.’, 'டி.ஹெச்.ஏ.’ (eicosapentaenoic acid, docosahexaenoic acid) எனும் இரண்டு 'ஒமேகா 3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டு ஒமேகா அமிலங்களை நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, பெரிதாக தாவரங்களிலும் இது கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும் இந்த இரண்டு 'ஒமேகா 3’ அமிலங்களையும் கடல் மீன்கள் நமக்குத் தரத் தயாராக வைத்திருக்கும். ஆனால், தற்போது, கடல் நீரில் அணுக் கழிவு நீரை 45 டிகிரி சூட்டில் நிமிடத்துக்கு இரண்டு லட்சம் லிட்டர் கலந்துவிட்டால், அந்தப் பக்கத்து மீன்கள் இந்த 'ஒமேகா 3’ சேர்த்துவைக்குமா; புற்றுநோய்க் காரணிகளோடு வந்து சேருமா; இல்லை செத்து மடிந்துபோகுமா என்று தெரியவில்லை.  
ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ அயிட்டங் கள் பொதுவாக வெகு விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்கு எனக் கொல்லப்படும் விலங்கு அதன் தோல், குடல் முழுமையும் நீக்கப்பட்ட உடன் வெகு விரைவாக அடுப்புக்குப் போய்ச் சேர வேண்டும். அதில் ஏற்படும் தாமதங்கள், நுண்ணுயிரிகளை இறைச்சி யில் பெருக்கம் செய்யத் தொடங்கும். ஆனால், இங்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக் கறி கம்பெனிகளின் குதூகல உணவகங்களில் வரும் கறித் துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம். திண்டுக்கல்லில் வெட்டப்பட்ட விலங்கு இறைச்சி, கேரளத்துக்குப் பயணித்து, அங்கு பிரித்தாளப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, பன்னாட்டுக் கடைகளுக்கு வருவதற்குள் அதற்குள் ஏற்றப்படும் ரசாயனக் கலவைகள் இயற்கைக்கே வெளிச்சம். இது பன்னாட்டுக் கறிப் பக்கோடாக்களுக்கு மட்டும் அல்ல மக்களே... சமைக்க ஏதுவாக, அழகான பேக்கிங்கில் அடைத்துவைக்கப்படும் 'சுத்தமான’ மாமிச அயிட்டங்களுக்கும் பொருந்தும். ஆக, எவ்வளவுக்கு எவ்வளவு ஃப்ரெஷ் ஆக வாங்கி, உங்கள் கைகளால் சுத்தப்படுத்திச் சாப்பிட வேண்டுமோ, அப்படிச் சாப்பிடுங்கள். முக்கியமாக அளவாகச் சாப்பிடுங்கள்!
பரிமாறுவேன்...

கருத்த கறி!
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்ன ஓர் அற்புதமான மருத்துவக் குணமிக்க  குழம்பு இது. நெய்மீன், சாளை, பாறை, வாவல், முள்வாளை போன்ற மீன்கள் இதற்கு ஏற்றவை. முதல் நாள் காலை வாங்கிய மீனை நன்றாகக் கழுவி மஞ்சள் தூள் - உப்பு கரைசலில் ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை சுக்கு, மிளகு, கறிவேப்பிலை, ஓமம், கடுகு, சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றைத் தனியாக வறுத்தெடுத்து அம்மியில் நேகாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதேபோல, கொத்துமல்லி, தேங்காய்த் துருவல், வரமிளகாய் ஆகியவற்றைத் தனியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மண் சட்டியில், இரண்டு கலவையையும் கூட்டி, குழம்புவைத்து, அதில் மீன்களை அடுக்கினாற்போல் பதமாகப் போட்டு, குழம்பு பொங்கும் நேரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்க வேண்டும். ஊட்டச்சத்தோடு, வயிறு உப்பு உபாதைகளையும் அகற்றும் குழம்பு இது. கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் ஏற்றது. சூடு காட்டி, சூடு காட்டி நாலைந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

Wednesday 19 September 2012

ஆறாம் திணை - 05

ழங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பேசாத உணவியலாளர்கள் இல்லை. ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம் கனிகளில் தான் பெரும்பாலும் தேக்கி வைக்கப்படும். தனது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக விருத்திசெய்ய தாவரம், தான் உருவாக்கும் விதைக்கு அளிக்கும் ஊட்டத்தைத்தான் பழங்களின் வாயிலாக நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.
 ஆனால், எந்தப் பழம் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? இது சிக்கலான கேள்வி. ஏனென்றால், எது நல்ல பழம் என்று உங்களுக்குப் பரிந்துரைப்பதற்குப் பின் பல்லாயிரம் கோடிச் சந்தை இருக்கிறது. பல நாடுகளின் வியாபாரக் கனவுகள், திட்டங்கள் இருக்கின்றன. எனக்கு அப்படி எல்லாம் திட்டங் கள் ஏதும் இல்லை என்பதால், உண்மையை நேர்மையாகச் சொல்கிறேன்.
தங்கம் விலை ஏறிக்கொண்டேபோவது செய்தியாகிறது. ஆனால், ஆப்பிள் விலை ஏறிக்கொண்டேபோவதை நீங்கள் கவனிக்கிறீர்களா? கடந்த வார நிலவரம்... பழ விற்பனை அங்காடிகளில் பளபளக்கும் ஆப்பிள் விலை ஒரு கிலோ 200 ரூபாய். ஆனால், பழ வண்டிக்காரரிடம் பூவன் வாழைப் பழம் ஒரு ரூபாய்க்கும் கற்பூரவல்லி வாழைப் பழம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த ஆப்பிள் விலை மட்டும் பறக்கிறதே... எப்படி? அமெரிக்க ஆப்பிள், சீன ஆப்பிள் என்று விதவிதமாக வந்து இறங்குகின்றனவே எப்படி? எல்லாம் சந்தை உருவாக்கி இருக்கும் மாயை.
ஆப்பிள் சத்துள்ள பழம்தான். ஆனால், அதைவிடவும் பல மடங்கு சத்துள்ள பழங்கள் நம்முடைய நாட்டுப் பழங்கள் (பார்க்க: ஒப்பீட்டு அட்டவணை). தவிர, உணவியல் தொடர்பான ஆராய்ச்சிகள் திரும்பத் திரும்பச் சொல்லும் விஷயம்... நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்களோ, அந்த மண்ணில் விளையும் காய், கனிகளே உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தருபவை என்பது. சரி, நாட்டுப் பழங்களில் எங்கும் கிடைக்கும் தலையாய ஐந்து பழங்களைப் பார்ப்போமா?
மலிவு விலை வாழையில் இருந்தே தொடங்கலாம். 'வாழைப் பழமா? ஐயையோ! வெயிட் போட்டுடும். அப்புறம் என் ஜீரோ சைஸ் என்னாவது?’ என்று பதறுவோருக்கு ஒரு செய்தி. சின்ன வாழைப் பழம் வெறும் 60-80 கலோரிதான் தரும். ஆனால், கூடவே, எலும்புக்கு கால்சியம், இதயத்துக்கு பொட்டாசியம், மலமிளக்க நார்ச்சத்து, மனம் களிக்க ஹார்மோன் ஊட்டம், உடனடியாக உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது குளுக்கோஸ் தரும் ஹைகிளைசிமிக் என அது தரும் பலன்களில் பல இங்கிலீஷ் கனிகளில் கிடையாது.
அதுவும் வாழையின் ஒவ்வொரு ரகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாலூட்டியும் போதாதபோது, திடீர் திட உணவுக்குத் திரும்பும் பச்சிளம் குழந்தைக்கு நாகர்கோவில் மட்டி அல்லது கூழாஞ்செண்டு ரகம் சிறந்தது. நடுத்தர வயதுக்காரர்களுக்கு, நார் நிறைய உள்ள திருநெல்வேலி நாட்டு வாழைப் பழம் சிறந்தது. மெலிந்து நோஞ்சானாக உள்ள குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமானால், நேந்திரன் வாழைப்பழம் சிறந்தது. மூட்டெல்லாம் வலிக்கிறது; குறிப்பாக குதிகாலில் வலிக்கிறது என்போருக்கு செவ்வாழைப் பழம் சிறந்தது. இப்படி குன்னூர் மலைப்பழம், கிருஷ்ணகிரி ஏலக்கி என இதன் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ள தனிச் சிறப்புகளைப் பட்டியலிடலாம். அதிலும் இந்த மொந்தன் பழம் இருக்கிறதே... அது தரும் குளுமைக்கு ஈடு இணையே இல்லை. தினமும் ஒரு மொந்தன் பழத்தைக் கனியவிட்டுச் சாப்பிட்டால், பல நோய்கள் உங்கள் பக்கம் தலை வைத்தும் படுக்காது. குறிப்பாக, மூல நோய். ஆனால், அதன் முரட்டுத் தோலை உறித்துச் சாப்பிட அலுத்துக்கொண்டு, உரிக்க ஏதுவாக மஞ்சளிலும் சேர்த்தி இல்லாமல், பச்சையிலும் சேர்த்தி இல்லாமல் மேக்கப் போட்டு வந்திருக்கும் ஹைப்ரீட் பெங்களூரு வாழையைச் சாப்பிடுகிறோம். இனி, காய்கறிக் கடைப் பக்கம் போனால், வறுக்க வாங்கும் பெரிய வாழைக்காயைப் பழுக்கவைத்துச் சாப்பிடுங்கள். மொந்தன் அதுதான் ஐயா!
ஒருகாலத்தில், 'கூறு போட்டு வித்துக்கோ; அல்லது கூவிக் கூவி வித்துக்கோ’ என்று ஒதுக்கப்பட்ட பழங்களுள் ஒன்று கொய்யா. ஆனால், இன்று உலகம் எங்கும் சிவப்புக் கொய்யாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார்கள். இந்தியா வில் கிடைக்கும் பழங்களிலேயே அற்புதமானது என்று கொய்யாவைச் சுட்டிக் காட்டுகிறார்கள் இந்திய உணவியல் கழக விஞ்ஞானிகள். ஆமாம், ஆப்பிளையும் கொய்யா தோற்கடித்துவிட்டது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள், உயிர்ச் சத்து, நார்ச் சத்து, இன்னும் பல கனிமச் சத்துகள் எனக் கொய்யாவின் மெய்யான விஷயங்களில் உணவு உலகம் அசந்துபோயிருக்கிறது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கே ஊட்டம் கொடுக்க, நோயை எதிர்த்து அவர்கள் போராடச் சிறந்த பழமாக எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் தெரியுமா? நெல்லிக்காய்.
பேராசிரியர் தெய்வநாயகம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், 'நெல்லி லேகியத்தை வைத்து மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வுகள் நல்ல ஊக்கம் அளிக்கின்றன!' என்கின்றனர்.
பழங்களின் ராணி என்று மாதுளையைச் சொல்வார்கள். புற்றைத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும் மாதுளைக்கு உண்டு. உடனே, பளபளப்பான ஆப்கன் மாதுளையை மனக் கண்ணில் கொண்டுவராதீர்கள். புளி மாதுளை, நாட்டு மாதுளை என்று கேட்டு வாங்குங்கள்.
நம் மண்ணில் பிறந்த இன்னோர் அற்புதப் பழம் எலுமிச்சை. வைட்டமின் சி சத்தும் கனிமங்களும் நிறைந்த இந்தப் பழம் உடலின் பித்தத்தைத் தணிக்கக்கூடியது என்று தமிழ் மருத்துவம் நெடுங்காலமாகக் கொண்டாடுகிறது. சாதாரணத் தலைச்சுற்றல், கிறுகிறுப்புப் பிரச்னை முதல் மனப்பதற்றம் / பிறழ்வு வரையிலான பல பித்த நோய்களுக்கு எலுமிச்சை நல்ல மருந்து.
மா, பலா, வாழை, நாவல், நெல்லி, இலந்தை இவை மட்டும்தான் நம் அன்றைய கனி ரகங்கள் என்று நினைத்திருக்கிறோம். அப்படி அல்ல. மணத் தக்காளிப் பழம், கோவைப் பழம், தூதுவளைப் பழம் என்று ஏராளமான பழங்கள் நம்மிடம் உண்டு. இந்தப் பழங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி வரலாறும் ஏராளமான மருத்துவக் குணங்களும் உண்டு. மெழுகு பூசப்பட்ட ஆப்பிள், பூச்சிக்கொல்லிகளில் நனைக்கப்பட்ட திராட்சை என்று வந்தேறிகள் விட்டுச்சென்ற மாயையில் இருந்து வெளியே வந்தால்தான், அவை எல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
- பரிமாறுவேன்...

Wednesday 12 September 2012

ஆறாம் திணை - 04

புற்றுநோய்...
 இந்த வார்த்தையைப் படிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு நடுக்கம் எழுகிறதா?
ஒருகாலத்தில், தமிழ் சினிமாவின் 13-வது ரீலில்தான் புற்றுநோய் வரும். ஆனால், இப்போது பக்கத்து வீட்டு அத்தை, ஒன்றுவிட்ட சித்தப்பா, நண்பனின் குழந்தை என எங்கு பார்த்தாலும் புற்றுநோயின் தாக்கம். புற்று நோயின் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன என்கிறது அரசு சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவரங்கள்.
புற்றுநோய் வர என்ன காரணம் என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? அறிவியலும் மருத்துவமும் ஆயிரமா யிரம் காரணங்களை அடுக்கினாலும் முக்கியமான, சுருக்கமான ஒரு காரணம் உண்டு... நம் வாழ்க்கை முறை!
நம் கண்களுக்கு எதிரே மரங்கள் வெட்டப்படுகின்றன. அமைதியாகக் கடக்கிறோம். நச்சுக் கழிவுகள் குப்பைகளாகக் கொட்டப் படுகின்றன. அமைதியாகக் கடக்கிறோம். ஆறு மாதங்கள் வரைக்கும் கெடாது என்று பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அமைதியாகச் சாப்பிடுகிறோம். புகையைச் சுவாசித்து, நச்சுத் தண்ணீரைக் குடித்து, பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் சேர்ந்த உணவைச் சாப்பிட்டு வாழ்ந்தால், புற்றுநோய் வராமல் என்ன செய்யும் நண்பர்களே?
து அவசர உலகம். கரிசனம் காட்டவோ, அக்கறையாக மெனக்கெடவோ முடியாத நெருக்கடியில்தான் நம்மில் பலர் இருக்கிறோம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்குச் சமையல் அறையில் பெண்கள் அதிக நேரம் செலவிட்டது அந்தக் காலம். அதே குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அதே பெண்கள், அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவது இந்தக் காலம். 'ஈவது விலக்கேல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவறேல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர் உடனடிக் கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடிக் கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தை நீங்கள் தொடங்கலாம்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். யார் யார் எல்லாம் உடனடிக் கலாசாரத்தின் ஆபத்பாந்தவன்கள் என்று. இன்ஸ்டன்ட் அல்லது ரெடி டு ஈட் சமாசாரங்களில் பாலிதீன் பயன்பாடு தொடங்கி முந்தைய நாள் செய்ததை ஃப்ரிஜ்ஜில்வைத்து இன்றைக்குச் சாப்பிடுவது வரை எங்கெங்கும் அவசர யுகப் பயன்பாடே வியாபித்து இருக்கிறது.
சமைத்த உணவு, சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் துவங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வொன்றாகத் தொடங்குவது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைக்க, நொதிக்காமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களைச் சேர்த்துதான் 'உடனடியாகச் சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்தைக்கு வரு கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள். அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் புட்டிகளில். இதை வாங்கிப்போய் நீங்கள் எங்கே வைப்பீர்கள்? ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வளவும் சொந்த செலவில் சூனியம்வைத்துக்கொள்ளும் விஷயங்கள்தான்.
'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும் போது சமைத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்வைத்துச் சாப்பி டலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டி லில்வைப்பது ஆகட்டும்; காய் கறிக் கடையில் வாங்கிய காய்கனிகளைப் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் பிரித்துவைப்பது ஆகட்டும்;  இன்னும் புத்திசாலித்தனமாக இரவே காய்களை வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு சமர்த்தாக ஃபிரிஜ்ஜில்வைத்து, காலையில் சமையல் செய்து வேகமாகக் கிளம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நீங்களே வழிவகுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை.
அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம். இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டின் தருமோ என்னவோ... கண்டிப்பாக புற்றுநோயைத் தரக்கூடும்.
பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்ல முடியுமா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்லும் குழந் தைகள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாம் நம் வளர்ப்புதான். அழகான பிளாஸ்டிக் டப்பர் வேர் வாங்கி, அதில் சூடான வத்தல் குழம்பைக் கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குழம்பில் மெள்ளக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாதுதான். எப்போதுமே ஒன்றும் செய்யாமல் இருக்குமா என்ன?
புற்றுநோய்க்கான காரணிகளில் ரொம்ப முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையறாக்களும்தான்.
புற்றுநோய் மட்டுமா? சர்க்கரை நோய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநியோகத்துக்கு பி.வி.சி. குழாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று இப்போது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு.
ரொம்பப் பயமுறுத்துவதற்கோ, அதிகப்படியான கற்பனையிலோ இதை எல்லாம் எழுதவில்லை. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை வெளி யிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் மேற் சொன்ன பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது புற்றுநோயை உறுதியாகத் தோற்றுவிக்கும் என்று பொருள். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).
இந்த நேரத்தில், தேசிய உணவியல் கழகம் சொல்லும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான  தகவலைத் தருகிறேன்.
'நீர்க் காய்கறியைக் கூட்டாகவைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும் முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக் கரைசலில் வேக விடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? 'புளியில் வேக வைத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.  நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்று சொல்கிறது தேசிய உணவியல் கழகம்.
நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்... பார்த்தீர்களா?
'சரி டாக்டர். பிளாஸ்டிக்கைத் தவிர்க்கிறோம், எவர் சில்வர் பாத்திரங்களுக்கு மாறுகிறோம். அவசர, அத்தியாவசியம் இல்லாமல் ஃப்ரிஜ்ஜைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கிறோம். நீங்கள் சொல்லும் ரெடி டு ஈட் சமாசாரங்களையும் விட்டுவிடுகிறோம். ஆனால், அவசர உலகில் வாழும்      எங்களைப் போன்றவர்களுக்கு மாற்று உணவு என்ன இருக்கிறது?’ என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. நிறைய இருக்கின்றன. முக்கியமானது அவல். கைப்பையில் கொஞ்சம் சிவப்பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்ல மும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி நேரம் ஊறவைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்.
உடனடியாகச் செய்யக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம். அதை வாணலியில் வறுத்து, பனை வெல்லம் அல்லது வெல்லத்தை நன்கு உதிர்த்து அதில் கிளறிப்போட்டு, சூடாக இரண்டு ஸ்பூன் நெய்விட்டு சூட்டோடு உருண்டையாகப் பிடித்துவையுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் தேவையான பல கனிமங்கள் நிறைந்த இந்த உருண்டை ருசியோடு பசியாற்றும்.
'எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது டாக்டர்!’ என்று சொல்வீர்கள் என்றால், பொரி வாங்கிக்கொள்ளுங்கள். கொஞ்சம் மஞ்சள் தூள், காரம் சேர்த்து பொட்டலம் கட்டிக்கொள்ளுங்கள். இன்னும் நிறைய உண்டு. மனம் இருந்தால், மார்க்கம் உண்டு நண்பரே... எல்லாவற்றுக்குமே!
- பரிமாறுவேன்...  

Wednesday 5 September 2012

ஆறாம் திணை - 03

டந்த வருட வியாபாரம்  1,500 கோடி. அடுத்த ஓரிரு வருடங்களில் இது    3,000 கோடியைத் தொடும் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். எந்தப் பொருளுக்கு இப்படி ஒரு சந்தை என்று கேட்கிறீர்களா? டூ மினிட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸுக்குத்தான்.
 25 வருடங்களுக்கு முன்பு கடையில் ஓரமாக ஒரு மூலையில் அடுக்கிவைக்கப்பட்ட வஸ்து, இன்றைக்கு, மளிகைச் சாமான் ரசீதில் தவிர்க்கவே முடியாத ஓர் அங்கம். உலகம் முழுக்கவே 'குப்பை உணவு’, 'சத்து இல்லாதது’ என்று உணவியல் நிபுணர்கள் குறிப்பிடும் நூடுல்ஸுக்கு எப்படி இப்படி ஒரு சந்தை சாத்தியமானது? 'ஒரு பொருளைப் பெரியவர்களுக்குப் பிடிக்கச் செய்தால், சந்தையில் அதற்கு என்று ஓர் இடத்தை உருவாக்கிவிடலாம்; குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்துவிட்டாலோ அதற்கு என்று ஒரு சந்தையையே உருவாக்கிவிடலாம்’ என்ற சந்தைப் பொருளாதாரச் சூட்சுமம்தான் காரணம்.
இந்தியாவுக்கு நூடுல்ஸ் வந்த புதிதில் 'இது என்ன புழுப் புழுவாய்’ என்றுதான் பார்க்கப்பட்டது. மார்க்கெட் இழந்த நடிகையை அம்மாவாக்கி, 'இருடா கண்ணா... இதோ... ரெண்டே நிமிஷம்’ என்று சொல்லவைத்து விளம்பரப்படுத்தி, அப்புறம் மூக்கைத் துளைக்கும் நம்ம ஊர் மசாலா வாசத்தைச் சேர்த்தவுடன், வியாபாரம் கோடிக் கோடியாகக் கொட்டத் தொடங்கிவிட்டது.
சரி... நூடுல்ஸில் நமக்கு அப்படி என்னதான் பிரச்னை? இரண்டே நிமிடங்களில் தட்டுக்கு வர வேண்டும் என்பதற்கும், வாசம் மூக்கைத் துளைப்பதற்கும் அதில் சேர்க்கப்படும் வேதிப் பொருள்தான் பிரச்னை! நூடுல்ஸில் வாசத்துக்காகச் சேர்க்கப்படும் 'னீஷீஸீஷீ sஷீபீவீuனீ ரீறீutணீனீணீtமீ  மோனோ சோடியம் க்ளூடமேட்’  (எம்.எஸ்.ஜி.) என்னும் வேதிப் பொருள் குழந்தை களின் உடலுக்கு எவ்விதத்திலும் நல்லது இல்லை.
வருஷத்துக்குப் பல மில்லியன் டாலருக்கு விற்கும் இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’டைப் பற்றி டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான 'தி டேஸ்ட் தட் கில்’ புத்தகம்தான் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மூளையின் ஹைப்போ தலாமஸ் வரை பாதிப்பைத் தரக் கூடிய இந்த ரசாயனம் சாதாரண வாந்தி, வயிற்று வலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பது வரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்கின்றன ஆய்வுகள்.
இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’  நூடுல்ஸில் மட்டும் இல்லை. துரித உணவகங்களிலும் பல சைனீஸ் உணவகங்களிலும் ஏராளமான உணவுப் பொருட்களில் இது பயன்படுத்தப் படுகிறது. 'இதே காய்கறிகளைப் போட்டுத்தானே நானும் சமைக்கிறேன். அங்கே மட்டும் கடாய் வெஜிடபிள் வாசம் ஒரு தூக்கு தூக்குதே எப்படி?’ என்று மண்டையை உடைத்துக்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு ஒரு செய்தி... கடைகளில் கடைசியாகக் கொஞ்சம் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ எனும் ரசாயனத்தைப் போட்டு வாணலியை இறக்குவதால்தான் அப்படி மணக்கிறது.
'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை; ஆதாரபூர்வமாக இதுவரை ஆய்வுகள் எதுவும் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ கெட்டது எனச் சொல்லவில்லை!’ என்று வியாபாரிகள் தரப்பு சொன்னாலும், 'கொஞ்சம் பார்த்துப் பயன்படுத்துங்கப்பா... அட்டையில் இதைச் சேர்த்திருக்கோம்னு போடுங்க... பரவாயில்லைனு நினைக்கிறவன் சாப்பிட்டுப் போகட்டும்’ என எச்சரிக்கிறது அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுத் துறை. உடல் எடையைக் கூட்டி, மற்ற சாப்பாட்டை மறக்க/மறுக்கவைக்கும் இந்தச் சமாசாரம் நமக்குத் தேவையா? அவசர உலகின் அம்மா, அப்பாக்கள் கொஞ்சம் யோசியுங்கள்!
ப்போதோ படித்த எட்டாம் வகுப்பு வரலாற் றுப் புத்தகத்தைப் புரட்டும்போது, உள்ளே பத்திர மாக வைத்திருந்த சாக்லேட் தாளையோ, பள்ளி நண்பனின் புகைப்படத்தையோ பார்க்கும்போது ஏற்படும் பரவசம் இருக்குமே... அதுபோலத்தான் நிலக்கடலையைப் பார்க்கும்போதும் எனக்குள் இருக்கும். 'ராசா! ஒரு நாலணாக்கு அவிச்ச கடலை வாங்கிட்டுப் போடா’னு பள்ளி வாசலில் விற்ற பாட்டியை இப்போது பார்க்க முடியவில்லை. 'டணங் டணங்’ என்று இரும்பு வாணலியை இசை நயத்துடன் தட்டி, வறுத்த கடலை விற்றுச் செல்லும் வீதி வியாபாரி, கடற்கரையோடு காணாமல் போய்விட்டார். கால மாற்றத்தில் கொஞ்சம் வேகமாகக் காணாமல்போகும் கலாசார இழப்புகளில் கடலை மிட்டாயும் இப்போது சேர்ந்துவிட்டது. ஹசல் நட்டும் பாதாமும் முந்திரியும் இருக்கும் இடத்தில் கடலை மிட்டாய்க்கு இடம் இல்லை. கோகோவுக்கும் மில்க் சாக்லேட்டுக்கும் பரிதவிக்கும் பல பள்ளிக் குழந்தைகள் கடலை மிட்டாயை நேசிப்பது இல்லை. ஏன்? பிரச்னை, கடலை மிட்டாயிலோ அல்லது குழந்தைகளிடமோ இல்லை. வழக்கம்போல் நவீன வணிகத்தின் நெரிசலும் கூச்சலும்தான் இந்த ஓரவஞ்சனைக்குக் காரணம். குழந்தைகள் நேசிக்கும்படி அழகாக, மினுமினுப்பாகப் பல வண்ண வெளி ரேப்பரோ, தங்க நிறத்தில், வெள்ளி நிறத்தில் உள்சட்டையோ கடலை மிட்டாய்க்கு அணிவிக்கப்படவில்லை. ஜூனியர் சூப்பர் சிங்கருக்கோ, சூப்பர் டான்ஸருக்கோ தலைக்கு மேல் கடலை மிட்டாய் மழை கொட்டப்படுவது இல்லை. புரட்சி நடிகர்களோ, அழகு ராணிகளோ, பணக்கார விளையாட்டுகளின் வெள்ளை வீரர்களோ, இந்த மிட்டாய் சாப்பிடுவதாக எங்கும் சொல்லவே இல்லை. உண்மையில் கடலை மிட்டாய் இழப்பு என்பது கலாசார இழப்பு மட்டும் அல்ல; குழந்தைகளுக்கு ஓர் ஊட்டச் சத்துமிக்க தின்பண்ட இழப்பும்கூட!
பல் விளக்கிய பரபரப்பு நீங்கும் முன்னர், குழந்தையின் பிஞ்சுக் கால்கள் நைந்துபோகுமாறு ஷூவுக்குள் திணித்து, ஆட்டோவுக்குள் திணித்து, வகுப்பறைக்குள் திணித்து, கடைசியாக மூளைக்குள் திணிப்பைத் துவங்கும் திணிப்புக் கல்வி யுகத்தில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் சங்கதியும் சங்கடங்களும் ரொம்ப முக்கியமானவை. கடலை மிட்டாயில் புரதம் அதிகம். கிட்டத்தட்ட 25 சதவிகிதம் புரதச் சத்து அதில் இருக்கிறது. புரதத்துடன் கூடுதலாகக் கிடைப்பது துத்தநாகச் சத்து (பார்க்க அட்டவணை).  நோய் எதிர்ப்பாற்றல் வேண்டும் எனில், இந்தப் புரதமும் துத்தநாகச் சத்தும்தான் ஒவ்வொரு நாளும் அதிகம் வேண்டும் என்கிறது நவீன அறிவியல்.
அதெல்லாம் சரி... கடலை மிட்டாயில் எண்ணெய்  இருக்கிறதே என்பர் கொலஸ்ட்ரால் பயத்தில் உள்ளவர். அவர்களுக்கு ஒரு செய்தி... முதலில் கடலை எண்ணெயிலேயே கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது. நிறைய பாலி அன்சேச்சுரேட்டும் மோனோ அன்சேச்சுரேட்டும் உள்ள கொழுப்பு அமிலங்கள்தான் அதிகம் உள்ளன. கடலையே இப்படி என்றால், கடலை மிட்டாய் இன்னும் ஒரு படி மேல்.
கடலை மிட்டாய்  அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க் கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும் (பார்க்க அட்டவணை).
கடலை மிட்டாய் என்றதும் நினைவுக்கு வருவது கரிசல்காட்டுப் பூமியான கோவில்பட்டி. மொத்த ஊரும் கோகோ, பால்பவுடர் சாக்லேட் டுகளுக்குப் போன பின்பும் கோவில்பட்டியில் இன்றும் 50 குடும்பங்கள் கடலை மிட்டாய் தயாரித்து கோலாலம்பூர் வரைக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றன.
அப்படிக் கடலை மிட்டாய் தயாரிக்கும் ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னது... 'ரெண்டு மாசமானாலும் இது கெட்டுப்போகாது சார். அதோட இயல்பு அப்படி. நாளாச்சுன்னா மொறுமொறுப்பு குறையும். இந்த மொறுமொறுப்பும்கூட போகாம இருக்க கெமிக்கல் சேர்க்கச் சொன்னாங்க சார். ஆனா, நாங்க செய்ய மாட்டோம். புள்ளைங்க சாப்பிடுறது. நம்ம புள்ளைங்களா இருந்தா, தப்பானதைக் கொடுப்போமா சார்?'' என்று அடுத்த தலைமுறை மீது அக்கறையோடு கேட்டார் அழுக்கு வேட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!
பரிமாறுவேன்...