Wednesday 5 September 2012

ஆறாம் திணை - 03

டந்த வருட வியாபாரம்  1,500 கோடி. அடுத்த ஓரிரு வருடங்களில் இது    3,000 கோடியைத் தொடும் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். எந்தப் பொருளுக்கு இப்படி ஒரு சந்தை என்று கேட்கிறீர்களா? டூ மினிட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸுக்குத்தான்.
 25 வருடங்களுக்கு முன்பு கடையில் ஓரமாக ஒரு மூலையில் அடுக்கிவைக்கப்பட்ட வஸ்து, இன்றைக்கு, மளிகைச் சாமான் ரசீதில் தவிர்க்கவே முடியாத ஓர் அங்கம். உலகம் முழுக்கவே 'குப்பை உணவு’, 'சத்து இல்லாதது’ என்று உணவியல் நிபுணர்கள் குறிப்பிடும் நூடுல்ஸுக்கு எப்படி இப்படி ஒரு சந்தை சாத்தியமானது? 'ஒரு பொருளைப் பெரியவர்களுக்குப் பிடிக்கச் செய்தால், சந்தையில் அதற்கு என்று ஓர் இடத்தை உருவாக்கிவிடலாம்; குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்துவிட்டாலோ அதற்கு என்று ஒரு சந்தையையே உருவாக்கிவிடலாம்’ என்ற சந்தைப் பொருளாதாரச் சூட்சுமம்தான் காரணம்.
இந்தியாவுக்கு நூடுல்ஸ் வந்த புதிதில் 'இது என்ன புழுப் புழுவாய்’ என்றுதான் பார்க்கப்பட்டது. மார்க்கெட் இழந்த நடிகையை அம்மாவாக்கி, 'இருடா கண்ணா... இதோ... ரெண்டே நிமிஷம்’ என்று சொல்லவைத்து விளம்பரப்படுத்தி, அப்புறம் மூக்கைத் துளைக்கும் நம்ம ஊர் மசாலா வாசத்தைச் சேர்த்தவுடன், வியாபாரம் கோடிக் கோடியாகக் கொட்டத் தொடங்கிவிட்டது.
சரி... நூடுல்ஸில் நமக்கு அப்படி என்னதான் பிரச்னை? இரண்டே நிமிடங்களில் தட்டுக்கு வர வேண்டும் என்பதற்கும், வாசம் மூக்கைத் துளைப்பதற்கும் அதில் சேர்க்கப்படும் வேதிப் பொருள்தான் பிரச்னை! நூடுல்ஸில் வாசத்துக்காகச் சேர்க்கப்படும் 'னீஷீஸீஷீ sஷீபீவீuனீ ரீறீutணீனீணீtமீ  மோனோ சோடியம் க்ளூடமேட்’  (எம்.எஸ்.ஜி.) என்னும் வேதிப் பொருள் குழந்தை களின் உடலுக்கு எவ்விதத்திலும் நல்லது இல்லை.
வருஷத்துக்குப் பல மில்லியன் டாலருக்கு விற்கும் இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’டைப் பற்றி டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான 'தி டேஸ்ட் தட் கில்’ புத்தகம்தான் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மூளையின் ஹைப்போ தலாமஸ் வரை பாதிப்பைத் தரக் கூடிய இந்த ரசாயனம் சாதாரண வாந்தி, வயிற்று வலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பது வரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்கின்றன ஆய்வுகள்.
இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’  நூடுல்ஸில் மட்டும் இல்லை. துரித உணவகங்களிலும் பல சைனீஸ் உணவகங்களிலும் ஏராளமான உணவுப் பொருட்களில் இது பயன்படுத்தப் படுகிறது. 'இதே காய்கறிகளைப் போட்டுத்தானே நானும் சமைக்கிறேன். அங்கே மட்டும் கடாய் வெஜிடபிள் வாசம் ஒரு தூக்கு தூக்குதே எப்படி?’ என்று மண்டையை உடைத்துக்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு ஒரு செய்தி... கடைகளில் கடைசியாகக் கொஞ்சம் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ எனும் ரசாயனத்தைப் போட்டு வாணலியை இறக்குவதால்தான் அப்படி மணக்கிறது.
'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை; ஆதாரபூர்வமாக இதுவரை ஆய்வுகள் எதுவும் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ கெட்டது எனச் சொல்லவில்லை!’ என்று வியாபாரிகள் தரப்பு சொன்னாலும், 'கொஞ்சம் பார்த்துப் பயன்படுத்துங்கப்பா... அட்டையில் இதைச் சேர்த்திருக்கோம்னு போடுங்க... பரவாயில்லைனு நினைக்கிறவன் சாப்பிட்டுப் போகட்டும்’ என எச்சரிக்கிறது அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுத் துறை. உடல் எடையைக் கூட்டி, மற்ற சாப்பாட்டை மறக்க/மறுக்கவைக்கும் இந்தச் சமாசாரம் நமக்குத் தேவையா? அவசர உலகின் அம்மா, அப்பாக்கள் கொஞ்சம் யோசியுங்கள்!
ப்போதோ படித்த எட்டாம் வகுப்பு வரலாற் றுப் புத்தகத்தைப் புரட்டும்போது, உள்ளே பத்திர மாக வைத்திருந்த சாக்லேட் தாளையோ, பள்ளி நண்பனின் புகைப்படத்தையோ பார்க்கும்போது ஏற்படும் பரவசம் இருக்குமே... அதுபோலத்தான் நிலக்கடலையைப் பார்க்கும்போதும் எனக்குள் இருக்கும். 'ராசா! ஒரு நாலணாக்கு அவிச்ச கடலை வாங்கிட்டுப் போடா’னு பள்ளி வாசலில் விற்ற பாட்டியை இப்போது பார்க்க முடியவில்லை. 'டணங் டணங்’ என்று இரும்பு வாணலியை இசை நயத்துடன் தட்டி, வறுத்த கடலை விற்றுச் செல்லும் வீதி வியாபாரி, கடற்கரையோடு காணாமல் போய்விட்டார். கால மாற்றத்தில் கொஞ்சம் வேகமாகக் காணாமல்போகும் கலாசார இழப்புகளில் கடலை மிட்டாயும் இப்போது சேர்ந்துவிட்டது. ஹசல் நட்டும் பாதாமும் முந்திரியும் இருக்கும் இடத்தில் கடலை மிட்டாய்க்கு இடம் இல்லை. கோகோவுக்கும் மில்க் சாக்லேட்டுக்கும் பரிதவிக்கும் பல பள்ளிக் குழந்தைகள் கடலை மிட்டாயை நேசிப்பது இல்லை. ஏன்? பிரச்னை, கடலை மிட்டாயிலோ அல்லது குழந்தைகளிடமோ இல்லை. வழக்கம்போல் நவீன வணிகத்தின் நெரிசலும் கூச்சலும்தான் இந்த ஓரவஞ்சனைக்குக் காரணம். குழந்தைகள் நேசிக்கும்படி அழகாக, மினுமினுப்பாகப் பல வண்ண வெளி ரேப்பரோ, தங்க நிறத்தில், வெள்ளி நிறத்தில் உள்சட்டையோ கடலை மிட்டாய்க்கு அணிவிக்கப்படவில்லை. ஜூனியர் சூப்பர் சிங்கருக்கோ, சூப்பர் டான்ஸருக்கோ தலைக்கு மேல் கடலை மிட்டாய் மழை கொட்டப்படுவது இல்லை. புரட்சி நடிகர்களோ, அழகு ராணிகளோ, பணக்கார விளையாட்டுகளின் வெள்ளை வீரர்களோ, இந்த மிட்டாய் சாப்பிடுவதாக எங்கும் சொல்லவே இல்லை. உண்மையில் கடலை மிட்டாய் இழப்பு என்பது கலாசார இழப்பு மட்டும் அல்ல; குழந்தைகளுக்கு ஓர் ஊட்டச் சத்துமிக்க தின்பண்ட இழப்பும்கூட!
பல் விளக்கிய பரபரப்பு நீங்கும் முன்னர், குழந்தையின் பிஞ்சுக் கால்கள் நைந்துபோகுமாறு ஷூவுக்குள் திணித்து, ஆட்டோவுக்குள் திணித்து, வகுப்பறைக்குள் திணித்து, கடைசியாக மூளைக்குள் திணிப்பைத் துவங்கும் திணிப்புக் கல்வி யுகத்தில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் சங்கதியும் சங்கடங்களும் ரொம்ப முக்கியமானவை. கடலை மிட்டாயில் புரதம் அதிகம். கிட்டத்தட்ட 25 சதவிகிதம் புரதச் சத்து அதில் இருக்கிறது. புரதத்துடன் கூடுதலாகக் கிடைப்பது துத்தநாகச் சத்து (பார்க்க அட்டவணை).  நோய் எதிர்ப்பாற்றல் வேண்டும் எனில், இந்தப் புரதமும் துத்தநாகச் சத்தும்தான் ஒவ்வொரு நாளும் அதிகம் வேண்டும் என்கிறது நவீன அறிவியல்.
அதெல்லாம் சரி... கடலை மிட்டாயில் எண்ணெய்  இருக்கிறதே என்பர் கொலஸ்ட்ரால் பயத்தில் உள்ளவர். அவர்களுக்கு ஒரு செய்தி... முதலில் கடலை எண்ணெயிலேயே கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது. நிறைய பாலி அன்சேச்சுரேட்டும் மோனோ அன்சேச்சுரேட்டும் உள்ள கொழுப்பு அமிலங்கள்தான் அதிகம் உள்ளன. கடலையே இப்படி என்றால், கடலை மிட்டாய் இன்னும் ஒரு படி மேல்.
கடலை மிட்டாய்  அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க் கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும் (பார்க்க அட்டவணை).
கடலை மிட்டாய் என்றதும் நினைவுக்கு வருவது கரிசல்காட்டுப் பூமியான கோவில்பட்டி. மொத்த ஊரும் கோகோ, பால்பவுடர் சாக்லேட் டுகளுக்குப் போன பின்பும் கோவில்பட்டியில் இன்றும் 50 குடும்பங்கள் கடலை மிட்டாய் தயாரித்து கோலாலம்பூர் வரைக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றன.
அப்படிக் கடலை மிட்டாய் தயாரிக்கும் ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னது... 'ரெண்டு மாசமானாலும் இது கெட்டுப்போகாது சார். அதோட இயல்பு அப்படி. நாளாச்சுன்னா மொறுமொறுப்பு குறையும். இந்த மொறுமொறுப்பும்கூட போகாம இருக்க கெமிக்கல் சேர்க்கச் சொன்னாங்க சார். ஆனா, நாங்க செய்ய மாட்டோம். புள்ளைங்க சாப்பிடுறது. நம்ம புள்ளைங்களா இருந்தா, தப்பானதைக் கொடுப்போமா சார்?'' என்று அடுத்த தலைமுறை மீது அக்கறையோடு கேட்டார் அழுக்கு வேட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!
பரிமாறுவேன்...

No comments:

Post a Comment