Wednesday 10 July 2013

ஆறாம் திணை - 43

ரைவேக்காடாக வெந்த அரிசியை வனஸ்பதியால் வறுத்துச் சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. ஆனால், இப்போது அந்த ஃப்ரைடு ரைஸ் இல்லாமல் இரவுவிருந்துகள் கிடையாது. 'அரிசியைவிட கோதுமை நல்லதாம்’ என நம்மில் ஆழமாக விதைக்கப் பட்ட தவறான கருத்தினால், உருளை, கேரட், காலிஃப்ளவர் என இங்கிலீஷ் காய்கறிகளின் பயன்பாடு ஏகத்துக்கும் பெருகிவிட்டது. சப்பாத்திக்கு வத்தக்குழம்பும், கத்திரிக்காய் பொரியலும் வைத்து நமக்குச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லை என்பதால், கோபி மஞ்சூரிய னுக்குக் காலிஃப்ளவரும், கடாய் வெஜிடபிளுக்கு உருளையின் பயனும் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
'ஊட்டியில் இருந்து வரும் பீட்ரூட், கேரட் எல்லாம் நமக்கானது அல்ல’ என்பதைச் சொல்லி, கத்திரியையும் வெண்டைக்காயையும் கடை விரித்து இருக்கும் சீவலப்பேரி பாட்டியிடம் மண்டியிட்டு, கூறாகவும் கொசுறாகவும் வாங்கிவரச் சொல்லித்தந்த அன்றைய அனுபவம் இன்று நம் குழந்தைகளுக்கு இல்லை. 'பிராக்கோலி கேன்சருக்கு நல்லதாமே; மஷ்ரூம்ல வைட்டமினும் புரதமும் கூடுதலாமே... அதுல குருமா வை மம்மி...’ என இங்கிலீஷ் காய்கறிக்கு வக்காலத்து வாங்கும் நம் குழந்தைகளுக்கு உள்ளூர் காய்கறிகளின் உசத்திபற்றி யாரும் சொல்லித் தரவே இல்லை. முந்தைய தலைமுறையோடு நாம் தொலைத்து வருவனவற்றில்  நாட்டுக் காய்கறிகளுக்கும் தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது.
'கரிக்காய் பொரித்தாள்;
கன்னிக்காய்  தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடி செய்தாள்;
உருக்கமுள்ள அப்பைக்காய்
நெய் துவட்டல் ஆக்கினாள்’
- என்ற காளமேகப் புலவரின் பாடல் சொன்ன அத்திக்காய் (கரிக்காய்) பொரியல், வாழைக்காய் (கன்னிக்காய்) தீயல், மாங்காய் (பரிக்காய்) பச்சடி மற்றும் கத்தரி (அப்பைக் காய்) நெய் துவட்டல் நம்மைவிட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம் உயர்த்திப் பாடிய பாகல், பீர்க்கு, கொத்தவரை, மாதுளங்காய் வகை களில் பாதி இப்போது நம்மிடம் கிடையாது. மிச்சம் இருப்பவையும் வீரிய ஒட்டுரக மேக்அப்பில், கூடுதல் அழகாக இருந்தாலும் பயமாக இருக்கிறது. ஆனால், ஒரு முக்கிய மான விஷயம்... அத்தனை நாட்டுக் காய் கறிகளும் சத்து விஷயத்தில் இங்கிலீஷ் காய் களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல.
கத்திரிக்காய், குறைந்த கலோரியுடன், அதிக நார்ச் சத்துடன், குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸுடன் உடல் எடை குறைப்புக் கும் கொலஸ்ட்ரால் குறைப்புக்கும் உதவும். கத்திரி விதையில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும், அதன் கருநீலத் தோலில் நிறைந்துள்ள பாலிஃபீனால்களால் கிடைக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள், சர்க்கரை, புற்றுநோய் முதலான பல வாழ்வியல் நோய்களுக்குப் பலன் அளிக்கக் கூடியது. 'கத்திரிக்காய் பித்தங்கன்றைக் கபந் தீர்ந்துவிடும். முத்தோஷம் போக்கும்’ எனச் சித்தர்கள் பாடியதை, பி.டி. கத்திரிக்கு எதிரான போராட்டத்தில் எடுத்துச் சொன்னபோது, அதை முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி ஏற்றுக்கொண்டு, கத்திரியின் மரபு விளையாட்டை நிறுத்திவைத்தார். ஆனால், இன்றும் பல மெத்தப் படித்த அறிவியல் அறிஞர்கள், 'கத்திரிக்காய்க்கு அப்படி எல்லாம் ஒண்ணும் சிறப்பு இல்லை. பாரம்பரிய மருத்துவத்தில் அதைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை. மரபணு மாற்றம் செய்யலாம்’ என தற்போதும் நூல் எழுதிவருவது வேதனை அளிக்கிறது. கத்திரியில் பொய்யூர் கத்திரி, கண்ணாடிக் கத்திரி, வரிக் கத்திரி, பச்சைக் கத்திரி என 500-க்கும் மேற்பட்ட வட்டார வகைகள் உண்டு. ஒவ்வொரு வகைக்கும் ஒரு மணம், ஒரு குணம் எனப் பண்புகளும் உண்டு. அலர்ஜிக்காரர்கள் தவிர, அத்தனை பேருக் கும் நாட்டுக் கத்திரி உணவல்ல; ஊட்ட மருந்து!
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வருமா என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. அது தன் மக்குப் பையனைச் சாப்பிடவைக்க யாரோ ஒரு கணக்கு டீச்சர் உருவாக்கிய கதையாகக்கூட இருக்கலாம். ஆனால், வெண்டைக்காய் குளிர்ச்சி தரும், வயிற்றுப் புண் நீக்கும், சர்க்கரை நோய்க்கு நல்லது என்பதற்குப் பல மருத்துவச் சான்றுகள் உள்ளன. எண்ணெயில் வதக்கி, அதைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிச் சுவைக்காமல், லேசாக வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது. ஆனால் கண்ணாடி, பச்சை, சிவப்பு, கஸ்தூரி என்ற ஊருக்கு ஒன்றாக இருந்த வெண்டையின் வட்டார வகைகள் எல்லாம் அருகிப்போய், இன்று 'ஆபீஸ் வெண்டை’ எனும் ஒட்டு வீரிய ரகம்தான் விவசாயிகளின் ஓட்டுக்களை அள்ளுகிறது. கஸ்தூரி வெண்டையின் நரம்பை உரமாக்கும் பயனை ஆபீஸ் வெண்டை தராது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவரைக்காயும் அப்படித்தான். கொலஸ்ட்ராலைக் குறைக்கும், வைட்டமின்-பி சத்தையும் புரதத்தையும் சேர்த்துத் தரும். அவரை விதை ஆண்மைக் குறைவுக்கும்கூட நல்லது. அவரைக் குடும்பத்தின் ஒண்ணுவிட்ட மச்சினனான கொத்தவரங்காயை வாய்வுக் குத்து என நம்மில் பலரும் ஒதுக்கிவிடுவது உண்டு. ஆனால், அதன் விதைப் பிசினான, guar gum உலகில் மிக அதிகம் தேடப்படும் பிசின். அதில் உள்ள நார்ச் சத்துகள் ரத்தக் கொழுப்பைக்கூடக் குறைக்க உதவுமாம்.
அதேபோல், பெண்களுக்கு வெள்ளைப்படுதலை எளிதாகப் போக்கிடும் வெள்ளைப் பூசணியும், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கோவைக்காயும், சிறுநீரகக் கல்லை வெளியேற்றிட உதவிடும் சுரைக்காயும், உடல் சூட்டைத் தணித்து, சிறுநீர் எரிச்சலைப் போக்கும் உப்புக்கனிமச் சத்துகள் நிறைந்த பீர்க்கங்காயும் நலம் பயக்கும் நம் நாட்டுக் காய்கறிகள்தான்.
'அட... நாட்டுக் காய்கறிதானே’ என்று இனியும் அலட்சியப்படுத்திட வேண்டாம். நாளைய நல வாழ்வுக்கான நம்பிக்கைகள் அவை!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment