Tuesday 23 July 2013

ஆறாம் திணை - 45

'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர், காற்றின் கடைசித் துளியையும் மாசுபடுத்திய
பின்னர், ஆற்றின் கடைசிச் சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும், இந்தப் பணத்தைத் தின்ன முடியாது என்று’  -செவ்விந்தியர்கள் கூற்றாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் இந்தச் செய்திதான், இப்போது உலக மக்கள் அனைவ ருமே உணர வேண்டிய உண்மை.  
'ஆறாம் திணை’ தொடரின் வாசகர்கள் பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, 'நீங்க சொல்வது எல்லாம் சரி... ஆனால், தனிமனிதனாக இந்த உலகத்தை என்னால் திருத்தி விட முடியுமா? என் ஒருவனால் மட்டும் என்ன செய்துவிட  முடியும்?’  அப்படி எல்லாம் நினைத்து மலைத்துவிடாமல், நிறையப் பேர் சத்தமே இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் நண்பர்களே! சிலர் தத்தம் வேலையோடு; சிலர் இதனையே வேலையாக!
நம் தமிழகத்தில் நம்மாழ்வார், அறச்சலூர் செல்வம், 'கிரியேட்’ ஜெயராமன் போல சுற்றுச் சூழல் போராளிகளை நாம் அறிவோம். அதுபோல இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் தெரியுமா?
ஒரு நள்ளிரவில், போபால் யூனியன் கார்பைடு ஆலை விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலும் இருமலுமாகத் தன் மூன்று குழந்தைகளையும், வாயில் நுரை தள்ளும் கண வரையும் இழுத்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஏராளமான கும்பலுடன் மருத்துவமனைக்கு ஓடியவர் சம்பாதேவி சுக்லா. ஐந்தே ஆண்டுகளில் கணவரை சிறுநீர் புற்றுக்கும், அடுத்தடுத்து இரண்டு மகன்களை விநோதமான நோய்களுக்கும் பறிகொடுத்தார் அந்தப் பெண். ஆனால், அந்தத் துயரத்தை வெறுமனே கண்ணீருடன் அவர் கழிக்கவில்லை. 'நாங்கள் மலர்கள் அல்ல; தீக் கொழுந்துகள்’ என்ற முழக்கத்துடன் தன்னைப் போலவே அந்த விபத்தில் பாதிப்புக்குள்ளான ரஷிதாவுடன் இணைந்து, வாழ்வு இழந்த பத்தா யிரத்துக்கும் மேலான நபர்களுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக 30 ஆண்டு களாகப் போராடிவரும் சம்பாதேவி, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த போராளி.
இன்றைக்கும் வட இந்திய மலைகளில் கொஞ்சம் நெடு மரங்களையும் அடர்ந்த காடுகளையும் பார்க்க முடிகிறது என்றால், சிப்கோ என்ற அமைப்பின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் அது. உத்தரகாண்ட் பகுதியில் அரசாங்கமும் தனியாரும் இஷ்டத்துக்கு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்துவந்த நிலையை 100 பெண்கள் காந்திய வழியில் போராடி மாற்றி அமைத்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்த அமைப்புதான் சிப்கோ. 1974-ல் அவர்கள் மரங்க ளைக் கட்டி அணைத்து  நடத்திய போராட்டத்துக்குப் பின்னர்தான் மலைகளில் மரம் வெட்டுவதற்கு இந்தியாவில் கடுமையான சட்டம் பிறந்தது.
மழை, பஞ்சம், பூச்சிகளுக்கு ஈடுகொடுத்து நிற்கும் சுமார் 900 வகை பாரம்பரிய விதைகளை கிராமம் கிராமமாகச் சென்று தனி ஆளாகச் சேகரித்தவர் உத்தரகாண் டின் விஜய் சர்தாரி. விதைகளைக் காக் கும் போராட்டத்தில் அவர் ஆற்றும் பணிகளுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, 'கிராமத் துக்கு பஸ்ல போவேன். விதைகளைக் கேட்டு வாங்கிக்குவேன். கடைசி பஸ் கிளம்பிடுச்சுன்னா, அவங்க வீட்டுத் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிக்குவேன். எனக்கு எதுக்குப் பணம்?’ என்று கேட்ட விஜய், இன்னும் சின்ன மண் வீட்டில் தான் வசிக்கிறார்.
ஆந்திரா முழுக்கப் பரவலாக, கிட்டத்தட்ட 11 லட்சம் ஹெக்டேர் நிலத்தைப் பூச்சிக்கொல்லி இல்லாத பூச்சி கட்டுப்படுத்தும் முறை மூலம் செப்பனிட்டு இருக்கிறது ராமானுஜயலு என்ற வேளாண் விஞ்ஞானி மற்றும் விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இணைந்த முனைப்பு.  இவர்களின் முயற்சியை ஐ.நா. சபை அங்கீகரித்து மற்ற நாடுகளை ஆந்திராவை எட்டிப்பார்க்கச் சொல்லி யுள்ளது. அந்த இரு தனி நபர்கள்விதைத்த விதை... இன்று மொத்த ஆந்திராவும் பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயத்தை நோக்கி நகர்கிறது!
மரபணுப் பயிருக்கான நாடு தழுவிய போராட்டத்தைக் கையிலெடுத்து இன்று வரை மரபணு உணவுப் பயிரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல்,போராடும் ஆஷா அமைப்பின் கவிதா குருகந்தி மற்றும் அனந்து, பாரம்பரிய ராகி, கம்பு முதலான பல்வேறு சிறுதானிய வகைகளை மீட்டு எடுத்து கர்நாடகம் முழுவதும் பரப்பிவரும் கிருஷ்ண பிரசாத், தன் 80 வயதிலும் புல்லட் ஓட்டிக்கொண்டு, 'என் பலத்துக்குக் காரணம் தெரியுமா... பாரம்பரிய விதை களைக்கொண்டு நான் செய்யும் நச்சிலா இயற்கை விவசாயம்தாம்ல...’ என மார் தட்டும் புளியங்குடி அந்தோணிசாமி, காப்புரிமைக்கும் விதையுரிமைக்குமாக பல ஆண்டுகளாகப் போராடிவரும் நவதானியா அமைப்பின் வந்தனா சிவா, பாரம்பரிய உணவுப் பொருளுக்கு என முதன்முதலாக அங்காடிவைத்து விழிப்பு உணர்வு செய்துவரும் நெல்லை கோமதி நாயகம்...  இப்படி எத்தனையோ பேர் நமக்கான அடையாளங்கள்.
கால் நூற்றாண்டு படிப்பு முடித்து பெற்ற வேலை, உயர் பதவிகளைத் தூக்கி எறிந்து களமிறங்கிப் பாடுபடுபவர்கள் இவர்களில் பலர். இவர்களைப் போல முழுதாக இந்தப் பணிக்கு வரும் சூழல் நம்மில் பலருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்மாலும் நம் பங்கை செயலாற்றிட முடியும்!
'அம்மா.. நான் சாப்பாட்டை வீணாக்காம சாப்பிட்டுட்டேன்... பாருங்க’ என தட்டைக் காண்பிக்கும் உங்கள் குழந்தை, 'எதுக்கு வழியில தண்ணி பாட்டில் வாங்கிட்டு... வீட்ல இருந்தே எடுத்துட்டுப் போயிடலாமே?’ எனும் வீட்டுத் தலைவி, 'நான் ஒரு ஆள் போறதுக்கு எதுக்கு தனி கார்? கார் பூலிங் பண்ணிக்கலாமே!’ எனச் சொல்லும் தம்பி, 'பிளாஸ்டிக் பை வேண்டாம்... வீட்டுல இருந்தே பை கொண்டாந்து இருக்கேன்’ எனக் கடையில் சொல்லும் அக்கா, 'வாரம் ரெண்டு தடவையாவது எங்க வீட்ல வரகரிசி பொங்கல்; திணை உப்புமா; சோளப் பணியாரம் செய்வோம். உங்க வீட்லக்கா?’ எனத் திண்ணையில் பேசும் அம்மா, 'அம்மா... அம்மா... கிச்சன் குப்பையைப் போட்டு நான் வளர்த்த கத்தரிச் செடி பூ விட்டுருக்கு பாரு’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் குழந்தை... இவர்கள் எல்லோருமே சூழல் போராளிகள்தான்!
- பரிமாறுவேன்...

Wednesday 10 July 2013

ஆறாம் திணை - 43

ரைவேக்காடாக வெந்த அரிசியை வனஸ்பதியால் வறுத்துச் சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. ஆனால், இப்போது அந்த ஃப்ரைடு ரைஸ் இல்லாமல் இரவுவிருந்துகள் கிடையாது. 'அரிசியைவிட கோதுமை நல்லதாம்’ என நம்மில் ஆழமாக விதைக்கப் பட்ட தவறான கருத்தினால், உருளை, கேரட், காலிஃப்ளவர் என இங்கிலீஷ் காய்கறிகளின் பயன்பாடு ஏகத்துக்கும் பெருகிவிட்டது. சப்பாத்திக்கு வத்தக்குழம்பும், கத்திரிக்காய் பொரியலும் வைத்து நமக்குச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லை என்பதால், கோபி மஞ்சூரிய னுக்குக் காலிஃப்ளவரும், கடாய் வெஜிடபிளுக்கு உருளையின் பயனும் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
'ஊட்டியில் இருந்து வரும் பீட்ரூட், கேரட் எல்லாம் நமக்கானது அல்ல’ என்பதைச் சொல்லி, கத்திரியையும் வெண்டைக்காயையும் கடை விரித்து இருக்கும் சீவலப்பேரி பாட்டியிடம் மண்டியிட்டு, கூறாகவும் கொசுறாகவும் வாங்கிவரச் சொல்லித்தந்த அன்றைய அனுபவம் இன்று நம் குழந்தைகளுக்கு இல்லை. 'பிராக்கோலி கேன்சருக்கு நல்லதாமே; மஷ்ரூம்ல வைட்டமினும் புரதமும் கூடுதலாமே... அதுல குருமா வை மம்மி...’ என இங்கிலீஷ் காய்கறிக்கு வக்காலத்து வாங்கும் நம் குழந்தைகளுக்கு உள்ளூர் காய்கறிகளின் உசத்திபற்றி யாரும் சொல்லித் தரவே இல்லை. முந்தைய தலைமுறையோடு நாம் தொலைத்து வருவனவற்றில்  நாட்டுக் காய்கறிகளுக்கும் தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது.
'கரிக்காய் பொரித்தாள்;
கன்னிக்காய்  தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடி செய்தாள்;
உருக்கமுள்ள அப்பைக்காய்
நெய் துவட்டல் ஆக்கினாள்’
- என்ற காளமேகப் புலவரின் பாடல் சொன்ன அத்திக்காய் (கரிக்காய்) பொரியல், வாழைக்காய் (கன்னிக்காய்) தீயல், மாங்காய் (பரிக்காய்) பச்சடி மற்றும் கத்தரி (அப்பைக் காய்) நெய் துவட்டல் நம்மைவிட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம் உயர்த்திப் பாடிய பாகல், பீர்க்கு, கொத்தவரை, மாதுளங்காய் வகை களில் பாதி இப்போது நம்மிடம் கிடையாது. மிச்சம் இருப்பவையும் வீரிய ஒட்டுரக மேக்அப்பில், கூடுதல் அழகாக இருந்தாலும் பயமாக இருக்கிறது. ஆனால், ஒரு முக்கிய மான விஷயம்... அத்தனை நாட்டுக் காய் கறிகளும் சத்து விஷயத்தில் இங்கிலீஷ் காய் களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல.
கத்திரிக்காய், குறைந்த கலோரியுடன், அதிக நார்ச் சத்துடன், குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸுடன் உடல் எடை குறைப்புக் கும் கொலஸ்ட்ரால் குறைப்புக்கும் உதவும். கத்திரி விதையில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும், அதன் கருநீலத் தோலில் நிறைந்துள்ள பாலிஃபீனால்களால் கிடைக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள், சர்க்கரை, புற்றுநோய் முதலான பல வாழ்வியல் நோய்களுக்குப் பலன் அளிக்கக் கூடியது. 'கத்திரிக்காய் பித்தங்கன்றைக் கபந் தீர்ந்துவிடும். முத்தோஷம் போக்கும்’ எனச் சித்தர்கள் பாடியதை, பி.டி. கத்திரிக்கு எதிரான போராட்டத்தில் எடுத்துச் சொன்னபோது, அதை முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி ஏற்றுக்கொண்டு, கத்திரியின் மரபு விளையாட்டை நிறுத்திவைத்தார். ஆனால், இன்றும் பல மெத்தப் படித்த அறிவியல் அறிஞர்கள், 'கத்திரிக்காய்க்கு அப்படி எல்லாம் ஒண்ணும் சிறப்பு இல்லை. பாரம்பரிய மருத்துவத்தில் அதைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை. மரபணு மாற்றம் செய்யலாம்’ என தற்போதும் நூல் எழுதிவருவது வேதனை அளிக்கிறது. கத்திரியில் பொய்யூர் கத்திரி, கண்ணாடிக் கத்திரி, வரிக் கத்திரி, பச்சைக் கத்திரி என 500-க்கும் மேற்பட்ட வட்டார வகைகள் உண்டு. ஒவ்வொரு வகைக்கும் ஒரு மணம், ஒரு குணம் எனப் பண்புகளும் உண்டு. அலர்ஜிக்காரர்கள் தவிர, அத்தனை பேருக் கும் நாட்டுக் கத்திரி உணவல்ல; ஊட்ட மருந்து!
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வருமா என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. அது தன் மக்குப் பையனைச் சாப்பிடவைக்க யாரோ ஒரு கணக்கு டீச்சர் உருவாக்கிய கதையாகக்கூட இருக்கலாம். ஆனால், வெண்டைக்காய் குளிர்ச்சி தரும், வயிற்றுப் புண் நீக்கும், சர்க்கரை நோய்க்கு நல்லது என்பதற்குப் பல மருத்துவச் சான்றுகள் உள்ளன. எண்ணெயில் வதக்கி, அதைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிச் சுவைக்காமல், லேசாக வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது. ஆனால் கண்ணாடி, பச்சை, சிவப்பு, கஸ்தூரி என்ற ஊருக்கு ஒன்றாக இருந்த வெண்டையின் வட்டார வகைகள் எல்லாம் அருகிப்போய், இன்று 'ஆபீஸ் வெண்டை’ எனும் ஒட்டு வீரிய ரகம்தான் விவசாயிகளின் ஓட்டுக்களை அள்ளுகிறது. கஸ்தூரி வெண்டையின் நரம்பை உரமாக்கும் பயனை ஆபீஸ் வெண்டை தராது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவரைக்காயும் அப்படித்தான். கொலஸ்ட்ராலைக் குறைக்கும், வைட்டமின்-பி சத்தையும் புரதத்தையும் சேர்த்துத் தரும். அவரை விதை ஆண்மைக் குறைவுக்கும்கூட நல்லது. அவரைக் குடும்பத்தின் ஒண்ணுவிட்ட மச்சினனான கொத்தவரங்காயை வாய்வுக் குத்து என நம்மில் பலரும் ஒதுக்கிவிடுவது உண்டு. ஆனால், அதன் விதைப் பிசினான, guar gum உலகில் மிக அதிகம் தேடப்படும் பிசின். அதில் உள்ள நார்ச் சத்துகள் ரத்தக் கொழுப்பைக்கூடக் குறைக்க உதவுமாம்.
அதேபோல், பெண்களுக்கு வெள்ளைப்படுதலை எளிதாகப் போக்கிடும் வெள்ளைப் பூசணியும், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கோவைக்காயும், சிறுநீரகக் கல்லை வெளியேற்றிட உதவிடும் சுரைக்காயும், உடல் சூட்டைத் தணித்து, சிறுநீர் எரிச்சலைப் போக்கும் உப்புக்கனிமச் சத்துகள் நிறைந்த பீர்க்கங்காயும் நலம் பயக்கும் நம் நாட்டுக் காய்கறிகள்தான்.
'அட... நாட்டுக் காய்கறிதானே’ என்று இனியும் அலட்சியப்படுத்திட வேண்டாம். நாளைய நல வாழ்வுக்கான நம்பிக்கைகள் அவை!
- பரிமாறுவேன்...

Wednesday 3 July 2013

ஆறாம் திணை - 42



‘சிறுகை அளாவிய கூழ்...’
''சார்... அது என்ன ஏதாவது புது சிறுதானியக் கூழ் வகையா? ரெசிபி சொல்லுங்க!'' எனக் கேட்போர், புறநானூற்றில் பயணம் துவங்கி திருக்குறளில் கொஞ்சம் இளைப்பாற வேண்டும். அன்றே புறநானூற்றில் அன்னை தனக்கு ஊட்டுவதற்கு வைத்திருந்த சோற்றை ஒரு குழந்தை கையில் பிசைந்து விளையாடி மகிழ்ந்ததை,
'இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்,நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தல்’ எனச் சிலாகித்திருக்கிறது. திருக்குறளோ அதற்கு ஒருபடி மேல் போய், 'அந்த கூழாகிப்போன உணவின் சுவை, அமிழ்தத்தைவிட இனிதானதல்லவா?’ என,
'அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என மக்கட்பண்பில் போற்றுகிறது.
ஆனால், இன்றைய இளம் தாய்மார்களோ, 'ஒரு ரெண்டு நிமிஷம் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள சாதத்துல கையைப் போட்டு உழப்பிட்டியா? யாராச்சும் கையில சாப்பிடுவாங்களா... ஜெர்ம்ஸ்... கிருமி!’ எனக் குழந்தை யின் கையை வேகமாக உதறி, ஒரு மிரட்டு மிரட்டுகிறார்கள். ஏற்கெனவே ஏப்ரன் கட்டி 'மைனர் ஆபரேஷன்’ நோயாளி கணக்காக 'பேபி சிட்டர்’ இருக்கையில் அமரவைக்கப்பட்டிருக்கும் குழந்தை, 'அம்மா... குப்பையையும் தொடக் கூடாதுங்கிறா. சாப்பாட்டையும் தொடக் கூடாதுங் கிறா!’ என இரண்டையும் ஒரே புள்ளியில் பொருத்தித் தன் மனதில் பதித்துக்கொள்ளும்.
சமீபத்தில் பாளையங்கோட்டைக்குச் சென்றிருந்தபோது ஒரு அம்மா தன் இடதுபக்க இடுப் பில் குழந்தையை வைத்துக்கொண்டு, இடது கையில் பருப்புச் சோறு குழைத்துவைத்திருந்த சிறு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு தன் வலக்கை விரல்களால் ஏற்கெனவே குழைந்திருந்த அந்த பருப்புச் சாதத்தை இன்னும் நசுக்கிக் குழைத்து, ஆள்காட்டி விரலும் நடுவிரலும் இணைந்த பகுதி யில் இருந்த சாதத்தைத் தன் பெருவிரலால் குழந்தையின் புதிதாக முளைத்த பல் தாங்கும் மெல்லிய ஈறுகள் வலித்துவிடாதபடி பரிமாறிய காட்சியைக் கண்டேன். அர்த்தம் நிறைந்த கவிதை!
எங்கே போனது இந்தக் கரிசனம்? கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஆனால், ஸ்பூன்தான் சுத்தம் என்று விரல்களை விலக்குவதுதான் வலிக்கிறது. பல் ஈறு தட்டாமல் பரிமாற ஸ்பூனுக்குத் தெரியாது. பல்லின் பலம் அறிந்து குழைவைக் கைகளாலேயே கூட்ட ஸ்பூனுக்குத் தெரியாது. இடுப்பில் இருக் கும் குழந்தையின் வயிறு நிறைவது நாற்காலிக்குத் தெரியாது. ஒவ்வோர் உருண்டைக்கும் பின் முதுகில் லேசாகத் தட்டிவிட நாற்காலிக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, 'அடிச்சட்டி ஆனைபோல, இது மட்டும்தாண்டா... வாங்கிக்கோ செல்லம்’ எனச் சொல்லி கடைசி உருண்டையை வழித்து, உருட்டி வாய்க்குள் தள்ளும் தாயின் விரல் சுவையை ஸ்பூன் சத்தியமாகத் தராது!
துரித யுகத்தில் இங்கே பெரும்பாலும் வளர்ந்த குழந்தைகளுக்கு அன்னை மடி கிடையாது. எல்லாமே மேஜை மடிதான். 'ஸ்கூல் விட்டு வந்தவுடனே டேபிள்ல உள்ள கார்ன் ஃப்ளேக்ஸ்ல ஃப்ரிஜ்ல இருக்குற பாலை ஊத்திச் சாப்பிடு. அதுக்கும் மேல பசிச்சா, சிப்ஸ் பாக்கெட், பிஸ்கட் எல்லாம் இருக்கு. ஆப்பிளை வெட்டுறேன்னு கைய வெட்டிக்காத’ எனப் பல அக்கறைக் கட்டளைகளை அவசரமாக மம்மி - டாடிகள் சொல்லி அனுப்ப, 'சாயந்தரம் மட்டுமே பசிக்கும்’ பல நகர்ப்புறக் குழந்தைகள், தொலைக்காட்சி முன் அமர்ந்து, அத்தனையையும் தனியே சாப்பிட்டு சீக்கிரம் குட்டிக் குண்டர்கள் ஆவார்கள். அல்லது எதையும் சாப்பிடாமல், பிஸ்கட் டின் கிரீமை மட்டும் விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொடுக்கும்படி நக்கிச் சாப்பிட்டுப் பசியாறுவார்கள்.
''அதுக்குத்தான் சார்... வீக் எண்ட் ஹோட்டல்ல மொத்த ஃபேமிலியும் சாப்பிடுறோம்!'' என அவசரமாகச் சாக்கு சொல்லாதீர்கள். எப்போதேனும் உணவு விடுதிக்குச் சென்று மனம் மகிழப் பேசி வகை வகையான உணவருந்தி வருவதில் தப்பு இல்லை. ஆனால், தற்போதைய நவீன உணவு விடுதிகள் சிலவற்றின் விஷம சூட்சுமங் களைப் புரிந்துகொள்ளுங்கள்.  
'ஹோட்டலுக்குப் போனால்கூட நான் ஆரோக்கிய உணவுகளை மட்டும்தான் சாப்பிடு வேன். கோதுமை தந்தூரி ரொட்டி கடாய் வெஜிடபிள் கொண்டுவாப்பா!’ என்று நீங்கள் சொன்னால், முன்பே வெட்டிவைத்து, மைக்ரோ ஓவனிலோ நீராவியிலோ வெந்த இங்கிலீஷ் காய்கறிகள், இரண்டு நாளைக்கு முன்னரே செய்த தக்காளி, வெங்காய கிரேவியுடன், சில தினங்களுக்கு முந்தைய இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுடன் வேக வேகமாகச் சூடாக்கப்பட்டு, கொஞ்சம் சுவையூட்டி ரசாயன உப்புக்கள் சேர்க்கப்பட்டு, உங்கள் தட்டுக்கு வரும். உங்கள் வீட்டுச் செல்லங் கள், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்திருப் பார்கள். அவை முந்தைய இரவே வேகவைக்கப் பட்டு ஈரத் துணியில் சுற்றி பிரிஜ்ஜுக்குள் இருந்து எடுக்கப்பட்டு, சூடாக்கப்பட்டு, மிக்ஸிங் செய்து, பொலபொலவென அலங்கரித்து, மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் வரும். எல்லா உணவகங்களும் அப்படி இல்லைதான். ஆனால், 'வீணாவதைத் தடுப்பதில்தான் விடுதியின் லாபம் இருக்கிறது’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றும் உணவகங்கள்தான், இங்கே பெரும்பான்மை. அதிலும் பல தந்தூரி உணவகங்களுக்குள் நுழையும் எந்த உணவுப் பொருளும் கழிவாகவோ காலாவதியாகவோ குப்பையில் கொட்டப்படாது. இப்படியான உணவக வியாபார சூத்திரங்களைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டில் சமைத்து, மெனக்கெடலுடன் பரிமாறி, ஊட்டி உறவாடும் கரிசனங்களில் இந்தப் பயம் எப்போதும் இல்லை!
- பரிமாறுவேன்...

Wednesday 26 June 2013

ஆறாம் திணை - 41

“ஒரு வாரிசு வந்தா போதும் தாயி... வீட்டை வித்துக் காசு எடுத்துட்டேன். அந்த டெஸ்ட் டியூப்ல கருத்தரிச்சிரலாம்ல... பார்த்துச் சொல்லும்மா!'' என உடைந்த குரலுடன் கருத்தரிப்பு உதவி மையங்களில் கண்ணீருடன் காத்திருக்கும் ஏழைத் தம்பதியரும், ''இன்னும் நாலஞ்சு நாள்ல ஓவுலேஷன் டேட் வரலாம்னு நினைக்கிறேன். நாம ஒண்ணா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்'' என மனைவி அலைபேசியில் அழைக்க, ''ம்ம்ம்... ஸாரி டியர்... க்ளையன்ட் சைட் டெஸ்ட்டிங் போயிட்டு இருக்கு. என்னால இப்போ உறுதியா சொல்ல முடியலையே... கடைசி நேரத்துல அடிச்சுப்பிடிச்சாவது வந்துடு றேம்மா!'' என வருத்தத்துடன் தகவல் சொல்லும் கணவனுமாக நகர்ப்புறத் தம்பதியரும்... இப்போது இந்தியாவில் அதிகம்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம்போய், இப்போது கிட்டத்தட்ட 20 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கழகக் குறிப்பு. எண்ணிக்கை மட்டுமல்ல, விந்து அணுக்களின் இயக்கம், அதன் உருவம் எல்லாம்கூடக் குறைந்தும் சிதைந்தும்வருவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. என்ன காரணம்? ஒருபக்கம் நகரமயமாக்கம் தரும் வாழ்வியல் நெருக்கடி, மகிழ்ச்சியை மறந்துபோய் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் மனம், விஷத் துணுக்குகளை அலங்கரித்துச் சந்தை விற்பனைக்குக் கொண்டுவரும் அபாய உணவுகள், காற்றில், தண்ணீரில் எனச் சூழலில் கசிந்து நிற்கும் பல்வேறு ரசாயனங்கள்... இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து, நிறையப் பேருக்குக் கருத்தரிப்பு என்பது காதலில் நிகழாமல், கண்ணாடிக் குடுவையில் நிகழ்கிறது.
தாலேட்டுகள்... பிளாஸ்டிக்குகளை வளைத்து, நெளித்துச் செய்யப் பயன்படுத்தும் ஒரு ரசாயனம். பிளாஸ்டிக்கில் மட்டுமல்ல... அன்றாடம் சாப்பிடும் வழுவழு கோட்டிங் போட்ட பெருவாரி மாத்திரை மருந்துகள், குக்கர் கேஸ்கட், குளிர் உணவு களைச் சூடாக்க உதவும் மைக்ரோவேவ் ஓவனின் பிளாஸ்டிக் பாத்திரம், காரின் உள்புற பிளாஸ்டிக்குகள்... இப்படி எத்திக்கிலும் எகிறிக்கிடக்கிறது பிளாஸ்டிக்கின் பயன்பாடு. இந்த தாலேட்டுகள் பிளாஸ்டிக்கோடு கலந்துசெய்யப்பட்டாலும் சூட்டில், நெளிசல், உடைசலில் முதலில் இது காற்றில் கசியத் துவங்கிவிடும். புது காருக்குள் வரும் வாடை, புது பெயின்ட் அடித்துப் பூட்டியிருந்த வீட்டினுள் வரும் வாடை... பெரும்பாலும் இந்த தாலேட் கசிவினால்தான். இந்த தாலேட் விந்து அணுக் குறைவை உண்டாக்கும்; விந்து உற்பத்தி செய்யும் ஆண் சினைப் பையின் செயல்திறனைக் குறைக்கக்கூடும் என நவீன ஆய்வு கள் உறுதிபடக் கூறுகின்றன. பெண்களுக்கோ, கூடுதலாக அவர்கள் பயன்படுத்தும் அழகூட்டிகளில், குறிப்பாக நகப்பூச்சு, லிப்ஸ்டிக், முகப்பொலிவு க்ரீம் கள் என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் தாலேட்டுகள், குறைப்பிரசவம், சினைப்பை நீர்க்கட்டிகள் என ஏகமான சிக்கல்களை உருவாக்குகின்றன். விளைவு? முன்னர் மணியடித்ததுபோல மாதாமாதம் வந்துகொண்டு இருந்த மாதவிடாயை, இப்போது  வருடத்துக்கு ஏறத்தாழ 706 மில்லியன் டாலர் செலவழித்து வரவைக்க வேண்டியிருக்கிறது. ஆம் நண்பர் களே... முன்னரெல்லாம் எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட பாலிசிஸ்டிக் ஓவரி சிக்கல், இப்போது மிகப் பெரும்பாலான இளம் மகளிரிடம் உள்ளது.
கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள், கொஞ்சம் மூச்சு/உடற்பயிற்சி ஆண்களிடம் விந்தணுக்களை உயர்த்தவும், பெண்ணில் இந்த சினைப்பை நீர்க்கட்டியைத் தடுக்கவும் பெரிதும் உதவும். தேவை கொஞ்சம் அக்கறை மட்டுமே. ஹை கிளைசிமிக் தன்மைகொண்ட பாலீஷ் போட்ட பச்சரிசி, குளூட்டன் சேர்த்த கோதுமை மாவு இல்லாத சமையல் வேண்டும். மாப்பிள்ளை சம்பாவில் சோறாக்கி, முருங்கைக்காய் சாம்பா ரும், பசலைக்கீரை பாசிப்பயறுக் கூட்டும், மாதுளை பழச்சாறும் செய்து சாப்பிடுவது விந்தணுக்கள் எண்ணிக்கையை உயர்த்தும். விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த 'வெல்வட் பீன்’ எனும் பூனைக்காலி விதை, பாதிக்கப்பட்ட செர்டோலி செல்களைக்கூடச் சீர்படுத்தும் சாதாரண நெருஞ்சில் முள், வயல் வரப்பில் களையாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி விதை என எளிய சித்த மருந்துகள் ஏராளமாய் நம் மரபில் உண்டு. அவற்றில் பல நம் பாட்டிக் கும் தாத்தாவுக்குமே தெரியும். அதையெல்லாம் தொலைத்துவிட்டு, 'ஆண்மைக் குறைவா..? ஆண் கரடியின் வலது கால் பெருவிரல், காண்டாமிருகக் கொம்பு, சிட்டுக் குருவி லேகியம் என யோசிப்பது முழு உட்டாலக்கடி.
சினைப்பை நீர்க்கட்டிகளால், திடீரென உடல் பெருத்து, மாதவிடாய் வராமல், லேசாக மீசை தாடி வந்து சங்கடப்படும் பெண்ணுக்கு, சோற்றுக் கற்றாழையும், வெந்தயமும், பூண்டும், பனை வெல்லமும் சேர்த்துக் கிண்டிய களி உணவு மிக விரைவில் தீர்வு தரும். தினை, கம்பு, சோளம், வரகரிசி முதலான லோ கிளைசிமிக் தன்மையுடைய சிறுதானிய உணவுகளும், ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் உள்ள நம்ம மலபார் குடம் புளியும் உடல் எடையை ஓரளவுக்குக் குறைக்க உதவும். இந்த மாதிரியான உணவுகளைக் கருத்தரிப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தின்போது தேடாமல்,  வளரிளம் பருவத்திலேயே பழக்கப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். 'களியா... அய்ய கை எல்லாம் ஒட்டுமே. பப்பாளி மட்டும் வேணாம்ப்பா!’ எனச் சொல்லும் பெண் குழந்தைகளுக்கு, உளுந் தங்களி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உரமேற்றி மாதவிடாயைச் சீர்படுத்துவதுபோல, பப்பாளி யின் பாலிஃபீனாலும் வைட்டமினும் கருப் பையை வலுவாக்கும் எனச் சொல்லித் திருத் துவது, பெற்றோரின் அதிஅவசியமான கடமை!
'நீருக்குள் நிற்கும்போதும்கூட வியர்க்கின்றது’ எனச் சிலாகிக்கும் காதல் சமீபமாக இல்லை. 'அயித்தயும் மாமனும் சுகம்தானா?’ என இப்போது மாமன் மகள்கள் கரிசனமாகப் பாடுவதில்லை. 'எதற்கு வம்பு?’ எனக் காதலை கசின் சிஸ்டரிடம் காட்டுவதும் இல்லை. உலா போகும் நிலா பார்த்துக் கனாக் காணும் கற்பனை எல்லாம் இப்போதைய காதலில் வற்றிப்போய், 'சரியா வரலைடி... அதான் ரிலேஷன்ஷிப் பிரேக் பண்ணிட்டேன்!’ எனக் காதலைப் பங்குச் சந்தையில் மாற்றிவிட்டுப்போகும் நவீன நோய் பரவி வருகிறது. கூடவே வெற்றிலை, வெண் பூசணி, வாழைப்பழம், சோற்றுக் கற்றாழை எனக் கருத்தரிக்க உதவும் பல மரபு உணவுகளும்கூட மறந்து போனதில், காதல் மாத்திரைகளும் கருத்தரிப்பு மருத்துவமும் மட்டும் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன!
- பரிமாறுவேன்...

Wednesday 19 June 2013

ஆறாம் திணை - 40

"..எல்லாம் பொருளில் தோன்றிவிடும்’ என அன்று நான்மணிக்கடிகை முடித்த வரிகள், இந்த நவீன யுகத்தின் பிரதான சூத்திரம்! இப்போதைய பொருளீட்டும் வாழ்வியலுக்கு அச்சாணி, மனிதன் கண்டறிந்த அபரிமித ஆற்றல். இரவு பகலை ஜன்னலுக்கு வெளியே தள்ளிச் சாத்தி, எந்நேரமும் ஜொலிஜொலியென மிளிர மின் ஆற்றல் வந்ததும், பல நாழிகைகள் யானை, குதிரையில் பயணித்த காலம் போய், சில மணி நேரங்களில் கண்டங்கள் கடக்க வெள்ளை பெட்ரோல் வந்ததும், நாவாயை நகர்த்திப் போட்டுவிட்டு, சொகுசாகப் பயணிக்க டீசல் கப்பல் வந்ததும், மனிதனின் சர்வாதிகாரத்துக்குள் பூவுலகு பிடிபட்டுப்போனது. இத்தனை ஆற்றலுக்கும் தேவையான கரி இன்னும் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளிலும், க்ரூடு எண்ணெய் 45 ஆண்டுகளிலும் காலியாகிவிடும். அதற்குப் பின்னர்?
'அதுக்குத்தான்யா அணு ஆற்றல்’ என்று ஒரு பச்சைப் பொய்யைப் பெருவாரியாக அரசும் அதிகம் படித்த அரசுசார்புத் தொழில்நுட்ப வல்லுநர்களும் சூடம் அணைத்துச் சத்தியம் செய்கிறார்கள். உலக மின் உற்பத்தித்தர வழிகாட்டுதலின்படி, மின் உற்பத்தியின்போது, க்ரிடின் வழி மின்சாரம் பாய்ந்து மின் கடத்தல் நிகழும்போது ஏற்படும் மின் இழப்பு (Aggregate Technical And Commercial Loss)   4 முதல் 5 சதவிகிதம் வரை இருக்கலாம் என்கிறது. ஆனால், நாமோ 35 சதவிகிதத்தை இந்த வகையில் வீணாக்குகிறோம். குண்டுபல்பு, தரமற்ற விவசாய மோட்டார் பம்புகள் போன்ற வகை யில் பயன்பாட்டில் மேலும் 45 சதவிகித சக்தியை வீணடிக்கிறோம். இந்த இரண்டு வீணடிப்புக்கும் மிக முக்கியக் காரணம், நேர்மையற்ற, அறிவற்ற, செயல்திறனற்ற, பின்விளைவுபற்றிய சிந்தனை இல்லாத திட்டங்கள். அவற்றைத் திருத்தினாலே, இந்தியாவில் எங்குமே அணு உலைகளின் தேவையிருக்காது.
சரி... கரியும் எண்ணெயும் குறைந்துவருகிறது. அணுவோடு விளையாட்டு அவசியமற்றது. உண்மைதான். வேறு என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட 94 பில்லியன் மெகாவாட் ஆற்ற லைத் தினம் காலை முதல் மாலை வரை சூரியன் தருகிறது. அதைப் பயன்படுத்த நமக்கு ஏன் இத்தனை தயக்கம்? நிலக்கரி பேரம், யுரேனியம் இறக்குமதி ஊழல், எண்ணெய்ப் பங்கு என அந்த வகையறாவில் கிடைக்கும் ஊழல் பணம், சூரிய ஒளியில் எப்போதும் கிடைக் காது என்பதாலா? பிறகு, சூரிய சக்தியை மறுப் பதற்கு நமக்கு வேறெந்தக் காரணமும் தட்டுப் படவில்லையே!
போட்டோவோல்டைக்ஸ் (Photovoltaics)...  நாளைய உலகுக்கான ஆற்றல் படைக்கும் சூரிய சக்தி இது. 'அட... அங்க பாருங்க 1,000 மெகா வாட் சூரிய மின்சக்தியைப் பெறுகிறார்கள்’ என்று சமீபமாக எல்லாரும் குஜராத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தியாவில் உண்மையாகவே ஒளிரும் மாநிலமாகச் சொல்லப்படும் குஜராத் மட்டுமல்ல நண்பரே, பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் முன்னணி வகிக்கும் பீகார் கூடச் சத்தமே இல்லாமல் 1,600 மெகாவாட் சக்தி யைச் சூரிய ஒளியில் இருந்து அள்ளிக்கொள்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் இதற்கு 'அனா... ஆவன்னா’ போட்டிருக்கிறது. இருந் தாலும் வாழ்த்துவோம்!
தமிழகத்தில் ஏறத்தாழ வருடத்தின் 300 நாட்கள் தடையில்லா சூரிய ஒளி கிடைக்கும். வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், 'வான மகள் நாணுகின்ற, வேறு உடை பூணுகின்ற’ நேரம் தவிர, மீதி நேரமெல்லாம் சூரிய சக்தி இங்கே இலவசம். நமக்கு உடனடித் தேவை சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் செல்கள்கொண்ட போட்டோவோல்டைக்ஸ் பேனல்கள் மட்டுமே. சராசரியாக ஒரு மாதத் துக்கு வீட்டு உபயோகத்துக்குத் தேவையான வெளிச்சத்துக்கும், காற்றுக்கும் 60 யூனிட் மின்சாரத்தை (ஏ.சி, குளிர்சாதனப் பெட்டி இல்லாமல்) அவரவர் வீட்டு மொட்டை மாடி யில் இருந்தே இலவசமாகத் தினமும் தயாரிக்க முடியும். ஆனால், அப்படித் தயாரித்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்தாலொழிய, நம்மில் பலர் மாற மாட்டோம். சுமாராக 50 லட்ச ரூபாய் முதலீடு இல்லாமல் சென்னையில் மட்டுமல்ல; தெற்கே பாளையங்கோட்டையிலும் தனி வீடு வாங்க முடியாது என்ற சூழலில், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சூரிய சக்தி பேனலை வீட்டில் பதிந்தால் மட்டுமே அந்த வீட்டைப் பதிவுசெய்வது சாத்தியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் இடிந்த கரை கடல் நீர், அந்தப் பகுதி மக்களின் கண்ணீரால் மேலும் உப்புக் கரிக்காமல் இருக்கும்!  
இந்தியாவில் சுமார் 7,200 கி.மீ. (அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகள் உள்ளடக்கிய) நீளமான கடற்கரை உள்ளது. ஒரு கி.மீ-க்கு ஒரு காற்றாலை போட்டால்கூட, ஏறத்தாழ 6,000 மெகாவாட் நமக்கு நிச்சயம். சூரியன் முழு வீரியத்துடன் வெளுத்துக்கட்டும் தார் பாலைவனத்தில் ஒரு சதுர கி.மீ-க்கு 35 மெகா வாட் சூரிய ஆற்றல் பெற முடியுமாம். கொஞ்சம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மொத்த இந்தியாவுக்கே சூரிய ஆற்றல் பெறுவதும்கூட இங்கே சாத்தியம்தான்!
சாத்தியமற்றதும், சுற்றுச்சூழலுக்குக் கேடானதுமான ஆறுகளை இணைக்கும் திட்டத்தைவிட, முதலில் மின்சார க்ரிடுகளை இணைத்தாலே ஒடிசாவில் வீணாகும் மின்சாரத்தை ஒட்டன்சத்திரத்துக்குக் கொண்டுவரலாம். நம் நாட்டில் ஏறத்தாழ 6,000 சிறு மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத் துக்கும் அதிகபட்சம் 15-20 மெகா வாட் மின்சாரம்தான் தேவைப்படும். அதை ஆங்காங்கே உற்பத்திசெய்துகொள்ளும் சிறு திட்டங்களைச் செயல்படுத்தினாலே போதும். இப்படி எல்லாம் யோசிக்காமல் கடல் நீரில் அணுக் கழிவை விடுவதும், காற்றை நஞ்சாக்குவதும், மண்ணுக்குள் கதிரியக்கக் கழிவுகளைப் புதைப் பதுமான கொடுஞ்செயலைப் புவியில் வேறு எந்த மிருகமும் எப்போதும் செய்யாது.
இதே நிலை நீடித்தால், இன்னும் 300 ஆண்டுகளில் மொத்தமே 50 மில்லியன் மக்கள்தான் உலகில் மிச்சம் இருப்பார்கள் என ஒரு சூழலியலாளர் அறிக்கை சொல்கிறது. 'இப்படித்தாம்பா சொல்லிட்டே இருப்பாங்க... இவங்களுக்கு வேற வேலை இல்லை!’ என அலட்சியம் வேண்டாம்.
2004 நவம்பர் மாதம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கலந்துரையாடல் ஒன்றில், சேது சமுத்திரத் திட்ட மக்கள் குழுக் கூட்டத்தில் சூழலியலாளர்கள், 'சுனாமி வரும் ஆபத்து இந்த சமுத்திரப் பகுதியில் உள்ளது’ என்று சொன்னபோது, 'கொல்’லெனச் சிரித்தது அந்த அரசுக் கூட்டம். அடுத்த மாதத்தில் பொங்கிப் பெருகிய சுனாமி 2,30,000 உயிரை வாரிச் சுருட்டிச் சென்றது வரலாறு. இப்போதும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டோம்!  
- பரிமாறுவேன்...

Monday 17 June 2013

ஆறாம் திணை - 44

'என் மகன் படிக்கவே மாட்டேங்குறான் டாக்டர். புத்தகத்தைக் கைல கொடுத்தாலே தூக்கி வீசிடுறான். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. புத்திசாலித்தனம் வளர ஏதாச்சும் மருந்து எழுதித் தர முடியுமா?’ என்று மருத்துவமனைக்கு வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம். பரிசோதனைக்குப் பிறகு, அந்தக் குழந்தைகள் 'கவனிப்புக் குறைபாடுள்ள குழந்தை’ (attention deficiency syndrome) என மருத்துவர் விளக்க முற்படுகையில், 'எனக்கு மட்டும் ஏன்?’ என்ற
வேதனையுடன் வழியும் பெற்றோரின் கண்ணீர், நம்  நாட்டு வளர்ச்சிக் குறியீட்டைக் காட்டிலும் அதிகம்.
ஆட்டிஸம், கவனக்குறைவு நோய், அஸ்பெர்கர் நோய், இன்னும் இன்னதென வரையறுக்க முடியாத நோய் pervasive development disorder ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, அமெரிக்காவில் 53 குழந்தைகளுக்கு ஒருவர். இந்தியாவில் அது நூற்றுக்கு ஒருவராக இருக்கக்கூடும் என்கிறது கணிப்புகள். குறிப்பாக 4:1 என ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆட்டிஸத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச் சூழல் மாசு, காற்றில்... மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும், கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
'எல்லாம் ஒண்ணேகால் வயசு வரை ஒழுங்காத்தான் இருந்துச்சு. 'அம்மா, அப்பா’னுகூட அழகாச் சொல்லிட்டே இருந்தான். ஒண்ணரை வயசுக்கு அப்புறம்தான் எல்லாத்தையும் மறந்துட்டான். சேட்டை கூடிப்போச்சு. ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறான். ஒண்ணு, எல்லாப் பொருளையும் அடுக்கிவெச்சுட்டே இருக்கான். இல்லைன்னா, தூக்கி எறியறான். அவனை அடக்கவே முடியலை. பேச மாட்டேங்கிறான். படிக்க மாட்டேங்கிறான்’- இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளைப் பாதித்திருப்பது ஆட்டிஸம் எனும் நோய்.
ஆட்டிஸம் இரண்டு வயதுக்கு முன்னால் பெரும்பாலும் கணிக்கப்படுவது இல்லை. தாய் பாலூட்டும்போது குழந்தையுடன் கண்களால் பேச வேண்டும். தாயின் கண்ணசைவுக்கும் முக பாவனைக்கும் குழந்தை பதிலுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தாய் சொல்வதை அப்படியே இமிடேட் செய்ய எப்படி அந்தக் குழந்தையின் மூளையில் மென்பொருள் பொதிந்துவைக்கப்பட்டு இருக்கிறது என்பது இயற்கையின் புரியாத விந்தைகளுள் ஒன்று. 'மூணாம் மாசத்துல குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும்’ எனப் பாட்டி சொல்வது அனுபவம் மட்டுமல்ல... அறிவியல். அதுபோல் முகம் பார்க்காமல் கண்களைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் இருக்கலாம் என்கிறது நவீன அறிவியல்.
'அதல்லாம் அவங்க அப்பாவே மூணரை வயசுலதான் பேசினான். இப்பவே பேசலைன்னா, ஒண்ணும் குறைஞ்சிடாது’, 'ஆம்பிளைப் பிள்ளை மெதுவாத்தான் பேசும். பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப சீக்கிரம் எட்டு மாசத்துலயே பேசிடுவாங்க’ எனச் சொல்லி, இரண்டரை வயது வரை பேசாமல் இருக்கும் தன் மகனுக்கு ஆட்டிஸமோ, அதை ஒட்டிய நோய்த்தொகுப்போ இருப்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் கணிக்கத் தவறிவிடுவர். அந்தத் தாமதம் குழந்தையை முழுமையாக சீராக்கத் தரும் பயிற்சிக்குப் பெரும் தடையாக இருக்கும். ஆம்பிளைப் பிள்ளைக்கு மிகத் தாமதமாகத்தான் பேச்சு வரும் என்ற கருத்துக்குத் தெளிவான அறிவியல் விளக்கம் எதுவும் இல்லை. ஆனால், பெண் குழந்தைகளைக் காட்டிலும் அதிகம் தன் செயல் மற்றும் புலன்களை ஆளுமைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஆண் குழந்தைக்கு, பேச எடுக்கும் முயற்சி கொஞ்சம் தாமதமாகலாம் என்ற கருதுகோள் உண்டு.
புள்ளிவிவரக் கணக்குப்படி ஆட்டிஸக் குழந்தைகளில் 23 சதவிகிதத்தினர் பேரறிவாளராக வருவர். இலக்கியத்தில் நம்மாழ்வார், அறிவியல் உலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர் ஆட்டிஸ நோய் பாதித்தவர்கள் என்று சில வரலாற்றுத் தகவல்கள் உண்டு. ஆனால், அனைத்து ஆட்டிஸக் குழந்தைகளும் அப்படி அல்ல. அதனால் அவர்களுக்கு வெகு விரைவில் பயிற்சி துவக்கப்பட வேண்டும். தன்னுடைய ஐம்புலன்களையும், தடுமாற்றம் இல்லா நிலையும் (vestibular sense), தன் மூட்டுகளை ஒருங்கிணைத்து ஓடியாடும் திறனிலும் இந்தக் குழந்தைகளுக்குச் சங்கடங்கள் இருப்பதால், சுற்றியிருக்கும் சூழலுக்கு இசைவாக அவர்களால் இத்தனை யையும் ஒருங்கிணைத்துச் செயல்பட முடியாது. ஒவ்வொரு புலனும் தனித்தனியே அதிகபட்ச ஆளுமையுடன் இருப்பதும் மிக முக்கியக் காரணம்.
ஹாவர்டு கார்னர் எனும் உளவியல் விஞ்ஞானி ஒன்பது வகை அறிவாற்றலை விளக்குகிறார். ஒரு மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்றோ, பலவோ கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதனை ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்துக் கணிக்க முடியாது. ஐ.க்யூ டெஸ்ட்டில் மிகவும் பின் தங்கியுள்ள பலர், இந்த அறிவாற்றல் சில வற்றில் அதீதத் திறமையுடன் விளங்குவதை உலகம் பார்த்திருக்கிறது. இயற்கையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அறி வாற்றல் (Naturalistic intelligence), இசை அறிவாற்றல் (Musical intelligence), கணக்கிடும் அறிவாற்றல் (Mathematical-logical intelligence), ஏன் பிறந்தோம், மரணத்துக்குப் பின் என்ன என உள்ளார்ந்த தத்துவத் தேடல்கொண்ட அறிவாற்றல் (Existential intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன் இருக்கும் அறிவாற்றல் (interpersonal intelligence), நடன உடலசைவுகுறித்த அறிவாற்றல் (Body kinesthetic intelligence), மொழி அறிவாற்றல் (linguistic intelligence), உளவியல் அறிவாற்றல் (intrapersonal  intelligence), முப்பரிமாணத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial intelligence) ஆகியவையே அந்த ஒன்பது திறமைகள். இவற்றில் எவை ஒரு குழந்தையிடம் ஒளிந்திருக்கிறது... எந்தப் புலனில் அவனுக்கு /அவளுக்கு ஆளுமை அதிகம் எனக் கண்டறிய பிராய்லர் கோழிகளைப் போலப் பிள்ளை களைக் கையாளும் பள்ளிகளுக்கு நேரம் கிடையாது. அதற்கென மெனக்கெடுவதும் கிடையாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடமை இருக்கிறது.
100 பொருள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிஸக் குழந்தைகள் கண நேரத்தில் அதைச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் பெற்றிருக்கும். பொதுவாக, கூட்டு விளையாட்டில் பரிமளிக்க முடியாத இவர்கள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், முதலான தனி விளையாட்டுகளில் எக்குத்தப்பான திறமையுடன் இருப்பர். அவர்களை உரிய திசையில் முடுக்கிவிட்டால், ஆட்டிஸக் குழந்தைகளில் இருந்தும் ஒரு உசேன் போல்ட்டோ, வான்காவையோ உருவாக்க முடியும்.  
ஆட்டிஸக் குழந்தைகளின் பராமரிப்பில் உணவுப் பழக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ள மைதா மாவில் செய்யும் உணவுகளும், கேசின் புரதம் அதிகம் உள்ள பாலும் அவர்களுக்கு நல்லதல்ல. ஆட்டிஸக் குழந்தைகளுக்கு அந்தப் புரதச் சத்துகள் அமினோ அமிலமாகப் பிரிவதற்கு முன்னரே, அரைகுறை நிலையிலேயே குடலில் உறிஞ்சப்படுவதால், ஆட்டிஸ நோயின் மூளைத் திறனில் பாதிப்பு அதிகம் என்கின்றனர் அறிவியலாளர்கள். குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு உத்தமம். பெஞ்சமின் ஃபென்கோல்ட் என்ற மருத்துவர் எந்த அளவுக்கு, வண்ணமூட்டி ரசாயனங்களும், பிரிசர்வேட்டிவ்களும், ஆட்டிஸத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கி, இப்போது ஃபென்கோல்ட் உணவுமுறை மேலை நாடுகளில் ஆட்டிஸ நோய்க்கான பிரத்யேக உணவாக இருக்கிறதாம். பாரம் பரிய உணவு வகைகளின் சாரம்தான் அது. நேற்றைக்குப் பிறந்து மிரட்டும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைக்கூட விரிவாக வேறு வார்த்தைகளில் பேசும் பழமையான சித்த மருத்துவ நூற்குறிப்புகளில், ஆட்டிஸத்தை ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்லை என்பதை வைத்துப்பார்த்தால், அன்றைய ரசாயனம் இல்லா வாழ்க்கை, குளூட்டன் இல்லா பாரம்பரிய உணவு, பதற்றம்இல்லா வாழ்வியல் ஆகியவையே இந்த நோயைத் தரவில்லை என்பது புரிகிறது.
'கர்ப்பமா இருக்கும்போது என் பேச்சைக் கேக்காம, அங்கே இங்கே அலைஞ்சல்ல! நான் சொல்லச் சொல்லக் கேக்காமக் கண்டதையும் சாப்பிட்டல்ல? அதான் குழந்தைக்கு இப்படி ஆயிருச்சு!’ என ஆட்டிஸக் குழந்தையின் தாயை விஷ வார்த்தைகளால் குத்தும் ஆணாதிக்கமும், 'சீட் வேணும்னு சொல்லி கலெக்டர், கமிஷனர்னு யார் யாரையோ சிபாரிசுக்குக் கூட்டிட்டு வந்தீங்க. இப்ப பிள்ளை படிக்கிற லட்சணத்தைப் பாருங்க. மார்க் மட்டும் குறைஞ்சுதுனு வெச்சுக்கங்க... அடுத்த வாரமே டி.சி-தர்றேன். வாங்கிட்டுப் போயிட்டே இருங்க!’ எனப் பள்ளிகள் தரும் அழுத்தமும், கவனக்குறை நோய் மற்றும் ஆட்டிஸம் குழந்தையின் பெற்றோர் எதிர்கொள்ளும் அதிகபட்ச சவால்கள்.
காற்றிலும், மண்ணிலும், நீரிலும் கழிக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத கசிவுகளைத் தினம் தினம் சுவாசித்தும் நேசித்தும் வாழும் நமக்கு ஆட்டிஸம் சொல்லும் பாடங்கள் நிறைய. நம் சுவாசத்தில் தினம் உள் செல்லும் இந்தத் துணுக்குகள் நாளைய நம் சந்ததிக்கு இப்படியான பல விபரீதங்களை விட்டுச் செல்லும்  என்பதுதான் epigenetics எனும் வளர்ந்துவரும் மருத்துவ அறிவியல் துறை சொல்லும் உண்மை.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் மட்டுமே இந்தப் புவியையும் நம்மையும் இவற்றிலிருந்து பாதுகாக்கும்!
- பரிமாறுவேன்...

Wednesday 12 June 2013

ஆறாம் திணை - 39

'Think-eat- save’- இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் உலக சுற்றுச்சூழல் தினக் கொள்கை முழக்கம் இது. 'சாப்பாட்டை எக்குத்தப்பா வீணாக்குறீங்க... சாப்பிடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க; அப்புறம் நல்லாச் சாப்பிடுங்க; நிறைய சேமிங்க; உலகின் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பசியோடு காத்திருக்கிறார்கள்’ என ஐக்கிய நாட்டு அறிக்கை ஒருபக்கம் திண்டாட்ட நிலையைச் சொல்கிறது. 'அட, என்னப்பா யோசனை? நல்லாச் சாப்பிடு... குதூகலமாக் குடி... கொஞ் சம் கலாட்டா பண்ணு கண்ணு!’ என்று தினம் கொண்டாடச் சொல் லும் விளம்பரங்கள் மறுபுறம். இன்றைய எக்ஸ்பிரஸ் யுகம், உணவை யும் ஒரு போகப்பொருளாக மாற்றி வருகிறது. அதன் பக்கவிளைவாகத் தினமும் உலகில் உற்பத்தி செய்யப் படும் உணவில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பல வகையில் வீணாக்கப்படுகிறது.
கதிர் அறுப்பில் துவங்கி, கரண்டியில் இருந்து நம் இலையில் விழுவதற்குள், ஆண்டு ஒன்றுக்கு 1.3 பில்லியன் டன் உணவை நாம் இழக்கிறோம். நம் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை விதித்து, 'அதைச் செய்... இதைப் பண்ணாதே’ என்று மிகவும் 'அக்கறை’யோடு அதட்டும் பெரிய அண்ணன்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான், உலகில் உணவை வீணாக்குவதில் முதலிடம் வகிக்கின்றன. அந்த நாடுகளில் நபர் ஒருவர் வருடம் ஒன்றுக்குத் தோராயமாக 95,115 கிலோ உணவை வீணாக்கு கிறார். நம்மைப் போன்ற வளரும் நாடுகளும் ஆப்பிரிக்கா போன்ற ஏழை தேசங்களும், தோராயமாக 611 கிலோ உணவினை வீணாக்குகிறோம். எப்படி?
பிரிட்டனில் செயல்படும் அமெரிக்காவைத் தலைமையகமாகக்கொண்ட உலகின் முன்ன ணிப் பலசரக்கு அங்காடி அஸ்டா (Asda). சகலமும் தங்கள் கடையில் 24x7 கிடைக்கும் என்ற கொள்கையோடு செயல்படும் இந்த நிறுவனம், காய்கறிகளைக் கொள்முதல் செய்யும் போது, 'இந்த கேரட் கொஞ்சம் கோணலா இருக்கு. நீள அகலம் எங்கள் தரத்துக்கு மேட்ச் ஆகலை. பளிச் கலர்லஇல்லையே’ என்று ஏகமாக கேரட்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். அப்படி அவர்கள் ரிஜெக்ட் செய்யும் கேரட் களின் அளவு, மொத்த உற்பத்தியில் கிட்டத் தட்ட 25-30 சதவிகிதமாம். ஒதுக்கித்தள்ளு வதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'எங்க அஸ்டா கேரட்டை பீலரில் (தோல் சீவும் இயந்திரம்) வைத்து இழுத்தால், ஒரே இழுப்பில் எந்தச் சிக்கலும் இல்லாமல் தோல் உரிய வேண்டும். அதற்கு உதவாத விதமாக கேரட் வளைந்திருந்தால், அது எங்களுக்குத் தேவை யில்லை’ என்பது அவர்கள் சொல்லும் காரணம். 'முருங்கைக்காய் சாம்பார்தான். ஆனா, காய்கறிக் கூடைல ரெண்டே ரெண்டு கேரட் மட்டும் மிச்சமாக் கெடந்துச்சு. அதான், அதையும் வெட்டிப் போட்டேன். இப்ப அதனால முருங்கைக்காய் என்ன கோச்சுக்கிச்சா?’ என நம் அம்மா, பாட்டிகள் சாப்பிடும் வேளைகளில் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. முந்தைய அக்கறை கரன்ஸி... பிந்தைய அக்கறை... கரிசனம்!
  ஃப்ரெஞ்ச் ஃப்ரை நம்மவர்களுக்கு மிகவும் பழக்கமான உணவாகிவிட்டது. (உடலைக் குண்டாக்கி, கொழுப்பைக் குடித்தனம்வைக்கும் பன்னாட்டு உணவு) அதை அழகாகப் பொரித்துத் தர, நீள்உருளை வடிவத்தில் பிறக்காத கிழங்குகளை எல்லாம் தூர எறியும்நிறு வனங்கள் ஏராளம். அப்படி எறியப் படும் உருளைகள் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 சதவிகிதமாம். இப்படி விளையும் காய்கனிகளில் அழகு பார்த்து, Supply-Chain Regulations எனும் காட்டுமிராண்டித்தனமானவணிக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப விளையும் பொருட்களை ஏகத்துக்கும் வீணாக்குகிறார்கள். இப்படி வளர்ந்த நாடுகளின் வணிக நிறுவனங்கள் பாழாக்கும் உணவுக்கான காரணங்களைப்பட்டிய லிட்டுக்கொண்டே போகலாம். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஆப்பிரிக்க நாடுகள் உற்பத்திசெய்யும் மொத்த அளவு 234 மில்லியன் டன். கிட்டத்தட்டஅமெரிக் காவும் ஐரோப்பாவும் மட்டுமே சாப்பிடும்போது வீணாக் கும் உணவின் அளவு (222 மில்லியன் டன்) இது.  
நம்மவர்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை. 'வீட்ல மொதக் கல்யாணம். நம்ம சத்தைக் காட்ட வேணாமா?’ எனச் சொல்லி, இலையில் ஒரு இஞ்ச்கூட இடம் விடாமல், நாலு இனிப்பு, அஞ்சு காரம், வடநாட்டு, தென்னாட்டு, வெளிநாட்டுச் சாப்பாடு என 25 வகைகளைச் சாப்பிடு வதற்கு முன்னரே இலையில் போட்டு நிரப்பி, 'ஒரு இலைக்கு 450 ரூபா கொடுத்தோம்ல... சும்மாவா?’ என மார்தட்டி விருந்து உணவுகளை வீணடிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, வளரும் நாடுகளில் உணவுகள் பெரும்பா லும் வீணாவது, உற்பத்திக்குப் பிந்தைய சேமிப்பு, சுத்தம் செய்தல், மதிப்புக்கூட்டல் போன்ற சமயங்களின்போது தானாம். எலிகளாலும் 'சிவப்பு நாடா’ நடைமுறைகளாலும் கிடங்கில் காத்திருக்கும்போது கெட்டழியும் உணவுப் பொருளின் மதிப்பு இங்கு ஏராளம். அங்கே ஆணவத்தால் அழிகிறது. இங்கே அக்கறையின்மையால் அழிகிறது.
சுற்றுச்சூழலைக் காக்க வேண்டுமானால், உணவு வீணா வதைத் தடுக்க வேண்டும். உணவு உற்பத்திக்கு எனத் தண்ணீரும், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் அதிக மகசூல் என பொய்க் காரணம் சொல்லி, ஏராளமான ரசாயனங் களும் இன்னும் ஒரு படி மேலே சென்று, 'நானே கடவுள்’ மமதையில் படைக்கப்படும் மரபணு உணவுகளும், அதை மதிப்புக்கூட்ட, பிடித்த உறையில் பேக் செய்து, பிடித்தஇடத் தில், பிடித்தவருடன் சாப்பிட என அவை பயணிக்கும் தூரமும், அந்தப் பயணத்தில் உமிழப்படும் மக்காத ரசாயன நச்சுக்களும்தான் சுற்றுச்சூழலைப் பெருவாரியாக வதைத்துச் சிதைக்கிறது. பக்க விளைவுகளாக விதவிதமான நோய்களை அள்ளித் தெளிக்கிறது.
வேட்டையாடிப் பெறும் இரையை, புலியும் சிறுத்தையும் வீணாக்குவது இல்லை. ஒவ்வொரு கவளத்தையும் கவர்ந்து வந்து சாப்பிடும் காக்கையும் பூனையும் எப்போதும் உணவை அழிப்பது இல்லை. குருவியும் புறாவும் தான் கொத்தும் தானியத்தின் அழகைப் பார்ப்பது இல்லை. ஆனால், மனிதன் மட்டுமே தன் சக பயணிக்குக் கிடைக்காத உணவைச் சகட்டுமேனிக்குப் பாழடித்துவிட்டு நிற்கிறான். தண்ணீரை வீணடிக்காத சிறுதானிய உணவு, மண்ணைப் பாழாக்காத மரபு வேளாண்மை, சூழலைக் கெடுக்காத உள்ளூர் காய்கனி, உடலைப் பாழாக்காத பாரம்பரியப் பக்குவம், அளவாகச் சமைத்து, அன்பாக அதைப் பரிமாறும் அக்கறை, எதையும் வீணாக்காமல் பகிர்ந்துண்ணும் கலாசாரம்... இதை மீண்டும் மீட்டெடுப்பது மட்டுமே பசிப் பிணி போக்கும் பயிற்சி... முயற்சி!
- பரிமாறுவேன்...