Wednesday 26 September 2012

ஆறாம் திணை - 06



டலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.
 இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!
அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.
'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது.  
மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துகளையும் முழுமையாகப் பெற மீனை வறுக்க/பொரிக்க வேண்டாம். வேகவைத்த மீனே சிறந்தது. 'இ.பி.ஏ.’, 'டி.ஹெச்.ஏ.’ (eicosapentaenoic acid, docosahexaenoic acid) எனும் இரண்டு 'ஒமேகா 3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டு ஒமேகா அமிலங்களை நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, பெரிதாக தாவரங்களிலும் இது கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும் இந்த இரண்டு 'ஒமேகா 3’ அமிலங்களையும் கடல் மீன்கள் நமக்குத் தரத் தயாராக வைத்திருக்கும். ஆனால், தற்போது, கடல் நீரில் அணுக் கழிவு நீரை 45 டிகிரி சூட்டில் நிமிடத்துக்கு இரண்டு லட்சம் லிட்டர் கலந்துவிட்டால், அந்தப் பக்கத்து மீன்கள் இந்த 'ஒமேகா 3’ சேர்த்துவைக்குமா; புற்றுநோய்க் காரணிகளோடு வந்து சேருமா; இல்லை செத்து மடிந்துபோகுமா என்று தெரியவில்லை.  
ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ அயிட்டங் கள் பொதுவாக வெகு விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்கு எனக் கொல்லப்படும் விலங்கு அதன் தோல், குடல் முழுமையும் நீக்கப்பட்ட உடன் வெகு விரைவாக அடுப்புக்குப் போய்ச் சேர வேண்டும். அதில் ஏற்படும் தாமதங்கள், நுண்ணுயிரிகளை இறைச்சி யில் பெருக்கம் செய்யத் தொடங்கும். ஆனால், இங்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக் கறி கம்பெனிகளின் குதூகல உணவகங்களில் வரும் கறித் துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம். திண்டுக்கல்லில் வெட்டப்பட்ட விலங்கு இறைச்சி, கேரளத்துக்குப் பயணித்து, அங்கு பிரித்தாளப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, பன்னாட்டுக் கடைகளுக்கு வருவதற்குள் அதற்குள் ஏற்றப்படும் ரசாயனக் கலவைகள் இயற்கைக்கே வெளிச்சம். இது பன்னாட்டுக் கறிப் பக்கோடாக்களுக்கு மட்டும் அல்ல மக்களே... சமைக்க ஏதுவாக, அழகான பேக்கிங்கில் அடைத்துவைக்கப்படும் 'சுத்தமான’ மாமிச அயிட்டங்களுக்கும் பொருந்தும். ஆக, எவ்வளவுக்கு எவ்வளவு ஃப்ரெஷ் ஆக வாங்கி, உங்கள் கைகளால் சுத்தப்படுத்திச் சாப்பிட வேண்டுமோ, அப்படிச் சாப்பிடுங்கள். முக்கியமாக அளவாகச் சாப்பிடுங்கள்!
பரிமாறுவேன்...

கருத்த கறி!
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்ன ஓர் அற்புதமான மருத்துவக் குணமிக்க  குழம்பு இது. நெய்மீன், சாளை, பாறை, வாவல், முள்வாளை போன்ற மீன்கள் இதற்கு ஏற்றவை. முதல் நாள் காலை வாங்கிய மீனை நன்றாகக் கழுவி மஞ்சள் தூள் - உப்பு கரைசலில் ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை சுக்கு, மிளகு, கறிவேப்பிலை, ஓமம், கடுகு, சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றைத் தனியாக வறுத்தெடுத்து அம்மியில் நேகாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதேபோல, கொத்துமல்லி, தேங்காய்த் துருவல், வரமிளகாய் ஆகியவற்றைத் தனியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மண் சட்டியில், இரண்டு கலவையையும் கூட்டி, குழம்புவைத்து, அதில் மீன்களை அடுக்கினாற்போல் பதமாகப் போட்டு, குழம்பு பொங்கும் நேரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்க வேண்டும். ஊட்டச்சத்தோடு, வயிறு உப்பு உபாதைகளையும் அகற்றும் குழம்பு இது. கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் ஏற்றது. சூடு காட்டி, சூடு காட்டி நாலைந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment