Wednesday 9 January 2013

ஆறாம் திணை - 18

மாற்றுச் சிந்தனை பேசுபவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள்; வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்பிற்போக்குவாதிகள் அல்லது நாட்டை வல்லரசாகவிடாமல் தடுக்கும் அந்நியச் சக்திகளின் கைக்கூலிகள் என்ற பொய்ப் பிரசாரம் பகிரங்கமாகச் செய்யப்படும் காலம் இது. சரி... மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏன் புதுப்புது வரவுகளை, நவீனத்துவத்தை எதிர்க்கிறார்கள்? மாற்றுச் சிந்தனையாளர்கள் எதிர்ப் பது அறிவியலை அல்ல; அறிவியலும் தொழில்நுட்ப மும் அறத்தையும் மக்கள் நலத்தையும் கொன்று வணிகத்துக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கும் அடிவருடிகளாக மாறுவதைத்தான் எதிர்க்கிறார்கள்.
 இன்றைக்கு உலகம் அனுபவிக்கும் சகல சௌகரி யங்களுக்கும் மூலகாரணிகள் என்று நியூட்டனையும், டார்வினையும், கலீலியோவையும், ஐன்ஸ்டீனையும் நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவர்களுடைய ஆரம்ப காலங்களில் அவர்கள் எல்லோருமே கலகக் காரர்களாகத்தான் பார்க்கப்பட்டார்கள் தெரியுமா? அன்றைக்கு வரை உலகம், 'இதுதான் உண்மையான விஞ்ஞானம்’ என்று எதை நம்பிக்கொண்டு இருந்ததோ அதை உடைத்து எறிந்தவர்களை, மாற்றுச் சிந்தனை யாளர்கள் என்று பார்க்கப்பட்டவர்களைத்தான் இன்றைக்கு உலகம் கொண்டாடுகிறது.
அடிப்படையில், முழுக்க முழுக்க இயற்கையைப் புரிந்துகொள்ளவும் அதன் மூலம் மனித நல்வாழ்வுக்கு வழி தேடவும் பிறந்தவைதான் அறிவியலும் தொழில்நுட்பமும். ஆனால் இன்றைய அறிவியல், மொத்தமாக வணிக மதத்துக்குள் போய்ச் சிக்கிக்கொண்டதுதான் பிரச்னை. இந்த வணிக மதத்துக்குப் பணம்தான் கடவுள். விஞ்ஞானி அதன் பூசாரி. பன்னாட்டு நிறுவனத்தினரும் அரசாங்கங்களும் அந்த வணிக மதக் கோயிலின் முதலாளிகள். ஐன்ஸ்டீனோ, கலீலியோவோ, டார்வினோ அந்த மதத்தில் இருந்து இந்த வணிக மதத்தில் தம் படைப்புகள் சிக்கும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அணுப் பிளவுக்கு அடித்தளம் அமைத்த ஐன்ஸ்டீனுக்கு, அதன் ஆதிக்க நீட்சி ஹிரோஷிமா, நாகசாகியை அழித்த அணுகுண்டுகளாக மாறும் எனத் தெரியாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் புல்பூண்டு முளைக்காத ஃபுகுஷிமாவாகவோ செர்னோபில்லாகவோ ஆகும் எனத் தெரியாது. பரிணாம வளர்ச்சியின் மீது வெளிச்சம் பாய்ச்சிய டார்வி  னுக்கு, அதன் வணிக நீட்சி பி.டி. கத்திரிக்காயாகவும் பி.டி. சோளமாகவும் உருவெடுக்கும் எனத் தெரியாது. ஆம் நண்பர் களே... உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால், அதுதான் உண்மை.
இன்றைய பெரும்பாலான ஆய்வுகள், மனித நலம் நாடி நடத்தப்படுவது இல்லை. ஆய்வுக்கு வரும் பணம், ஆய்வாளருக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பயணங்கள், ஆய்வாளருக்குக் கிட்டும் அறிவுசார் சொத்து உரிமை, அதில் இருந்து ஆயுள் முழுக்கக் கிடைக்கும் ராயல்ட்டி லாபம், இன்னும் சிலருக்கு, மிக அதிகபட்ச உயர் பதவிகள்.
கிட்டத்தட்ட 750-க்கும் மேற்பட்ட கேன்ச ருக்கு உதவக்கூடும் என நம்பப்படும் மருந்துகளின் காப்புரிமைகளை மொத்தமாக ஒரே ஒரு பன்னாட்டு நிறுவனம் தனது சட்டைப் பைக்குள் வைத்திருக்கிறது. இப்போதைய வணிகத் திட்டத்தில், இந்த 'சப்ஜெக்ட்களுக்கு’ 20 பில்லியன் டாலர் லாபம் கொட்டித் தரும் மூன்று மூலக்கூறுகளை மட்டும் விற்பனை செய்தால் போதும் என்று செய லாற்றும் அந்த நிறுவனத்துக்கு, அடையாறு கேன்சர் மருத்துவமனையில், 'இந்தக் கதிர்வீச்சு சிகிச்சையிலாவது நிச்சயம் உயிர் பிழைத்துவிடுவோமா?’ என்ற நம்பிக்கையில் காத்து நிற்கும் சாமானியனைப் பற்றிய அக்கறை துளியும் இருக் காது.
இந்த உலகில் ஒவ்வொருவர் உண்ணும் தாவரப் பொருளின் விதையும் தன் நிறுவனத்தில் மட்டுமே தயாரித்ததாக இருக்க வேண்டும் என மரபணு மாற்றிய உணவுத் தாவரங்களின் ஒரே கடவுளாக இருக்கும் நிறுவனத்துக்கு, 50 சென்ட் நிலத்தில், தாலிக் கொடியை அடகுவைத்து வானம் பார்த்து, வாய்க்கால் பார்த்துப் பயிர் செய்யும் விவசாயியின் வலியும் துயரமும் புரியாது.
பனை ஓலையில் இருந்து, காகிதத்தில் எழுதுவதை எதிர்ப்பது மடமை. காகிதத்தினால் அழியும் காடுகளைப் பார்த்து, கணினி உபயோகத்துக்கு மாறுவதைக் குறை சொல்வது முட்டாள்தனம். ஆனால், ரோஜாப்பூ சேலைக்குப் பொருத்தமாக சிவப்பு நிற செல்போன், கறுப்பு ஜீன்ஸுக்குப் பொருத்தமாக மஞ்சள் நிற லேப்டாப் என ஹேர்பின், ரிப்பன் போல வருடத்துக்கு ஒரு மின்சாதனப் பொருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவு களைக் கண்டிப்பாக எதிர்க்கத்தான் வேண்டியிருக்கிறது.
அந்தக் கழிவுகள் அனைத்தும் மண்ணுக்குத்தான் செல்கிறது. கொஞ்சநஞ்சம் அல்ல... கிட்டத்தட்ட 8,000 டன். 'பயன்படுத்து; தூர எறி’ எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அமெரிக்கா மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிவைப் பூமியில் கொட்டுகிறது. உலகத்தின் குப்பைக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும் சீனாவும்தான். ஈயம், செம்பு, பாதரசம், பல்லாடியம், கோபால்ட் கலந்து கொட்டப்படும் இந்தப் பேசாத செல்போன் கழிவுகள் பூமித் தாய்க்குச் செரிக்காது தோழா!
விதை மட்டும் அல்ல, கணினி துவங்கி சலவை சோப் வரை எந்தப் பொருளையும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று சொல்லியோ, சந்தைக்குப் புதிது என்றோ விற்பனைக்கு வரும் எதையும் உபயோகிக்கும்  முன்னர் ஒரு முறைக்கு மூன்று முறை சிந்தியுங்கள் நண்பர் களே!
சில புதுசுகளைக் காட்டிலும் பல பழசுகள் பாதுகாப்பானவை. அறிவியல் என்பது புதுமையில் மட்டும் இல்லை... பழமையிலும் உறைந்து இருக்கிறது!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment