Wednesday 5 December 2012

ஆறாம் திணை - 15

பிள்ளை, பிறந்ததும் அழவில்லை; சில மாதம் கழிந்தும் தவழவில்லை. மழலை மொழி பேசவில்லை. வயதுக்கு உரிய மன வளர்ச்சி இல்லை என்றால், நமக்கு மனம் எப்படி வலிக்கும்? கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கேரளத்தின் ஒரு பகுதியான வயநாடு ஊரில் மட்டும் மன வளர்ச்சியற்று இருக்கின்றனர். வழக்கமாகச் சந்தேகிப்பதுபோல, நெருங்கிய உறவுக்குள் திருமணமோ, மூளைக்காய்ச்சலோ இதற்குக் காரணமாக இல்லை. அங்கே ஏலக்காய்க்கும் முந்திரிக்குமான விவசாயத்துக்குத் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்’ பூச்சிக்கொல்லிதான் இதற்குக் காரணம்.
 பூச்சிக்கொல்லியின் கதை இப்படி என்றால், உரத்தின் கதை வேறு ரகம். சமீபத்தில் பஞ்சாப் அதிர்ந்தது. காரணம்? 11 கிராமங்களில் ஏராளமாகி இருக்கும் புற்றுநோய் பாதிப்புகள். நிலத்தடி நீரில் உலக சுகாதார மையம் நிர்ணயித்த அளவைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாகக் கலந்திருக்கும் யுரேனியமே இதற்குக் காரணம் என்று தெரியவந்தபோது, 'பஞ்சாப்பில் எப்படியப்பா தண்ணீரில் யுரேனியத் துணுக்குகள்?’ என்று பாபா அணு சக்திக் கழகம் ஆய்வுக்கு வந்தது. பாசுமதி பயிருக்காக அங்கு நிலத்தில் ஏராளமாகக் கொட்டப்படும் உரங்களே மண்ணுக்கு அடியில் உள்ள கிரானைட் கற்களுடன் சேர்ந்து வளர்சிதை மாற்றம் அடைந்து, தண்ணீரில் யுரேனியம் கசிவுக்கு வழிவகுத்து இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.
பெருகிவரும் தொற்றாநோய்க் கூட்டத்துக்குச் சிதைவடைந்த வாழ்வியல் மட்டும் காரணம் இல்லை. இந்த மண்ணையும் நம் அன்றாட உணவு தரும் தாவரத்தையும் ரசாயன உரங்களால் விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளால் கெடுத்துவருவதும் மிக முக்கியக் காரணம்.
'அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு’ என மண்ணைக் கெடுக்காது பயிர் செய்து, தாவரத்தின் அடிக் குருத்தை மண்ணுக்கும் அதன் தண்டுப் பகுதியை மாட்டுக்குத் தீவனமாகவும் அதன் நுனியில் இருக்கும் கதிரை மட்டும் தன் உணவுக்கும் பயன்படுத்தியவர்கள் நம் விவசாயிகள். வேப்பம் புண்ணாக்கு, பசுந்தாள் உரம், மாட்டுச்சாணம் எனப் பயிருக்கு உணவிட்டனர் அன்று. நம் நாட்டில் மட்டும் அல்ல; எல்லா நாட்டிலுமே விவசாயம் இயற்கையாகத்தான் நடந்தது. பின்னர் எப்படித் திடீரென்று ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் உள்ளே புகுந்தன? ''இரண்டாம் உலகப் போர் திடீரென நின்றுபோனதில், திகைத்துப்போன ரசாயனத் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்து என்ன செய்வது என வேகமாகத் திட்டமிட்டதில் விளைந்ததுதான் இந்த உரம் என்ற பெயரிலான ரசாயன வணிகம்'' என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
இந்திய அரசு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது. யாருக்கு? விவசாயிகளுக்கு. விவசாயிகள் மூலம் போகும் அந்தப் பணம் எங்கே போகிறது? நூற்றுச் சொச்சம் உர நிறுவனங்களுக்கு. செயற்கை விவசா யத்தின் பின்னுள்ள சங்கதி இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இன்னமும் ஏன் நம் உயிரைப் பணயம்வைத்து யாரோ சம்பாதிக்க வழிவகுக்கும் நவீன விவசாயத்தின் வாலைப் பிடித்து அலைய வேண்டும்? மாறக் கூடாதா?
இந்த விஷயத்தில் விவசாயிகள் மாற்றத்தின் முதல் படியில் காலடி எடுத்துவைத்துவிட்டார்கள். அடுத்த படி நாம் எடுத்துவைக்க வேண்டியது. எப்படி?
முதல் விஷயம்... மேக்கப் போட்ட புஷ்டிவாலாக்கள் மாதிரி காய்கறிகளை எதிர்பார்க்காதீர்கள். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் பளபளப்பாக இராது; புஷ்டியாகத் தெரியாது. ஆனால், சத்து மிக்க சுள்ளான்கள் அவை.
இரண்டாவது விஷயம்... சற்றே அவை விலை கூடுதலாகத்தான் இருக்கும். காரணம், இயற்கை விவசாயம் கொஞ்சம் கூடுதல் செலவாகும். 'இயற்கைக் காய்கறி என்றால், பலரும் வெறும் மாட்டு மூத்திரம், சாணி, வேப்பம் தழைதானே... அதுக்கெதுக்குக் காசு அதிகமாகப் போகுது?’ எனத் தவறாக நினைக்கிறார்கள். உரத்தைத் தவிர, மற்ற அனைத்துக்குமான செலவு விவசாயிக்கு எப்போதும்போல் அதிகம்தான். மானியத்தில் பெறும் ரசாயன உரம் ஒரு சட்டி தேவைப்படும் இடத்துக்கு, இயற்கை உரம் என்றால், ஒரு டிராக்டர் அளவு தேவைப்படும். வண்டிக் கூலி, ஆள் கூலி எல்லாம் இருக்கிறது. இன்னொரு விஷயம், தினம் சிக்கனமாக மலிவு விலையில் ரசாயன உணவை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, டாக்டர் ஃபீஸிலும் மருந் துச் செலவிலும் பின்னாளில் சொத்தை அடமானம்வைப்பது எந்த வகையில் புத்தி சாலித்தனம்?
மூன்றாவது விஷயம்... நீங்களே பயிர் செய்யலாம். 60 சதுர அடி நிலமோ, பால்கனியோ, மொட்டை மாடியோ இருந்தால் நீங்களும் விவசாயிதான். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, தக்காளி, கத்தரி, வெண்டை, கொத்துமல்லி, பச்சை மிளகாய் என வீட்டுத்தொட்டியில் உங்க ளால் விளைவிக்கக் கூடிய காய்கறிப் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். பூச்சி புழு வந்தால் எனக் கேட்போருக்கு, இஞ்சி, பூண்டு அரைத்துத் தெளியுங்கள், அதுவே போதுமானது. உரம்? பயிர் ஊக்கம் பெற்று சத்தான காய்கறி தர, மண் வளம் பெற, மோர் கரைத்து ஊற்றுங்கள்; அதில் உள்ள லாக்டோபாசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கூட்டம், ஒரு சூப்பர் இயற்கை உரம் என்கின்றன ஆய்வு முடிவுகள். அப்புறம் என்ன, களத்தில் இறங்க வேண்டியதுதானே?  
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment